கடன் தொல்லையிலிருந்து மீள தேங்காய் + மிளகு விளக்கு பரிகாரம்

Published By: Ponmalar

16 May, 2023 | 03:33 PM
image

விலைவாசி உயர்வு காரணமாகவும், அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாட்டு காரணமாகவும் இன்றைய சூழலில் எம்மில் பலரும் கடன் வாங்காத சூழல் இல்லை என்றே உறுதியாக சொல்லலாம். கடனாளியான நாம் அதிலிருந்து மீள்வதற்கான வழிகள் தெரியாமல் விழி பிதுங்கி தவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த தருணத்தில் எமக்கு உற்ற தோழனாக இருந்து வழிகாட்டும் ஜோதிட நிபுணர்களும் பல பரிகாரங்களை பரிந்துரைத்தப்படி இருக்கிறார்கள்.

நாமும் பலவித பரிகாரங்களையும் செய்து கொண்டு இருக்கிறோம். இருந்தாலும் கடன் சுமை குறைவதற்கான சாத்தியமே இல்லை என்ற நிலைதான் நீடிக்கிறது.

ஒரு சிலர் இது தொடர்பாக தொடர்ந்து புலம்பி வருகின்றனர். இந்நிலையில் கடன் தொகையிலிருந்து மீள்வதற்காக ருண விமோசன வழிபாடுகள் செய்தும்... கடன் சுமை குறையவில்லை எனில், நாம் கடுமையான கர்ம வினையால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும், இவைகள் தான் எமக்கு கடன்களை அடுத்தடுத்து உருவாக்கி இருக்கிறது என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கர்ம வினைகளால் கடன் சுமை அதிகரித்துக் கொண்டே இருந்தால்... இதற்கு பைரவ வழிபாடும், பைரவருக்கான பிரத்தியேக பரிகாரத்தையும் தொடர்ந்து மேற்கொண்டால், மூன்று மாதத்திற்குள் கடன் சுமை குறைய தொடங்கும். ஆனால் இத்தகைய பரிகாரத்தை செய்ய விரும்புபவர்கள், பரிகாரத்தை செய்வதற்கு முன் சில வாழ்வியல் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு, அதனை உறுதியாக பின்பற்ற வேண்டும். அது என்ன நிபந்தனை? எனக் கேட்கிறீர்களா..?

இந்த பரிகாரத்தை செய்யத் தொடங்கும் முதலில் அசைவ உணவுகளை பசியாறுவதையும், மது அருந்துவதையும் முற்றாக கைவிட வேண்டும். ஏனெனில் நாளாந்தம் மது அருந்துபவர்களின் ஜாதகம் இயங்குவதில்லை. அதே தருணத்தில் அடிக்கடி அசைவ உணவுகளை சாப்பிடுபவர்களின் இறை வழிபாடு- அவர்களுக்கு உரிய பலனை அளிப்பதில்லை. இதன் காரணமாக கடன் தொல்லையிலிருந்து மீள்வதற்கான பரிகாரத்தை மேற்கொள்ள தொடங்கும் முன், மேற்கூறிய நிபந்தனைகளை மனதில் சங்கல்பம் செய்து கொண்டு கைவிட வேண்டும்.

முதலில் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தங்களது பழைய அல்லது தொடர்ந்து பயன்படுத்திய பனியன்/வேட்டியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பத்துக்கு பத்து என்ற நீள அகல அளவில் சமமாக 16 சதுர துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். உடன் கருப்பு வண்ண நூல்கண்டு மற்றும் சிறிதளவு மிளகும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஜோதிடர் பரிந்துரை செய்திருக்கும் ஒரு சனிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு மேல் 8 மணிக்குள், வெட்டி வைத்திருக்கும் 16 சம சதுர துண்டு துணிகளில் இரண்டை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒவ்வொரு துண்டு துணியிலும் 27 மிளகுகளை எண்ணி வைத்து, அதனை கருப்பு நூலால் கட்டி வைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தேங்காயை வாங்கி, அதை உடைத்து வைத்துக் கொண்டு, தேங்காயின் உள்பகுதியில் 27 மிளகுகளைக் கொண்ட... கருப்பு நூலால் கட்டப்பட்ட... சிறு பொட்டலத்தை வைக்க வேண்டும். ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தேங்காய் மூடியுனுள் வைத்து அந்த தேங்காயில் சுத்தமான நல்லெண்ணையை ஊற்ற வேண்டும்.

இதனை எடுத்துக் கொண்டு பைரவ பெருமானின் சன்னதியில் இந்த தேங்காய் + மிளகு பரிகார விளக்கை வைக்க வேண்டும். இதன் போது எம்மில் சிலர் புத்திசாலித்தனமாக தேங்காய் தரையில் இயல்பாக நிற்காதே..! அதற்கு என்ன செய்வது ? என கேட்பர். இதற்காக அகல் விளக்கினை ஒன்றை அருகில் உள்ள கடைகளில் வாங்கி தேங்காயின் கூர்மையான கீழ்ப்பகுதியை அதன் மீது பொருத்தி, நிறுத்தி விடலாம்.

தீபம் ஏற்றும் முன் பைரவரிடம் எம்முடைய கடன்கள் முழுமையாகவும், விரைவாகவும் தீர வேண்டும். மகிழ்ச்சி மனதில் குடியேற வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டு, இரண்டு தேங்காய்களிலும் உள்ள மிளகு பொட்டலத்தின் மீது தீபம் ஏற்ற வேண்டும்.

இதனை தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு செய்ய வேண்டும். உடனே எம்மில் சிலர் பணிச் சுமையின் காரணமாக தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகள் செய்ய இயலாத நிலை ஏற்பட்டால்.. என்ன செய்வது? என பரிகாரம் செய்யும் முன்பே கேட்பர். அதிக இடைவெளி விடாமல் தொடர்ந்து இதனை எட்டு சனிக்கிழமைகள் கஷ்டப்பட்டேனும் இம்மாதிரியான பிரத்யேக பரிகார வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். எட்டாவது சனிக்கிழமை நிறைவடைந்த பிறகு, அன்றிலிருந்து மூன்று மாதங்களுக்குள் உங்களுடைய கடன் தொகை கோடிக்கணக்கில் இருந்தாலும் சரி... அல்லது லட்சக்கணக்கில் இருந்தாலும் சரி.. எதிர்பாராத வகையிலான உதவியை பைரவ பெருமாள் அருள்வார்.

மேலும் சிலர் இந்த பரிகாரத்தை கணவனுக்காக மனைவி மேற்கொள்ளலாமா? என்றும், தந்தை சார்பாக மகள் மேற்கொள்ளலாமா? என்றும், சகோதரன் சார்பாக சகோதரி மேற்கொள்ளலாமா? என்றும், நண்பனுக்காக இதை மற்றொரு நண்பர் செய்யலாமா? என்றும் கேட்பர். இவ்விடயத்தில் கணவனுக்காக மட்டும் மனைவி இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். மற்ற உறவுகளுக்கு இது பொருந்தாது என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

அதேபோல் வேறு சிலர் இந்த பிரத்யேக பரிகார விளக்கை ஆலய நிர்வாகம் ஸ்ரீ பைரவ பெருமானின் சன்னதியில் முன்பாக ஏற்ற அனுமதி அளிப்பதில்லை. இதனால் இதனை ஆலய வளாகத்தில் ஆலய நிர்வாகம் ஒதுக்கி இருக்கும் இடத்தில் ஏற்றலாமா..? எனக்கேட்பர். ஏற்றலாம் .

வேறு சிலர் தேங்காய் + மிளகு பரிகார விளக்கிற்காக ஆலய வளாகங்களில் எரிந்து நிறைவடைந்து காலியாக இருக்கும் அகல் விளக்குகளை பயன்படுத்தலாமா? எனக் கேட்பர். பயன்படுத்தலாம், தவறில்லை. அது கிடைக்கவில்லை என்றால் அருகில் உள்ள கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.

கணவனுக்காக மனைவி இத்தகைய பிரார்த்தனையை மேற்கொள்ளும் போது.. தீட்டு ஏற்பட்டால் என்ன செய்வது? என கேட்பர். அந்த சனிக்கிழமையை தவிர்த்து விட்டு, தொடர்ந்து வரும் சனிக்கிழமையில் விளக்கேற்றலாம்.

வேறு சிலர் சூழலின் காரணமாக தனித்து வாழும் பெண்மணிகள்... சக்திக்கு மீறிய அல்லது பிணையின் காரணமாக கடன்களின் சிக்கியிருந்தால்.., அவர்கள் இந்த பரிகார விளக்கை ஏற்றலாமா? என கேட்பர். அவர்கள் மட்டும் துணிக் கடையில் கிடைக்கும் காடா துணியை வாங்கி, அதனை மேற்கூறிய வகையில் 16 சம சதுரங்களாக வெட்டி, அதில் 27 மிளகு வைத்து வழிபாடு செய்துவர கடன்கள் அகலும். மகிழ்ச்சி இருக்கும்.

தொகுப்பு சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும் திருமுல்லைவாயில்...

2024-04-18 17:30:19
news-image

தோஷங்கள் அனைத்தையும் நீக்கி அருள் பாலிக்கும்...

2024-04-17 17:44:50
news-image

யோகங்களை அருளும் யோகி தலங்கள் மற்றும்...

2024-04-16 14:24:26
news-image

செல்வ நிலையை மேம்படுத்தும் கொட்டையூர் கோடீஸ்வரர்...

2024-04-15 17:19:54
news-image

அனைத்து தோஷங்களுக்கும் நிவர்த்தி தரும் செந்தலை...

2024-04-11 10:43:09
news-image

சிறுநீரக கோளாறுகளை நீக்கி அருள் புரியும்...

2024-04-09 17:37:27
news-image

வாஸ்து தோஷமும், பித்ரு தோஷமும் நீக்கி...

2024-04-08 18:31:07
news-image

பெண்மணிகள் தீர்க்க சுமங்கலியாக வாழ அருள்...

2024-04-05 20:56:43
news-image

குழந்தை வரம் அருளும் வழுவூர் வீரட்டானேஸ்வரர்...

2024-04-04 15:21:26
news-image

குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள் -...

2024-04-04 15:24:18
news-image

புண்ணியத்தை அள்ளித் தரும் ஸ்ரீ வாஞ்சியம்...

2024-04-03 12:56:05
news-image

சித்தர்கள் அருளிய கோமுகி தீர்த்த பரிகாரம்

2024-04-02 14:21:11