ஏழரை சனியில் ஏழரை வருடங்கள் படும் துன்பத்தை அட்டம சனியில் இரண்டே வருடங்களில் பட்டுவிட்டேன், வாழ்க்கையே வெறுத்துவிட்டது என்பார்கள் சிலர்.
ஏழரை சனிக்காலம் போலவே அட்டம சனியின் தாக்கத்தையும் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதையே இதன் மூலம் நாம் தெரிந்துகொள்கின்றோம். ஆனால், சிலரோ "என்ன... எனக்கு அட்டம சனி நடக்கிறதா, சொல்லவே இல்ல..." என்ற பாணியில் பேசுவர்.
ஏன் இவ்வாறு ஒவ்வொரு நபருக்கும் இடையே மாறுபாடான விளைவுகள் இடம்பெறுகின்றன?
இப்பொழுது அட்டம சனி நடக்கிற கடக ராசி அன்பர்கள் அதிலிருந்து எவ்வாறு தப்பிக்கொள்ளலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சனிப் பெயர்ச்சி என்பது ராசிக்கானது, இலக்னத்துக்கானது அல்ல என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். அந்த வகையில், தற்போது கடக ராசிக்கு 8ஆம் இடத்தில் (கும்பம்) கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி முதல் சனி சஞ்சரிக்க ஆரம்பித்துள்ளான்.
இந்நிலையில், கடக ராசியினருக்கு அட்டம சனி இடம்பெற ஆரம்பித்துள்ளது. இது 2025 மார்ச் வரையில் தொடரும். பொதுவாக 8ஆம் இடத்தில் ஒரு கிரகம் வலுப்பெறும்போது பேராசையை தூண்டிவிட்டு, அதன் மூலம் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நிலைமைகள் உருவாகின்றன என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில், கடக ராசிக்கு 8இல் உள்ள சனி, தொழில் ஸ்தானம், குடும்ப வாக்கு தனஸ்தானம், சுகஸ்தானம் ஆகியவற்றை பார்க்கிறார். எனவே, தொழில் விடயத்தில் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும்.
புதிய தொழில் ஆரம்பித்தல், புதிய முதலீடுகளை மேற்கொள்ளுதல், புதிதாக கூட்டு சேர்ந்து தொழில் செய்தல் என்பவற்றில் கடும் நிதானம் தேவை, இருக்கின்ற தொழில் இடத்திலும் பொறுமையுடன் செயற்பட வேண்டும். அதேபோல குடும்ப உறுப்பினர்களுடன் வீணான வாக்குவாதத்தில் ஈடுபடுதல், எவருக்கும் வாக்கு கொடுத்தல், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொடுக்கல் / வாங்கலில் ஈடுபடுதல் என்பவற்றை தவிர்த்துக்கொள்வது நல்லது.
மாணவர்கள் எதிர்ப்பாலினரிடத்தில் கவனமாக பழகுவதுடன் கல்வியில் தீவிர அக்கறை செலுத்துவது நல்லது. அதேபோல நீண்ட தூர பயணங்கள், சுற்றுலா செல்வது, இரவில் பயணிப்பது என்பவற்றை முடிந்தவரையில் தவிர்க்கலாம். கட்டாய தேவை இருப்பின் அவதானமாக இருக்க வேண்டும்.
சரி, அட்டம சனி யாருக்கெல்லாம் பெரிய பாதிப்பை தராது என்றால் தற்பொழுது 1,5,9 ஆம் அதிபதிகளது அல்லது ஜாதகப்படி யோகமாக அமர்ந்த கிரகத்தின் திசை நடப்பவர்கள், வளர்பிறையில் பிறந்து சந்திரன் சுபத்துவம் பெற்று இருப்பவர்கள், போன்றோருக்கு இதன் தாக்கம் குறைவாகவே இருக்கும். திசா புத்திகள் காரணமாகவே ஒரே ராசியில் பிறந்தவர்களுக்கு ஒரே கோச்சார நகர்வுகள் இருந்தும் வெவ்வேறு விதமான விளைவுகள் ஏற்படுகின்றன.
இதைத் தவிர்த்து சூரியன், சந்திரன் மற்றும் கேது, ராகு, செவ்வாய் போன்ற கிரகங்களின் திசை நடப்பவர்கள், (அந்த கிரகம் யோக கிரகமாக அமையாத பட்சத்தில்) உடல் நலத்திலும் ஏனைய விடயங்களிலும் மிகுந்த கவனமுடன் செயற்பட வேண்டும்.
இந்த காலப்பகுதியில் ஏழைகளுக்கு உணவளிப்பது, சனி பகவானின் காரகத்துவங்களில் ஒன்றான எளிமையை பேணுவது, வியர்வை வெளியேறும் வகையில் உழைப்பது, இஷ்ட தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது போன்றவை பெரும் நலன்களை அளிக்கும்.
- எஸ். ரொஷாந்தினி
(ஜோதிட மூல நூல்கள், ஜோதிடர்கள் மூலம் பெற்ற தகவல் அடிப்படையிலான தொகுப்பு)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM