யாழ்ப்பாணத்தின் மேற்கு பகுதியான மூளாய், தொல்புரம், சுழிபுரம், பண்ணாகம் ஆகிய கிராமங்களில் உள்ள கூட்டுறவில் அனுபவமுள்ள 31 பெருமக்கள் எடுத்த பெரும் முயற்சியினால் 1935ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 24ஆம் திகதி தென் கிழக்காசியாவில் முதல் முதலில் கூட்டுறவு முறையில் அமைக்கப்பட்டதே எமது மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை ஆகும்.
இந்த வைத்தியசாலையின் சேவைகளையும் வளர்ச்சியையும் கண்ட அயல் கிராமத்து மக்களும்; சேவையை பெற்றுக்கொள்ளத் தொடங்கி வட்டுக்கோட்டை, அராலி, பண்டத்தரிப்பு, சித்தன்கேணி, மாதகல், நெல்லியான், காரைநகர் கிராமத்தவர்களும் இதன் அங்கத்தவர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
இலங்கையில் 1919ஆம் ஆண்டு 7ஆம் இலக்கச் சட்டத்துடன் இந்த கூட்டுறவு இயக்கம் வேலை செய்யத் தொடங்கியது. அன்றிலிருந்து யாழ்ப்பாணமே கூட்டுறவு முயற்சியின் பிரதான தளமாக இயங்கிவருகிறது.
மக்களால், மக்களுக்காக உருவாக்கப்பட்ட இவ்வைத்தியசாலை ஆரம்பகாலத்தில் அதன் செயற்பாடுகளும், கட்டமைப்பும் பல தரப்பட்டவர்களிடமிருந்தும், மலேசியாவிலிருந்தும் பெறப்பட்ட நிதி மற்றும் அரசு வழங்கிய நன்கொடையின் மூலம் மேம்படுத்தப்பட்டன.
1953ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த நடிகர் திலகம் பத்மஸ்ரீ Dr. சிவாஜி கணேசன் மூலமாக வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு நிதி திரட்டும் முகமாக ஐப்பசி மாதம் 28ஆம் திகதி யாழ். நகர மண்டபத்தில் 'என் தங்கை' எனும் நாடகம் நடிகர் திலகத்தின் குழுவினரால் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் ஊடாக திரட்டப்பட்ட முழு நிதித் தொகையையும் நடிகர் திலகம் இந்த வைத்தியசாலையின் நிர்வாகத்தினருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
அவ்வேளை அவரால் வழங்கப்பட்ட நிதி பேருதவியாக இருந்தது. எமது மூதாதையர்கள் இந்த நிதி வழங்கல் பற்றியும், அவரது பரோபகாரம் பற்றியும் பாராட்டி மகிழ்ந்ததை நாங்கள் அறிந்துள்ளோம்.
அந்த நாடக நிகழ்வின் முடிவில் மூளாய் வைத்தியசாலை தலைவர் மு.சங்கரப்பிள்ளை திரு. சிவாஜி கணேசனின் சேவையினை பாராட்டினார்.
“திரு. கணேசனை ஒரு நடிகர் என்ற வகையில் நாம் அறிந்திருந்தோம். ஆனால், அவர் நடிகர் மட்டுமல்ல, தமிழ் மக்களுக்காக பணிபுரிவதில் பற்றுடையவரும், சிறந்த அறிவாளியுமாவார் என்பதை இப்பொழுது தெரிந்துகொண்டோம்” என அவர் பாராட்டு தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து பேசிய நடிகர் திலகம், தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்ததோடு, நாடக கலையின் மீதுள்ள ரசிப்புத்தன்மை, நாடகத்தை காணத் துடிக்கும் யாழ்ப்பாண மக்களின் ஆர்வத்தை நான் தமிழகத்தில் உள்ள ஏனைய நாடக நண்பர்களிடம் கூறி பெருமைப்படுவேன் என கூறினார்.
யாழ்ப்பாண மண்ணின் மக்கள் எவ்வளவு கலை ஆர்வம் உடையவர்கள் என்பதை நன்கு அறிவேன் என எமது மக்களை பெருமைப்படுத்தியும் உரையாற்றினார்.
வைத்தியசாலைக்கு நடிகர் திலகம் வருகை தந்து 70ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்திருந்தார், நடிகர் திலகத்தின் மகன் திரு. சிவாஜி கணேசன் ராம்குமார்.
தனது தந்தை வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு உதவியதை நினைவுகூர்ந்து ராம்குமார் எமது வைத்தியசாலைக்கும் வருகையளித்தார்.
அவரது கரங்களாலேயே தந்தையான நடிகர் திலகத்தின் நினைவுக்கல் ஒன்றும் நாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1935 - 1975 ஆண்டுகாலப் பகுதி இவ்வைத்தியசாலையின் பொற்காலம் என குறிப்பிடலாம். இக்காலத்தில் எமது நாட்டு இரண்டு ஜனாதிபதிகள், மூன்று பிரதமர்கள், எட்டு அமைச்சர்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பிரமுகர்கள், கூட்டுறவு நிர்வாக அதிகாரிகள் வருகை தந்து எமது வைத்தியசாலையின் செயற்பாடுகளை பார்வையிட்டு, தத்தமது பிரதேசங்களில் கூட்டுறவு வைத்தியசாலையினை உருவாக்குவதற்கு இந்த வைத்தியசாலையின் கட்டமைப்பை உதாரணமாக கொண்டு செயற்படுகின்றனர்.
அக்காலத்தில் இந்த வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்திய நிபுணர்களது அளப்பரிய சேவையே இன்றும் இந்த வைத்தியசாலை நிலைத்திருப்பதற்கு காரணம் என கூறலாம்.
1975ஆம் ஆண்டின் பின்னர் வைத்தியசாலையின் நிர்வாகத்தில் ஏற்பட்ட அரசியல் தலையீடு காரணமாகவும், அப்போது இருந்த உள்ளூர் அரசியல்வாதிகளினது செயற்பாடுகளினாலும், வைத்திய அதிகாரிகளின் புலம்பெயர்வினாலும் இந்நிறுவனமானது ஒரு தேக்க நிலையை அடைந்தது. இதனால் 1985ஆம் ஆண்டு வைத்தியசாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வட இலங்கை மருத்துவ கல்லூரியின் தொடக்க செயற்பாட்டுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இந்த மருத்துவக் கல்லூரிக்கு அரசின் அங்கீகாரம் இன்மையால் முயற்சி தடைப்பட்டது. மீண்டும் வைத்தியசாலையானது நிர்வாகத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட போர்ச் சூழ்நிலை, இடப்பெயர்வு என்பவற்றால் தளபாடங்கள், கட்டடங்கள் என்பனவற்றுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது.
இடம்பெயர்வின் பின் மீண்டு வந்து இந்த வைத்தியசாலையை மீள் இயக்குவதற்காக வெளிநாட்டு, உள்நாட்டு பிரமுகர்களிடம் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தூதராலயங்கள் மூலமாகவும் பெறப்பட்ட நிதி, பொருட்களைக் கொண்டு வைத்தியசாலையை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவற்றில் பிரதானமாக கலிஃபோனியாவில் உள்ள TRRO, இரத்தினம் அறக்கட்டளை (இங்கிலாந்து), இங்கிலாந்து தமிழ் மருத்துவ நிறுவனம், மனிதநேயம் அமைப்பு, காரை அபிவிருத்தி சங்கம் முதலிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கன.
இதன் மூலம் வைத்தியசாலை 2005ஆம் ஆண்டிலிருந்து 24 மணிநேர சேவையினை மக்களுக்கு வழங்கி வருகிறது.
எமது வைத்தியசாலையில் தற்போது பின்வரும் சேவைகள் இடம்பெறுகின்றன. வெளிநோயாளர் பகுதி, ஆய்வுக்கூடம், மருந்தகம், வீட்டுக்குச் சென்று நேரடி வைத்திய சேவை, விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு, சத்திர சிகிச்சைப் பிரிவு, சகல விசேட வைத்திய நிபுணர் சேவைகள், மகப்பேற்றின்மைக்கான வைத்தியம், நீரிழிவு, உள்ளக நோயாளர் விடுதி, கதிரியக்கவியல் பிரிவு, Scanning, குடும்ப நல வைத்திய சேவை, இலவச மருத்துவ முகாம்கள், நோயாளர் காவு வண்டி 24 மணிநேர சேவை, முதியோர் கவனிப்பு நிலையம் என்பவற்றுடன் வசதி குறைந்த குழந்தை பாக்கியம் அற்றவர்களுக்காக 'தாய்மை' என்ற இலவச நிதியத்தின் மூலம் சிகிச்சை நாடி வருவோர் வைத்தியம் செய்துகொள்வதற்கான செலவுகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். மேலும், இச்சேவைகளை மேம்படுத்த வேண்டியுமுள்ளது.
மக்களிடையே ஏற்படும் தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மக்களின் நிதிப் பங்களிப்புடன் வட்டுக்கோட்டையில் 'சுகம் பேணும் நிலையமொன்றை' ஏற்படுத்தி செயற்படுத்துகிறோம். அதேபோன்று அயல் கிராமமான காரைநகரிலும் சுகம் பேணும் நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
யாழ்ப்பாணத்தில் எமது வைத்தியசாலையின் ஒரு கிளை நிறுவனம் அமைக்கப்பட்டு, அங்கு பிரத்தியேகமாக குழந்தைப்பேறு சம்பந்தமான சிகிச்சை, வெளிநோயாளர் பிரிவு, நிபுணத்துவ வைத்தியர் ஆலோசனைகள் ஆகிய பிரிவுகள் இயங்கப்படுகின்றன.
எமது நோயாளர் காவு வண்டி சேவையினையும், நடமாடும் வைத்தியச் சேவையையும் விரிவுபடுத்தி செல்வதற்கென இரண்டு நோயாளர் காவு வண்டிகள் ஜப்பான் தூதரகத்தினால் அன்பளிப்பாக கிடைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு வளர்ச்சியுற்று வரும் கூட்டுறவு வைத்தியசாலைச் சங்கம் மென்மேலும் வளர்ச்சியடைந்து பல துறைகளிலும் மக்களுக்கு சேவையாற்றும் என்பது திண்ணம்.
இந்த நற்சேவையை கூட்டுறவு வைத்தியசாலையின் அங்கத்தவர்களே கூட்டுறவுச் சட்டம், யாப்பு விதிகளுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தி செயற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், யாழ். மண் கூட்டுறவுத் துறையின் முன்னோடியானது என கூறினால் மிகையாகாது.
"கூட்டுறவே நாட்டுயர்வு!"
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!"
- கா.பார்த்தீபன்
செயலாளர், கூட்டுறவு வைத்தியசாலைச் சங்கம் (வ-து) - மூளாய்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM