'அயோத்தி' ஐம்பதாவது நாள் விழா- விருதுடன் கொண்டாட்டம்

Published By: Ponmalar

21 Apr, 2023 | 04:18 PM
image

அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் 'கிராமத்து நாயகன்' சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வெளியான 'அயோத்தி' திரைப்படத்தின் 50 ஆவது நாளை முன்னிட்டு, படத்தில் பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கி படக்குழுவினர் கொண்டாடினர்.

இன்றைய சூழலில் தமிழ் திரையுலகில் ஒரு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுவது என்பது கடினமானது.

இந்த கடினமான வெற்றியை அறிமுக இயக்குநரான மந்திரமூர்த்தி தன் முதல் படைப்பான 'அயோத்தி' மூலம் சாதித்திருக்கிறார்.

மனிதநேயத்தை உரத்து சொல்லியிருக்கும் இந்த திரைப்படம்... தற்போதைய மதவெறுப்பு அரசியல் நிலவும் காலகட்டத்தில் தேவையான படைப்பும் கூட. இந்த திரைப்படத்தின் வெற்றியை பட குழுவினர் சென்னையில் உள்ள கமலா திரையரங்கவளாகத்தில் கொண்டாடினர்.

இதன் போது படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மூத்த நடிகை ரோஹிணி, மூத்த இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, மூத்த நடிகர் ராஜேஷ், நடிகர் அஸ்வின் குமார், இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி, நடிகர் சாந்தனு உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படக்குழுவினருக்கு விருதினை வழங்கினர்.

இதன் போது படத்தின் நாயகனும், தயாரிப்பாளரும், இயக்குநருமான சசிகுமார் பேசுகையில், '' படத்திற்கு முறையான விளம்பரம் செய்யவில்லை என்றாலும், ஊடகங்கள் மூலமாக இப்படத்தை பற்றிய நேர் நிலையான விமர்சனம் வெளியான பிறகு பலரும் இப்படத்தை பார்த்து பாராட்டினர்.

இப்படத்தின் கதையை இயக்குநர் விவரித்த போதே இதன் நிஜ ஆழம் எமக்கு புரிந்தது. மறைந்த இயக்குநர் மகேந்திரன், 'நண்டு' என்ற ஒரு படத்தை இயக்கியிருப்பார்.

அந்த திரைப்படத்தில் ஹிந்தி பேசும் கதாபாத்திரங்கள் இருக்கும். 'அயோத்தி' படத்தில் இடம்பெற்ற விடயத்தை அவர் அந்த காலகட்டத்திலேயே மேற்கொண்டார்.

இந்தத் திரைப்படம் வெளியான பிறகு ரஜினி சார் பாராட்டினார். நண்பர் சிம்பு பாராட்டினார். இனிமேல் எம்மாதிரியான படம் செய்ய வேண்டும் என்பதனை ரசிகர்கள் எமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்