எழுதியவர் - P. K. பாலச்சந்திரன்
தாய்லாந்தின் பிரதிநிதிகள் சபைக்கு மே 14 அன்று நடந்த தேர்தலில், இளைஞர்கள் தலைமையிலான progressive Move Forward கட்சி (MFP) தனிப் பெரிய குழுவாக உருவெடுத்ததுடன், 500 இடங்களில் 151 இடங்களைப் பெற்றது. பியூ தாய் கட்சி 141 இடங்களையும் பூமிஜைதாய் 71 இடங்களையும் ஐக்கிய தாய் நாடு கட்சி 36 இடங்களையும், ஜனநாயகக் கட்சி 25 இடங்களையும், பலாங் பிரசாரத் 40 இடங்களையும் பெற்றன. மீதமுள்ள இடங்கள் பல சிறிய கட்சிகளுக்கு கிடைத்தன.
MFP ஆட்சியமைப்பதற்காக ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளது கூட்டணியின் கொள்கை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கஞ்சா ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக இருக்கும் என்றும், ஏகபோகஉரிமைகள் உடைக்கப்படும், பொருளாதாரத்தில் போட்டித்தன்மை வளர்க்கப்படும், பாலியல் நோக்குநிலையைப் பொருட்படுத்தாமல் திருமண சமத்துவம் உறுதி செய்யப்படும், போர் நிலைமையை தவிர கட்டாய இராணுவசேவைக்கு தடை விதிக்கப்படும், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் தாய்லாந்து அதன் முனைப்பான வகிபாகத்தை மீட்டெடுக்கும் எனவும் கூறுகிறது.
"புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) என்பது பகிரப்பட்ட விழுமியங்கள், பகிரப்பட்ட நிகழ்ச்சி நிரல் மற்றும் பகிரப்பட்ட பொறுப்புக்கூறல் தொடர்பானது" என்று MFP இன் தலைவரும் கூட்டணியின் ஊகிக்கப்படும் பிரதமரான பிடா லிம்ஜாரோஎன்ரட் கூறினார்.
2019 ஆம் ஆண்டு தேர்தல்களில் வலுவாகக் காணப்பட்ட பின்னர் நீதிமன்றங்கள் கலைத்த Future Forward கட்சியின் (FFP) வாரிசாக 2020 இல் Move Forward கட்சி உருவாக்கப்பட்டது. அந்த கலைப்பு 2020 மற்றும் 2021 இல் இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க வீதிப் போராட்டங்களை ஆரம்பித்தது.
சமீபத்திய தேர்தல்களில், MFP அரசியல் உயரடுக்கிற்கு வெளியேயிருந்து தன்னார்வலர்களை தெரிவுசெய்ததுடன் அதன் கொள்கைகளை விளக்குவதற்கு வீடு வீடாகச் சென்றது. இது MFP தங்கள் குழந்தைகளுக்கான நிலைமைகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை அறிய விரும்பும் பெற்றோருக்கு மாணவர்கள் செய்தியை வழங்குவார்கள் என்று எதிர்பார்த்தமையால் பல்கலைக்கழகங்களில் கவனம் செலுத்தியது.
2019 தேர்தலில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கினை வகித்தன, ஆனால் இந்த முறை அது அவ்வாறு பங்களிக்கவில்லை. சமூக ஊடகங்களின் பரவலான பயன்பாடு ஒடுக்குமுறைகளுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்பட்டதால் பரப்புரையாளர்கள் தனிப்பட்ட தொடர்புகளைச் சார்ந்திருந்தனர். குறியீட்டுவாதம் மிகையான தொடர்பாடலின் இடத்தைப் பிடித்தது.
கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக தாய்லாந்தில் ஆட்சி செய்து வந்த இராணுவ ஆதரவுடைய முடியாட்சி சார்பு கட்சிகளை நிராகரிக்க வாக்காளர்கள் முடிவு செய்திருந்தமையால் MFP யின் பிரச்சாரம் வெற்றி பெற்றது.
எவ்வாறாயினும், இந்த பழமைவாத கட்சிகள் தீர்க்கமான முறையில் தோற்கடிக்கப்பட்டதாக தாய்லாந்து கூறுவதற்கு முன் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. மன்னராட்சியைப் போலவே தாய்லாந்து அமைப்பிலும் இராணுவம் வேரூன்றியுள்ளது என்பதைத் தவிர, கிட்டிய அருகாமையில் தடைகளும் உள்ளன.
பின்வருவனவற்றை அவதானியுங்கள்:
முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு 60 நாட்கள் ஆகும். இந்த காலகட்டத்தில் எதுவும் நடக்கலாம். உதாரணமாக, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், இராணுவ ஆதிக்கம் செலுத்திய செனட் பிரயுத் சான்-ஓச்சாவுக்காக ஒருமனதாக வாக்களித்தது, இருப்பினும் அவரது கட்சி (அப்போது பலாங் பிரசாரத்) பியூ தாயை விட (116 முதல் 136 வரை) குறைவான இடங்களைப் பெற்றிருந்தது. இறுதியில், தனது கைகளில் அதிகாரத்துடன், பிரயுத் சான்-ஓச்சா 19 கட்சிகளின் கூட்டணியை ஒன்றாக இணைத்ததுடன், அது அவரை நான்கு ஆண்டுகள் பதவியில் வைத்திருந்தது.
இராணுவம் அதியுயர் அதிகாரம் செலுத்தும் செனட்டை விட பிரதிநிதிகள் சபை வெற்றிபெற வேண்டும். இராணுவத்தால் நியமிக்கப்பட்ட செனட்டின் 250 உறுப்பினர்கள் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் வாக்களிப்பதற்கு பாராளுமன்ற விதி அனுமதிக்கிறது. எனவே, பிரதமர் பதவியைப் பெற, ஒரு வேட்பாளர் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை முழுவதிலும் 376 வாக்குகளைப் பெற வேண்டும். இது மிகவும் கடினமான விடயமாகும்.
சபாநாயகர் தேர்தல் சிக்கலானதாக இருக்கலாம். சபாநாயகர் பதவி முக்கியமானதாக உள்ளது, ஏனெனில் அவர் பாராளுமன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துபவராவார். MFP மற்றும் பியூ தாய் கட்சி இடையே சபாநாயகர் தெரிவு தொடர்பாக ஏற்கனவே மோதல் ஏற்பட்டுள்ளது. MFP தனிப்பெரும் கட்சியாக பதவியை அடைய வேண்டும் என்றுmநினைக்கும் அதே வேளையில், அதிகாரச் சமநிலையை உறுதிப்படுத்த பதவி தமக்கு வர வேண்டும் என்று பியூ தாய் கூறுகின்றது.
இராணுவ எதிர்ப்பு
மன்னராட்சி மற்றும் ஆயுதப்படைகளை சீர்திருத்துவதற்கான MFP யின் எந்த முயற்சியையும் இராணுவ மேலாதிக்கமுள்ள செனட் எதிர்க்கும். சமீபத்திய செய்தி என்னவென்றால், கூட்டணி அரசியலின் நிர்ப்பந்தங்கள் ஏற்கனவே MFP மன்னராட்சியைப் பாதுகாக்கும் சட்டங்கள் அல்லது lese-majeste சட்டங்கள் மீதான அதன் நிலைப்பாட்டை நீர்த்துப்போகச் செய்துள்ளது. lese- majeste சட்டங்களின் கீழான குற்றங்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
அடுத்த சில மாதங்களில் விடயங்கள் எவ்வாறு நடைபெற்றாலும், அரண்மனையில் உள்ள இராணுவம் மற்றும் பழமைவாதிகள் அரசாங்கத்தில் முக்கிய வகிபங்கை வகிப்பார்கள் என்று மூலோபாய மற்றும் சர்வதேச கற்கைகளுக்கான மையத்தின் (CSIS) ஓர் அறிக்கை கூறுகிறது.
"அவர்கள் நேரடி பங்கேற்பாளர்களாகவோ அல்லது Move Forward மற்றும் பியூ தாய் மீது டமோக்கிள்ஸின் வாளைப் பிடித்துக் கொண்டு, சீர்திருத்தத்திற்கான தங்களின் திட்டங்களைக் குறைக்கவோ அல்லது மற்றொரு சதிக்கு ஆபத்தை ஏற்படுத்தவோ கட்டாயப்படுத்தலாம்" என்று அறிக்கை கூறுகிறது.
தாய்லாந்து-அமெரிக்க உறவுகளில் தாக்கம்
அமெரிக்க-தாய்லாந்து உறவுகளில் தேர்தல்களின் தாக்கம் குறித்து, CSIS அறிக்கை கூறுகையில்: “இராணுவ அல்லது நீதித்துறை சதி இல்லை என்று கருதினால், அமெரிக்க-தாய்லாந்து கூட்டணி செயல்பாட்டு ரீதியாக மாறாமல் இருக்கும். பயிற்சி, சட்ட அமுலாக்கம், இணைய பாதுகாப்பு மற்றும் எண்ணற்ற பிற துறைகளில் ஒத்துழைப்பு தொடரும். தாய்லாந்து குறைந்தபட்சம் குறுகிய காலத்திலாவது, 2014 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு செய்தது போல இறுதியில் அரசியல் வன்முறையின் மற்றொரு சுழற்சியில் நுழைந்தால் அது அமெரிக்க-தாய்லாந்து இராணுவ ஒத்துழைப்பைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும்.”
ஒட்டுமொத்தமாக, அதன் பிரகாரம்,
“கடந்த தசாப்தத்தில் நீடித்து வந்த சில அவநம்பிக்கையை பிரயுத்தின் ஆட்சியின் கீழ் இரு தரப்பும் சரிசெய்ய முடியும். சீனாவுடனான போட்டியை உள்ளடக்கிய பல பிரச்சினைகளில் தாய்லாந்து அமெரிக்காவுடன் வெளிப்படையாக ஒத்துப்போக வாய்ப்பில்லை என்றாலும், அது பெய்ஜிங்கின் நெருங்கிய அரவணைப்பையும் தற்போதைய அரசாங்கத்தால் தள்ளப்படும் வாஷிங்டனின் அவநம்பிக்கையையும் நடுநிலைப்படுத்தக்கூடும்.
MFP இன் பெரும்பாலான ஆதரவாளர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமெரிக்க சார்புடையவர்களாக இருப்பார்கள் அல்லது குறைந்த பட்சம் சீனாவின் மீது சந்தேகம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று நம்புவதற்கு காரணம் இருப்பதாக CSIS அறிக்கை கூறுகிறது, ஏனெனில் அவர்கள் முன்னைய ஆதரவை ஹாங்காங், தைவான், தாய்லாந்து மற்றும் அதற்கு அப்பால் உள்ள ஜனநாயகத்திற்கு ஆதரவான குரல்களின் நிகழ்நிலை வலையமைப்பான Milk Tea கூட்டணிக்கு அளித்தனர். 2021 இல் மியான்மர் இராணுவம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து மியான்மர் இராணுவம் முற்றிலுமாக புறக்கணித்த ஆசியான் அமைப்பு மத்தியஸ்தம் வகிக்கும் ஐந்து அம்ச ஒருமித்த சமாதானத் திட்டத்தை மியான்மார் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதில் தாய்லாந்தின் வகிபாகத்தை MFP இனுடைய தலைவர் பிடா லிம்ஜாரோன்ராட் அங்கீகரித்ததாக CSIS அறிக்கை குறிப்பிடுகிறது.
தாய்லாந்துக்கும் மியான்மருக்கும் இடையே மனிதாபிமான வழித்தடத்தை அமைப்பது அவரது முன்னுரிமைகளில் ஒன்றாகும். இருப்பினும், MFP இன் சமூக நலக் கொள்கைகள் தொடர்பில் அமெரிக்கா கவலைப்படலாம்,
உண்மையில் அவை தனியார் துறை தொடர்பில் கவலைப்படுகின்றன. MFP, மற்ற கட்சிகளைப் போலவே, பண உதவிகள் மற்றும் சம்பளம் மற்றும் ஊதியங்களை உயர்த்துவதாக உறுதியளித்துள்ளது. MFP இனுடைய ஆட்சி கடுமையான நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளலாம்.
மற்ற நாடுகள் மீதான தாக்கம்
தாய்லாந்து இராணுவம் உண்மையில் இளைஞர் சக்தியின் கைகளால் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால், இராணுவம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆட்சி செய்து வரும், இளைஞர்கள் தலைமையிலான ஜனநாயக சக்திகளின் அழுத்தத்தில் இருக்கும் மற்றைய நாடுகளில் இது எந்த விளைவையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. ஏனென்றால், ஜனநாயக அமைப்புகள் மற்றும் வழக்கமான தேர்தல்களின் பொறிகளை மீறி தாய்லாந்து இராணுவம் நாட்டின் பொறுப்பில் இருந்து வருகிறது. தாய்லாந்து ராணுவத்தைப் போலவே, மியான்மர், பாகிஸ்தான், எகிப்து ஆகிய நாடுகளிலும் ராணுவத்தினர் நன்கு வேரூன்றி உள்ளனர்.
இளைஞர் சக்தியைப் பொறுத்தவரை, தாய்லாந்தில் அது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சி மூலம் வழிநடாத்தப்பட்டதால் வெற்றி பெற்றது. இது கட்டுப்பாட்டால் குறிப்பிடப்பட்டது. இலங்கையில் இதற்கு நேர்மாறாக, அரகலய இளைஞர் இயக்கம் எந்தத் தலைவரோ அல்லது தலைமைத்துவக் கட்டமைப்போ இல்லாத நிலையில் இருந்தது. இது நாசவேலை மற்றும் எரியூட்டல் வரை சென்றது. எனவே, அது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெளியேற்றத்தை ஏற்படுத்திய போதிலும், அதன் அடிப்படைக் கொள்கைகளை வழங்கத் தவறிவிட்டது.
பாகிஸ்தானில், இம்ரான் கானின் பின்தொடரும் இளைஞர்களின் நாசவேலை மற்றும் எரியூட்டல் காரணமாக அவரது நெருங்கிய கூட்டாளர்கள் பலர் அவரது கட்சியை விட்டு வெளியேறினர். இதற்கு நேர்மாறாக, தாய்லாந்தின் ஒழுக்கமான, நன்கு வழிநடாத்தப்பட்ட மற்றும் அமைதியான இளைஞர் இயக்கம் பாராட்டுகளையும் வாக்குகளையும் வென்றது. P.K. பாலச்சந்திரன் கொழும்பில் உள்ள ஒரு சுயாதீன ஊடகவியலாளரென்பதுடன் பல வருடங்களாக பல்வேறு செய்தி இணையதளங்கள் மற்றும் நாளிதழ்களில் தெற்காசிய விவகாரங்கள் குறித்து எழுதுகிறார். ஹிந்துஸ்தான் டைம்ஸ், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் எக்னாமிஸ்ட் ஆகியவற்றிற்கு கொழும்பு மற்றும் சென்னையில் இருந்து அறிக்கை அளித்துள்ளார்.
இலங்கையில் டெய்லி மிரர் மற்றும் சிலோன் டுடே ஆகிய பத்திரிக்கைகளில் வாராந்த பத்தி ஒன்றை எழுதுகின்றார். Factum என்பது ஆசிய – பசுபிக்கை மையமாக கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம். இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM