அகிம்சை போராட்டம் அடக்கி ஒடுக்கப்பட்ட போது அது ஆயுத போராட்டமாக மாறியது. அந்த போராட்டத்திற்கு இளைஞர் யுவதிகளும் ஈர்க்கப்பட்டார்கள். மலையக இளைஞர், யுவதிகள் மத்தியிலும் அந்த போராட்டம் செல்வாக்கு செலுத்தியது. இதற்கு அமரர்.சந்திரசேகரன் குறிப்பிடக் கூடியளவு பங்களிப்பு செய்திருக்கின்றார் என்பதை மறக்க முடியாது. எவன் ஒருவன் மன பலத்தை கொண்டிருக்கின்றானோ எவன் ஒருவன் தனது இலட்சியத்திற்கு இறுதி வரை போராடுகிறானோ அவன் வெற்றி பெறுவான் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர்.பெரியசாமி சந்திரசேகரனின் 6 ஆவது சிரார்த்த தினம் நேற்று ஹட்டன் ஸ்ரீ கிருஷ்ணபவன் மண்டபத்தில் நடைபெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ், மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணி தலைவருமான ஆர்.ராஜாராம், அட்டன் நகர சபையின் முன்னாள் தலைவர் நந்தகுமார் உட்பட பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா உரையாற்றுகையில்..
எவன் ஒருவன் மன பலத்தை கொண்டிருக்கின்றோனோ எவன் ஒருவன் தனது இலட்சியத்திற்கு இறுதி வரை போராடுகின்றானோ அவனே வெற்றி பெறுவான். ஒரு போராட்டத்தை தாங்கி கொள்பவன் தான் இறுதியில் வெற்றி பெறுவான். இதனை மலையக மக்களும் வடகிழக்கு மக்களும் நன்கு அறிவார்கள்.
இராஜதந்திர ரீதியாக நாம் யுத்தத்தில் வெற்றி பெறாமையின் காரணமாக அதன் நினைவுகளை மீட்டுக் கொண்டிருக்கின்றோம். சந்திரசேகரன் பாராளுமன்றத்திலும், வெளியிலும் எங்களுடன் இணைந்து செயற்பட்டிருக்கின்றார்.
அவர் ஒருபோதும் மலையக மக்கள் வடகிழக்கு மக்கள் என்று பிரித்துப் பார்த்ததில்லை. எல்லோரும் தமிழ் அன்னையின் பிள்ளைகளாகவே பார்த்தார். அவருடைய நினைவை நன்றிக்குரிய தலைவர்களாலும் தொண்டர்களாலும் நினைவு கூரும் இந்த வேளையில் நானும் அதில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
நாங்கள் என்ன பாவம் செய்தோம். இன்னும் இந்த தோட்டங்களில் அடிமைகளாக இருக்கின்றோம் என இன்று நான் மலையக மக்களை சந்தித்த பொழுது அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதனை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். இதற்கு விடை காணப்பட வேண்டும். அதற்கு நாங்களும் உறுதுணையாக இருப்போம்.
இந்த நாட்டில் ஆண்டாண்டு காலமாக உழைத்த இந்த மக்களுக்கு அவர்களுக்கான காணியை வழங்க ஏன் இன்று தயக்கம் காட்டப்படுகிறது. நிலம் இருந்தால் தான் அவர்களுக்கு வீடுகளை அமைத்துக்கொள்ள முடியும். இன்றும் நாம் போராடிக் கொண்டு தான் இருக்கின்றோம்.
பல்கலைக்கழகத்திற்கு செல்கின்ற எமது மாணவர்களில் அதிகமானவர்கள் கலைத்துறையை படிக்கின்றார்கள். விஞ்ஞானம், தொழில்நுட்பம், வர்த்தகத்துறை இவற்றை அவர்கள் விரும்பிக்கற்க அவர்கள் முன்வர வேண்டும். அதற்கான வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும். அல்லது தையல்துறையில் புதிய தொழில்நுட்பங்களை கற்க வேண்டும். நாங்கள் போரின் காரணமாக கல்வியின் உச்சத்தையும், தொழில்நுட்பத்தையும் கற்க முடியாத நிலை இருந்தது. இப்போது அது படிப்படியாக மாற்றம் அடைந்து வருகின்றது. இந்த நிலை மலையகத்திலும் இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன். எனவே இங்கு மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
8ஆம் வகுப்பிற்கும் 10 வகுப்பிற்கும் இடையில் மாணவர்கள் அவர்களுக்கான துறைகளை தெரிவு செய்து கற்பதற்கான சூழ்நிலை ஏற்பட வேண்டும். அதனை கல்வி இராஜாங்க அமைச்சர் தற்பொழுது படிப்படியாக செய்து வருவதை நாங்கள் அறிவோம். இன்று கல்வித் துறை முன்னேற்றம் அடைவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அதனை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று மலையக மக்களும் வடகிழக்கு மக்களும் வேறுபட்டு இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
அமைதியான முறையில் ஜனநாயக வழியில் நீங்கள் உங்களுடைய நிலங்களுக்காக போராட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM