கொழும்பு மத்தி வீதியோர வியாபாரிகளின் பொருளாதார நெருக்கடியும் அவலமும் 

Published By: Nanthini

02 Jun, 2023 | 09:15 PM
image

ஹஸ்பர் ஏ ஹலீம்

 

கொழும்பில் மிகவும் வண்ணமயமான, துடிப்பான காட்சிகளில் ஒன்று புறக்கோட்டை சந்தைப் பகுதியின் நிரம்பிய தெருக்கள் ஆகும். அங்குள்ள  வீதியோரங்களில் பழங்கள், பொம்மைகள், ஆடைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை விற்கும் கடைகள் அதிகமாக உள்ளன. இரவும் பகலும் பொருட்களை அங்கும் இங்கும் கொண்டு செல்கிறார்கள்.

வாடிக்கையாளர்களால் நிரம்பியிருக்கும் இந்த நெரிசலான தெருக்கள், பார்வையாளர்களுக்கு ஒரு பரபரப்பான வர்த்தகத்தின் தோற்றத்தை அளிக்கிறது.

உண்மையில், நிலவும் பொருளாதார நெருக்கடியாலும், அதிகாரிகளிடமிருந்து வரும் துன்புறுத்தல்கள் குறித்தும் தொடர்ந்து கவலையுடன் தாங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சிரமங்களை எதிர்கொள்வதாக தெருவோர வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

இதன் உண்மை நிலையை அறிய கொழும்பின் வீதியோர வியாபாரிகளுடன் ஒரு நாளினை செலவிட்டோம்.

"கடந்த காலங்களை போலன்றி,  இப்போதைக்கு பெரும் கஷ்டத்தில் வியாபாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சிறிய பூக்கடையை வைத்தே காலத்தை ஓட்ட வேண்டியுள்ளது. இப்போதைய உழைப்பு போதாது. கூலி வீட்டில், மூன்று பாடசாலை செல்லும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு, கணவனை இழந்த நிலையில் வாழ்ந்து வருகிறேன். 

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகமாகிவிட்டது. கடன் சுமை அழுத்துகிறது. நகைகள் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மின்சார, நீர்க் கட்டணங்களும் உயர்ந்துள்ளன. இதுபோன்ற விடயங்கள் எம்மை வாட்டி வதைக்கிறது. 

இந்நிலையில், ஒரு பூ மாலையை 200 ரூபாய்க்கு விற்கிறேன். 150 ரூபாய் என்று சொன்னாலும் யாரும் வாங்குவதில்லை" என கொழும்பு மத்திய பகுதியில் பூக்கடை வியாபாரத்தில் ஈடுபடும் பெண் தலைமைத்துவ குடும்பத்தை பராமரித்துவரும் சர்வேஸ்வரி தெரிவித்தார்.

"இந்த பூக்கடையில் உள்ள மாலைகளை பேருந்தில் ஏறி இறங்கி விற்று, அதில் வரும் வருமானத்தை கொண்டே வீட்டில் சமைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும். ஆனால், இப்போது வியாபாரம் குறைந்துவிட்டது. சமையலுக்கான பொருட்களை வாங்குமளவுக்கு கூட வருமானம் போதவில்லை" என சிறிய பூக்கடையொன்றை வைத்து வியாபாரம் செய்துவரும் கிருஷ்ணா என்றொரு வயோதிபர் தெரிவித்தார். 

"இந்த வெய்யிலிலும் உழைத்தேயாக வேண்டிய சூழ்நிலையில் நான் இருக்கிறேன். வியாபாரம் குறைந்துவிட்டது. இதனால் மிகுந்த கவலையடைகிறேன். கடும் சிரமங்களோடு தான் வாழ்வாதாரத்தை பெற்று, குடும்பத்தை கவனித்து வருகிறேன். எனக்கு இரண்டு பிள்ளைகள். எனது மனைவி வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்கிறார். கடன் வாங்கியே இந்த பழக்கடை வியாபாரத்தை செய்து வருகிறேன். ஆனாலும், நஷ்டமே ஏற்பட்டுள்ளது" என வீதியோரமாக அப்பிள், ஒரெஞ்ச் போன்ற பழங்களை விற்கும் பழக்கடை வியாபாரியான இதயராஜா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

அவரிடம் வரவு - செலவு, இலாபம் பற்றிய விபரத்தை கேட்டறிய முற்பட்டபோது, அவர் கூற மறுத்துவிட்டார். 

"தற்போதைய சூழலில் பொருட்களின் விலை  அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு 1500 ரூபாய் வருமானம் வருகிறது. எனினும், குடும்பத்தில் 5 பேரின் வயிற்றுப்பசியை ஆற்ற இந்த வருமானம் போதாமல் உள்ளது. விரும்பிய பொருட்களை மட்டுமன்றி, அத்தியாவசிய பொருட்களையும் வாங்க முடியாத நிலைக்கு மத்தியில், கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் வியாபாரத்தை நடத்திச் செல்கிறோம்" என சிறு விளையாட்டுப் பொருட்களை செய்து விற்கும் ரகுமான் தனது வியாபாரம் மற்றும் பொருளாதார  நிலை பற்றி தெரிவித்தார். 

கொழும்பு நகர சந்தை நிலவரம் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி கோ.அமிர்தலிங்கத்திடம் வினவியபோது, 

"பணவீக்கம் 73 வீதத்திலிருந்து 53 வீதமாக குறைவடைந்துள்ள போதும், பொருட்களின் விலை இன்னும் அதிகமாகவே உள்ளது. தற்போது கொள்வனவு வீழ்ச்சி கண்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு நீங்கினாலும், மக்களின் வருமானம் அதிகரிக்கப்படவில்லை. 

2019இல் வறுமை ஏற்பட்டிருந்த நிலையில் மக்களுடைய வாழ்வாதாரத்தில் அது திருப்திகரமாக அமையவில்லை. தற்போது முறைசார் துறைகளாக அரச, தனியார் துறை காணப்பட்டாலும், முறை சாரா தொழில்துறைகளில் தங்களுக்கான தொழில்களை அமைத்துக்கொண்டு தமது வாழ்வாதாரத்தை கொண்டுசெல்லும் மக்களது வாழ்க்கையில் இன்னும் விடிவு கிட்டவில்லை. 

புத்தாண்டில் மக்களின் பொருட்கொள்வனவு வெகுவாக குறைந்திருந்தது. கொழும்பு நகர்ப் பகுதியானது வர்த்தகத் தளமாகவே காணப்படுகிறது. இங்கு விவசாயமோ வேறு வகையான நிலைமைகளோ இல்லை. 

இங்கு நிர்மாணத்துறை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், பொருளாதார ரீதியில் சில துறைகள் வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றன. தொழில்வாய்ப்புகளில் உள்ள சிக்கல்களால் மக்களது வருமானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை. இதனால் வருமானம் ஈட்டுவதிலும் பிரச்சினைகள் உள்ளன. 

எப்படித்தான் தங்களது வாழ்வாதாரத்தை முன்னேற்ற நினைத்தாலும், தொடர்ந்தும் இவ்வாறான வீதியோர வர்த்தக முறை மூலமே இலாபமீட்ட முடியும். இதனை நிரந்தரமான தொழிலாக கருதினாலும், கொழும்பு புறக்கோட்டை பகுதியின் 1ஆம், 2ஆம் குறுக்குத் தெரு மற்றும் அதனை அண்டிய பகுதிகள் வீதியோர வியாபாரத்தளமாகவும் நடைபாதை வியாபார நிலையமாகவுமே காட்சியளிக்கிறது. 

இந்த வர்த்தக நிலையங்கள் மாலை வேளைகளில் சுமார் 7 மணிக்குப் பின்னர் மூடப்படுவதனை அவதானிக்க முடிகிறது. 

கடந்த தமிழ் - சிங்கள புத்தாண்டு மற்றும் நோன்பு பெருநாள் காலங்களில் சந்தை களை கட்டியபோதும், பொருட்கொள்வனவில் ஈடுபட மக்களிடத்தில் பணம் இருக்கவில்லை. மக்களிடம் பணம் இருந்தால்தான், தாம் விரும்பிய பொருட்களை அவர்கள் கொள்வனவு செய்வார்கள் என்பதை நன்கறிய முடிகிறது. 

தற்போதும் சிறிய அளவிலான பொருள் விற்பனையே இடம்பெற்று வருகிறது. பழ வகைகள், விளையாட்டுப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், உற்பத்திப் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் இவ்வீதியோர பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், கொழும்பு மத்திய பகுதியானது வர்த்தக ரீதியான தளத்தை கொண்ட ஒரு பகுதியாக அமைந்துள்ளது. 

இத்தகைய சூழலில் பழ அச்சாறு வியாபாரியான இம்தியாஸ் தெரிவிக்கையில், 

"மக்களிடம் பணம் இல்லை. பொருட்களின் விலைகளும் அதிகமாக உள்ளது. மக்களிடம் காசு இருந்தால்தான் அவர்களும் எங்களிடம் பொருட்களை வாங்குவார்கள். இப்போது எல்லோருக்கும் கஷ்டம். வியாபாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது. சகல பொருட்களும் அதிகமான விலைகளில் விற்கப்படுகின்றன. 

இவற்றுக்கு மத்தியில் எனது வியாபாரத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது இயலாத காரியமாக உள்ளது. அன்றாடம் திருப்தியான வருமானமொன்றை பெறுவதற்கான வழிகளும் மிகக் குறைவு என்பதால் இருப்பதைக் கொண்டு ஓரளவு குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்கிறோம்.

வீதியோரத்தில் வியாபாரம் செய்வது என்பது நிரந்தரமான ஒன்றல்ல. சிலவேளைகளில் வீதியில் குறிப்பிட்ட சில இடங்களில் வியாபாரம் செய்யவேண்டாம் என பொலிஸார் தடை விதிக்கின்றனர். இவ்வாறான சூழலில் வியாபாரத்தை நிரந்தரமாக கொண்டுசெல்வதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன" என அச்சாறு வியாபாரி தெரிவித்தார்.

அதிகமான சனநெரிசல், சிக்கலான வியாபார தளங்களை கொண்ட கொழும்பு மத்திய பகுதியில் தொழில் பார்க்கும் வீதியோர வியாபாரிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், இப்பகுதியானது வியாபாரிகளின் அதிக சத்தமும், பரபரப்பான சூழலுமாக உள்ள இடமாகும். உள்நாட்டு, வெளிநாட்டு உற்பத்திப் பொருட்களின் சந்தைப்படுத்தல் அதிகமாக இங்கு காணப்பட்டாலும், அதனை சந்தைப்படுத்தக்கூடிய வாய்ப்பு கிட்டுகின்ற போதும், பொருளாதார பின்னடைவு, பணவீக்கம் போன்றன விளிம்பு நிலை மக்களை பெரிதும் ஏமாற்றியுள்ளது.

தினக்கூலியாக ஒரு நாளைக்கு 1500 - 2000 ரூபாய் வரை உழைத்தாலும், தற்கால நிலையில், அது குடும்ப ஜீவனாம்சத்துக்கு போதாது. 

இது பற்றி கொழும்பு மத்திய பகுதி வியாபாரிகளின் குடும்பத் தலைவிகளை சந்தித்து பொருளாதார நிலவரம் தொடர்பில் கேட்டறிந்தபோது அவர்கள் தெரிவித்த ஒருமித்த கருத்தாவது,

"ஒரு நாளைக்கு 2000 ரூபாய் உழைத்தால், அது மறுநாளே கரைந்துவிடுகிறது. அந்தளவுக்கு பணத்தை மிச்சம்பிடிக்க முடியாதிருக்கிறது. முன்னரை விடவும் இப்போதைக்கு வாழ்வது கடினமே. பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதென்றால் இப்போதைய விலை கடந்த முறையை விடவும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 

எங்களுடைய கணவர்மார் உழைத்துக் கொண்டுவரும் பணத்தை எங்களால் எப்படி மிச்சம் பிடிக்க முடியும்? எல்லா பொருட்களுக்கும் விலை அதிகரிக்கப்பட்டுவிட்டது. மின்சாரக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துவிட்டது..." என்றார். 

மேலும், வீட்டு உபகரணப் பொருள் வியாபாரியான றம்சீன் கூறுகையில், 

"இப்போது வியாபாரம் சடுதியாக குறைந்துவிட்டது. வருமானமும் போதாத நிலை.  இதனால் நிறையவே நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். சிலவேளை, வீதியோரமாக வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போதே பொலிஸார் வந்து கடையை அகற்றச் சொல்வார்கள். அவர்களது கடமையை அவர்கள் செய்கிறார்கள். என்ன செய்வது சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியுமுள்ளது" என்றார்.  

அரசியல்வாதிகள் காலத்துக்கு காலம் வாக்குறுதிகளை வழங்கியபோதும், வியாபாரிகள் நடைபாதைகளை வியாபாரத்துக்காக பயன்படுத்துவது தொடர்பில் திட்டவட்டமான சட்டங்கள் எதுவும் இல்லை என்பது நடைபாதை வியாபாரிகள் கொண்டுள்ள உண்மையான கரிசனையாக உள்ளது. 

கொழும்பு நகரில் உள்ள வீதியோர வியாபாரிகளுக்கென கொழும்பு மாநகர சபை விதிகள் எதனையும் விதிக்கவில்லை. அவ்வப்போது தமது வசதிகளுக்கேற்ப சில ஒழுங்குமுறைகளை மாத்திரம் செய்கின்றனர். வியாபாரிகளிடமிருந்து வாடகைப் பணமும் பெறுவதாக தெரியவந்துள்ளது. ஆனால், இது பற்றிய எந்த தகவலையும் கொழும்பு மாநகர சபை அதிகாரிகளிடம் இருந்து பெற முடியவில்லை. 

நடைபாதைகளை வியாபாரத்துக்காக பயன்படுத்துவது தொடர்பில் சம காலத்தில் காணப்படும் ஒழுங்குவிதிகள் தொடர்பான விபரங்களையேனும் கொழும்பு மாநகர சபை அதிகாரிகளிடம் கோரியபோதும், அதற்கு பதில் இல்லை. 

மக்கள் பரபரப்பாக இயங்கும் வேளைகளில் வாகனங்கள் அல்லது மக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில் நடைபாதை வியாபாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. அவ்வாறே வியாபாரிகளால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் சந்தர்ப்பங்களில் நடைபாதை வியாபாரிகள் பொலிஸாரினால் அகற்றப்படுகின்றனர். 

இதனால், சிலவேளைகளில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் பேரணிகளின் கருப்பொருள்களில் உள்ள விடயங்கள் நடைபாதை வியாபாரிகளின் சார்பாகவும் இருக்கும்பட்சத்தில், இந்த ஆர்ப்பாட்டங்கள்  நடைபாதை வியாபாரிகளுக்கு மேலதிக பிரச்சினைகளை கொண்டுவந்துவிடுகின்றன.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் முன்னெடுக்கப்படும் வீதித் தடைகள், வீதி முடக்க நடவடிக்கைகள் போன்றவை அந்த வியாபாரிகளுக்கும் அவர்களது சிறு தொழில் முயற்சிகளுக்கும் பாதகமாக மாறிவிடுகின்றன. இது குறித்து வீதியோர வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

சில அரசியல்வாதிகள் சுயலாபம் மற்றும் அரசியல் நோக்கில் இதைப் பற்றி அவ்வப்போது பேசினாலும், இதற்கான சட்டங்களோ, விதிமுறைகளோ இல்லை என்று வியாபாரிகள் கூறுகின்றனர். ஏனைய வர்த்தகர்களுக்குச் சங்கம் இருப்பதைப் போன்று தமக்கு சங்கமொன்று இல்லை எனவும் அந்த வீதியோர வியாபாரிகள்  ஆதங்கப்படுகின்றனர். 

அத்தோடு, வியாபாரம் செய்யும் இடங்களுக்கு நில வாடகை அறவிடும் முறைமையும் வியாபாரிகள் பயமின்றி தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க வழிவகுக்கும். இதனால் அவ்வாறான ஒரு முறைமை தமக்கு வசதியானதாக அமையும் என ஒரு வியாபாரி கூறினார். 

பாடசாலைக்குச் செல்லும் தனது பிள்ளைகள் உட்பட இவரது குடும்பத்தினர் பொருளாதார சிக்கல்களால் நாளாந்தம் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார். 

(1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் மத்திய கொழும்பு பிரதேசத்தில் வீதியோர வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எனினும், அடுத்தடுத்த வந்த அரசாங்கங்கள் அவர்களின் வியாபார நடவடிக்கைகளுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்வதில் எந்தவித கவனத்தையும் செலுத்தவில்லை.) 

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வது மட்டுமன்றி, வியாபாரிகள் மழைக் காலங்களில் வீதியோர வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கும் ஆளாகியுள்ளனர்.  

நாட்டில் ஏற்பட்ட ஸ்திரத்தன்மை காரணமாக கொழும்பு நகரில் அரசாங்கத்துக்கு எதிரான பல தொழிற்சங்கங்கள், அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால் வீதிமறியல்  போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதனால், பல சந்தர்ப்பங்களில் கொழும்பு மத்திய பகுதிக்கு செல்ல முடியாதபடி வீதிகள் முடக்கப்படுவதாலும் வீதியோர வியாபாரங்கள் பாதிக்கப்படுகின்றன.

பொருளாதார பின்னடைவினால் நாட்டில் நிரந்தர இடமின்றி, இந்த வியாபாரிகள் கடும் மழை, வெய்யில் என்றும் பாராமல் உழைக்கின்றனர்.

இந்த வியாபாரிகள் தாங்களும், தங்களது பிள்ளைகளும் வாழ வேண்டும் என்பதற்காகவே, பெரும் பொருளாதார சுமையையும் ஏற்றுக்கொண்டு, உழைத்து, தவிக்கின்றனர். 

இதுபோன்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நாடியே அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ள பல தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் விலை அதிகரிப்பு, வரி அதிகரிப்பு, அரச சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்தல், பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உள்ளிட்ட விடயங்களை இல்லாதொழிக்குமாறு கொழும்பு நகர் பகுதிகளில் ஒன்றுதிரண்டு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். 

நடைபாதை வியாபாரிகளின் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் கொழும்புத் துறை வியாபாரச் சங்கம் மற்றும் நடைபாதை வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்திருந்தனர். 

இதன்போது, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்திருந்தார். 

அத்தோடு, வியாபாரிகளுக்கான அடையாள அட்டை விநியோகிப்பது பற்றியும் ஆராயப்பட்டது. 

(இவ்வமைப்பு மொத்த வியாபார கடைகளை நடத்துவோரை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.)

பொருளாதார நெருக்கடியால் சாதாரண கூலித் தொழிலாளி முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

இதேவேளை, அதிகமான நெருக்கடி உள்ள பகுதியில் வியாபாரம் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சிப்பதும் ஒரு வாழ்க்கைப் போராட்டமாகவே உள்ளது.

சாதாரண குடிமகன் குடும்பத்தினரின் உணவுத் தேவைகளை நிவர்த்தி செய்தல், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புதல் மாதாந்த கட்டணங்களை செலுத்துதல், கடன் தவணைகளை செலுத்துதல் ஆகிய தேவைகளை பூர்த்தி செய்வதிலும், இந்த வியாபாரிகள் பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

பல இளைஞர்கள் தொழிலை இழந்து, கையிருப்பில் பணமின்றி, பொருட்களை கொள்வனவு செய்ய முடியாமலும் வாழ்க்கையை கடத்துகின்றனர்.

ஏனைய வர்த்தகத்துறையுடன் ஒப்பிடும்போது வீதியோர வியாபாரிகளின் நிலை பரிதாபமானது. கொரோனா நோய்த் தாக்கம் காரணமாக முன்னதாக அவதியுற்றிருந்த இவர்கள் தற்போது பொருளாதார சுமையாலும் பாதிப்படைந்துள்ளனர். 

ஏனைய துறைகளைப் போலன்றி, வீதியோர வியாபாரிகள் முன்னேறுவது கடினம். இருந்தபோதிலும், இவர்களுடைய நிலையை விரிவுபடுத்தவும் வருமானத்தை அதிகரிக்கவும் அரசாங்கம் புதிய திட்டமொன்றை வகுக்க வேண்டும். 

வீதியோர தடைகள் சில நேரம் கொழும்பு மத்திய பகுதியில் பொலிஸாரினால் ஏற்படுத்தப்படுவதுண்டு. இதனால் போக்குவரத்தில் சிரமங்கள் ஏற்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன.

போக்குவரத்து பொலிஸார் வீதியோர வர்த்தகர்களை சில சந்தர்ப்பங்களில், அவ்விடங்களை விட்டுச் செல்லுமாறும்,  போக்குவரத்துக்கு இடைஞ்சலின்றி செயற்படுத்துமாறும் கூறுகின்றனர். ஆனாலும், வியாபாரம் செய்வதற்கு உரிய நிரந்தரமான இடமொன்று இல்லாதது இந்த வியாபாரிகளுக்கு பாரிய பின்னடைவினை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க டொலரில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரத்தை ஆரம்பிப்பதாயின், மூலதனச் செலவானது கடந்த காலங்களை விடவும் தற்போது பல மடங்கு வரை அதிகரித்துள்ளது. பல வியாபாரிகள் வங்கிகளில் கடன் பெற்றிருப்பார்கள். இதனை மீளச் செலுத்த முடியாததால் அதிகரிக்கப்பட்ட வட்டி வீதம் அவ்வியாபாரிகளை வாட்டி வதைக்கிறது.

சுமார் 90 வீதமான பொருட்கள்  வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் வரிச் சுமையும் அதிகரித்துள்ளது. சாதாரண பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

கொழும்பு நகர்ப் பகுதியில் வீதியோரங்களில் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். 

இரவு பகல் பாராமல் நாட்டாமி ஊழியர்களும் கூட வண்டிகளில் சுமந்து பொருட்களை ஏற்றி இறக்குகின்றனர். இருப்பினும், சகல விதமான கூலிகளும் போக, வியாபாரிகளின் இலாபமீட்டல் குறைவாகவே உள்ளதாகவும் தொழிலாளர்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.

தானும் கணவரும் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் கொண்டிருந்த கனவுகளை பற்றி பூக்கடை நடத்தும் சரஸ்வதி என்னுடன் பகிர்ந்துகொண்டார். 

சரஸ்வதியின் கணவர் 20 வருடங்களாக பூக்கடையை நடத்தி வந்த நிலையில் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் திடீரென இறந்துவிட்டார். அதன் பின்னர் கடையைக் பொறுப்பேற்று சரஸ்வதி நடத்தி வருகிறார். 

அவரின் மூன்று பிள்ளைகளும் பாடசாலைக்குச் செல்லும் நிலையில், வீட்டு வாடகையாக மாதாந்தம் 20,000 ரூபாயை செலுத்த வேண்டியுள்ளது. அவரது பொருளாதாரப் பிரச்சினைகள் அவரின் முன்னால் மலை போல் குவிந்துள்ளன.

அவரின் திடமான மனவுறுதிக்கு மத்தியில், நிம்மதியான வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என சுயதொழில் முயற்சியாளரான இந்த பெண் கொண்டுள்ள கனவு நனவாவது எட்டாக்கனியாகவே உள்ளது.

அதிகமான சாதாரண மக்கள் சேறிப் புறங்களிலும் அடுக்கு மாடிகளிலும் வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். நாட்கூலி தொழிலாளிகளாகவும் முறைசாரா துறைகளினூடாகவும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தமது பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளையும் சரிவர செய்ய முடியாமல் தவிக்கின்றனர். 

இவர்களின் வாழ்வாதாரச் சிக்கல்கள் நீங்க மாற்றுவழிகள் உண்டா? 

வீதியோர வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிட்டுமா?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04