திருடர்கள் பல விதம் ; பாதணிக்கடை கொள்ளையில் இடம்பெற்ற சுவாரஸ்யம்

Published By: Digital Desk 3

06 May, 2023 | 11:37 AM
image

திருட்டுக் குற்றச் செயல்களில் ஈடுப்படும் போது திருடர்களிடையே பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம் பெறுவது வழமை.

அந்தவகையில் பெரு நாட்டில் பாதணிகளை கொள்ளையடித்த திருடர்கள் தங்களைத் தாங்களே தவறாக வழிநடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

அதாவது, பெருவில் மத்திய நகரமான ஹுவான்காயோவில் உள்ள பாதணிக் கடைக்குள் நுழைந்த மூன்று திருடர்கள் 200 க்கும் மேற்பட்ட பாதணிகளை திருடிச் சென்றுள்ளார்கள். ஆனால் அவர்கள் திருடிய அனைத்தும் வலது காலுக்குரிய பாதணிகளாக இருந்துள்ளன.

திருடப்பட்ட பாதணிகளின் மதிப்பு 13,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக இருப்பதாக மதிப்பிட்டுள்ளதோடு, இருப்பினும் திருடர்கள் அவற்றை விற்க சிரமப்படலாம்  என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த கொள்ளை முயற்சி பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.

அதில், நள்ளிரவில் திருடர்கள் பாதணிக் கடையின்  பூட்டை உடைத்து, வெவ்வேறு தரங்களில் உள்ள பாதணி பெட்டிகளை முச்சக்கரவண்டியில் எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளது.

அந்நாட்டு பொலிஸ் துறைத் தலைவர் எடுவான் தியாஸ் பெருவியன் ஊடகத்திடம் இது குறித்து தெரிவிக்கையில்,

“நாங்கள் சம்பவ இடத்தில் ஆதாரங்களை சேகரித்துள்ளோம். இந்த கொள்ளையில் அசாதாரணமான விஷயம் என்னவென்றால், வலது காலுக்குரிய பாதணிகள் மட்டும் திருடப்பட்டுள்ளன. காட்சிகள் மற்றும் கைரேகைகள் மூலம், அந்த நபர்களை எங்களால் கண்டுபிடிக்க முடியும்"  என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right