(எம்.ஆர்.எம்.வசீம்)
ஜேஆர் ஜயவர்த்தன 70 வயதுக்கு பின்னர் இரண்டு முறை நாட்டில் ஜனாதிபதியாக பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்ததுபோல் ரணில் விக்ரமசிங்கவும் தற்போது 70வயதை தாண்டிய பின்னரே ஜனாதிபதியாகி இருக்கிறார்.
எனவே 2948 இல் நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கான வேலைத்திட்டத்தை முடித்துவிட்டே நின்றுவிடுவார் என ஐக்கிய தேசிய கட்சி உப தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் பிரதித் தலைவர் றுவன் விஜேவர்த்தன தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் திங்கட்கிழமை (01) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கடந்த வருடம் ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் இக்கட்டான நேரத்தில் மே தினத்தை கொண்டாடியது.1956 தேர்தலில் தோல்வியடைந்த போது ஐக்கிய தேசிய கட்சியின் சவப்பெட்டியில் ஆணி அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
1970 இல் ஐக்கிய தேசிய கட்சி புதைக்கப்பட்டதாக கூறப்பட்டது. 1988 இல் ஜே.வி.பி யினர் ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்க முயன்றனர்.
1993 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் எமது முன்னாள் தலைவர்களை வெடிகுண்டுகளால் அழிக்க முயன்றனர்.
2020ல் கட்சியை இரண்டாகப் பிரித்து ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்க முயன்றனர். ஆனால் இன்று ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கட்சியாக மாறியுள்ளது.
ஆனால் இறுதியில், எங்கள் கட்சியின் தலைவர், நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளார். இந்த நாடு வீழ்ச்சியடைந்த போது ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு யாரும் அந்த சவாலை ஏற்க முன்வரவில்லை.
இன்று அவர் இந்த நாட்டை படிப்படியாக முன்னோக்கி கொண்டு செல்கிறார். பல அவதூறு பிரசாரங்களுக்கு மத்தியில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.
அவர் யாரையும் பழிவாங்கவில்லை. இந்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி, 2048ல் வளர்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு அவர் தோள் கொடுத்துள்ளார்.
ஜேஆர் ஜயவர்த்தன 70 வயதுக்கு பின்னர் இரண்டு முறை நாட்டில் ஜனாதிபதி பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்ததுபோல் ரணில் விக்ரமசிங்கவும் தற்போது 70வயதை தாண்டிய பின்னரே ஜனாதிபதியாகி இருக்கிறார்.
எனவே 2948இல் நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கான வேலைத்திட்டத்தை முடித்துவிட்டே நின்றுவிடுவார் என்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான சாகல ரத்நாயக்க உரையாற்றுகையில்,
அரசாங்கம் மாறும்போது கொள்கைகளை மாற்றுவது அன்றிலிருந்து இன்றுவரை இருக்கும் பலவீனம். 2019ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு சென்றபோது, முதன்மைக் கணக்கில் மேலதிகம் இருந்தது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கொள்கைகள் மாறின. இது நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்தியது.
நெருக்கடியான நேரத்தில், அவர் மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் தலைகீழாக இருந்த வரிக் கொள்கையை மறுசீரமைத்தார்.வரிக் கொள்கையைப் மாற்றினோம். மறைமுக வரிகள் அதிகரிக்கும் போது மக்கள் அனைவரும் அதை செலுத்துகிறார்கள். அதை மாற்றும் போது வலிக்கிறது. தயக்கத்துடன், நாங்கள் அதை செய்ய வேண்டியிருந்தது. எரிவாயு மற்றும் எண்ணெய் வரிசைகளை அகற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தார். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொருளாதாரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்நியச் செலாவணியைப் பாதுகாக்க இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பணவீக்கம் 70 சதவீதமாக இருந்த ஒரு நாட்டை ஜனாதிபதி பொறுப்பேற்றார். கடந்த மாத இறுதியில், பணவீக்கம் 50 சதவீதமாக கொண்டு வரப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள், பணவீக்க விகிதத்தை ஒற்றை இலக்கமாகக் குறைக்க முயற்சித்து வருகிறோம் பொருட்களின் விலையும் குறைகிறது. எண்ணெய் விலை மேலும் குறையும். இன்னும் சில நாட்களில் எரிவாயு விலை மேலும் குறையும். சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்கனவே செய்துள்ள ஒப்பந்தங்கள் காரணமாக நாட்டு மக்களுக்கு இவ்வாறான பலன்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன என்றார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உரையாற்றுகையில்,
ஐக்கிய தேசிய கட்சி வீழ்ச்சி கண்டிருந்த போதும் கட்சியுடன் இணைந்திருந்தோரே இங்கு அதிகளவில் கூடியிருக்கின்றனர்.1994க்குப் பிறகு ஏறக்குறைய முப்பது வருடங்களாக உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் ஒருவரை கண்டு அஞ்சின. அது தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே. அவரை வீழ்த்த எல்லா வழிகளிலும் முயன்றனர்.
இந்நாட்டைக் கட்டியெழுப்ப முயன்ற எமது கட்சின் தலைவர்கள் பலரும் எதிர்பாராத விதத்தில் மரணம் அடைந்தனர். பிரேமதாச, லலித் அத்துலத்முதலி, காமினி திஸாநாயக்க போன்ற தலைவர்கள் வீதிகளில் கொல்லப்பட்டனர். ஆனாலும் ரணில் விக்ரமசிங்க என்ற ஒரு தலைவர் மிஞ்சி இருந்தமையாலேயே இன்று கொழும்பை சுற்றி இடம்பெறும் மே தினக் கூட்டங்களுக்கு வருவதற்கு மக்களுக்கு எரிபொருள் கிட்டியது. அத்தோடு இன மத பேதங்கள் அற்ற தலைவரான ரணிலை ஆசியாவின் உச்சியில் அமர்த்த வேண்டியது எமது கடமையாகும்.
முழு பாராளுமன்றமும் அரச செயற்பாடுளில் ஈடுபடும் வகையிலான முறையொன்றினை உருவாக்க அவர் முயற்சிக்கிறார். டீ. எஸ் சேனாநாயக்கவும் இந்நாட்டவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டுதான் சுதந்திரத்தைப் பெற்றார். அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதியின் வீட்டிற்கு தீயிட்டாலும் அவர் முடங்கிப் போய்விடவில்லை. அதனால் 2048 என்ற இலக்கை நோக்கி முன்னேறுவோம் என்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார உரையாற்றுகையில்,
சவால்கள் எதிர்கொள்ளும் போது அதிகமான அரசியல் கட்சிகள் அவற்றில் இருந்து தப்பித்துச் செல்வதுண்டு. ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் சவால்களை ஏற்றுக்கொண்டு சவால்களை வென்றெடுத்துள்ளது. சவால்களை ஏற்று சவால்களை வெல்வதற்கு வரலாற்றில் எமது தலைவர்களுக்கு எமது கட்சி தலைமைத்துவம் வழங்கியது.
அன்று தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி பதவியை வழங்குவதற்கு இந்நாட்டு மக்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், தனக்கு ஜனாதிபதி பதவி தராததால் அவர் மக்களை வெறுக்கவில்லை. சகித்துக்கொண்டு நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்தவர். 2001ல் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ந்திருந்தது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக நாட்டை பொறுப்பேற்றார். பொருளாதார வளர்ச்சி மறை 1.5க்கு சரிந்திருந்த நிலையில் மூன்று மாதங்களில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்து முன்னேற்றினார். 2015ல் கூட பிரதமராக நாட்டை சரியாக நிர்வகித்து நாட்டை அபிவிருத்தி செய்தார். 2022 ஆம் ஆண்டு வங்குரோத்தடைந்த அரசை சரியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் சவாலை ஜனாதிபதியாக ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த சவால்கள் அனைத்தையும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
2048ல் நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதே எமது இலக்காகும். இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்கள் திட்டம் வகுத்துள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு எந்தத் தலைவருக்கும் இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் தொலைநோக்குப் பார்வை இல்லை. இவ்வளவு தியாகம் செய்யும், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் வேறு யாரும் இல்லை. 2048க்குள் கண்டிப்பாக வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்கும் இலக்கை அடைவதற்கான திட்டத்தை நிறைவேற்ற அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM