(எம்.எம். சில்வெஸ்டர்)
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களின் உண்மைத் தன்மையை கண்டறிந்து, மிலேச்சத்தனமான செயலை செய்த சூத்திரதாரிகள் மற்றும் குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டுவர வேண்டும்.
அவ்வாறு செய்யாதுபோனால், சுதந்திரமாகவும், அரசியல் பாதுகாப்புடன் பல்வேறு சலுகைகளையும் அனுபவித்து வருபவர்கள் இது போன்ற இன்னும் பல குற்றங்களை செய்வதற்கு தயங்க மாட்டார்கள் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று 4 ஆண்டுகளாகிறது. எவ்வளவு காலம் சென்றாலும், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வரும் எமது போராட்டத்தை கைவிட்டு விட்டால், இந்நாட்டில் ஒரு ஆபத்தான முன்னுதாரணம் கட்டியெழுப்பட வாய்ப்பாக அமைந்துவிடும் என நம்புவதாககவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்றைய தினம் காலை 8.30 மணி முதல் காலை 9 மணி வரை நீர்கொழும்பு - கொழும்பு வீதியின் இருமருங்கிலும், எம்மால் முன்னெடுக்கப்படும் 'மக்கள் மதில்' பேரணியில் இன,மத, மொழி, கட்சி வேறுபாடின்றி கலந்துகொண்டு, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வரவும், குண்டுத்தாக்குதல்களில் பலியான மற்றும் படுகாயமடைந்தவர்களை நினைவும் கூரவும் ஒன்றுபடுமாறு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நாட்டின் சகல மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பு பேராயர் இல்லத்தில் திங்கட்கிழமை (17) நண்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
"இந்நாட்டின் சுயாதீனத்தன்மை, நீதி மற்றும் நியாயத்துடன் இருக்ககூடிய சமூகமொன்றை கட்டியெழுப்புதல் முக்கியமானதாகும் என்பதை எமது நாட்டின் அரசியல் தலைவர்களுக்கு காட்டப்பட வேண்டியது அவசியமாகும்.
இதற்காக நாம் ஜாதி, மத மற்றும் இன வேறுபாடுகளை கைவிட்டு, தாய் நாட்டை நேசிக்கும் பிரஜைகளாக ஒன்றாக இணைய வேண்டியது அவசியமான விடயமாகும்.
இதற்காக, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூரும் நான்காம் ஆண்டு நிகழ்வுகள் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் எதிர்வரும் 21 ஆம் திகதியன்று இலங்கை கத்தோலிக்க திருச்சபையால் விசேட ஆராதனைகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.
அன்றைய தினம் காலை 7 மணி முதல் காலை 8 மணி வரை உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்காகவும் அவர்களது குடும்பங்களுக்காகவும் விசேட வழிபாடுகள் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஒப்புக்கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் பின்னர் காலை 8.30 மணிக்கு கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலத்திலிருந்து நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் வரையிலான நீர்கொழும்பு வீதியின் இருமருங்கிலும் 'மக்கள் மதில்' அமைத்து உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுவதுடன், மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்களை சட்டத்திற்கு முன் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக நாட்டின் அனைத்து மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். மேலும், பொது மக்கள் போக்குவரத்திற்கு எதுவித இடையூறுகளும் ஏற்படாத வண்ணம் இந்த 'மக்கள் மதில்' வேலைத்திட்டத்தில் பங்ககேற்கவும். இதன்போது, காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்படும்" என்றார்.
வீடுகளிலும், அலுவலகங்களிலும், வேலைத்தளங்களிலும் உள்ளவர்களும் அன்றைய தினம் காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலியை செலுத்தும்படி மெல்கம் கர்தினால் ரஞ்தித் ஆண்டகை கேட்டுக்கொண்டார்.
உயிர்த்த ஞாயிறு தினமான 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதியன்று கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலம், கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயம், சீயோன் தேவாலயம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 272 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததுடன், இன்னமும் பலர் படுக்கைகளில் தமது காலத்தை கழித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
"உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் மட்டுமல்ல, கடந்த காலங்கள் முழுவதும் இடம்பெற்ற அரசியல் கொலைகள், ஆள்கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டோர்கள், அத்துடன் இனவெறி மற்றும் மத வெறியை தூண்டுத் போன்ற பாரிய குற்றங்களின் உண்மையை மறைத்து, சட்டம் மற்றும் நீதி ஆகியவற்றை நடைமுறைப்படுத்தப்படுவதை தவிர்த்துள்ளமையானது தமது அரசியல் அதிகாரத்திற்காக ஆகும்.
தங்களை ஆட்சிக்கு கொண்டு வரவும், தங்கள் ஆட்சி அதிகாரத்தை பாதுகாப்பதற்காகவும் ஊழல் நிறைந்த அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செய்துள்ளமையை இந்நாட்டு மக்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியது நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமான விடயமாகும்" என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM