(எம்.மனோசித்ரா)
இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளுக்கிடையிலான போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ளது. இதில் பக்க சார்பின்றி இலங்கை மௌனித்திருக்கும். வல்லரசுகளுக்கிடையிலான போட்டியிலிருந்து இலங்கையை விலக்கி வைத்திருப்பதற்கே தான் முயற்சிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வல்லரசுகளுக்கிடையிலான இப்போட்டி நிலைமையானது எதிர்காலத்தில் பிராந்தியத்தில் எவ்வாறான நிலைமையை ஏற்படுத்தும் என்பதை ஊகிக்க முடியாது என்பதால் , அனைத்திற்கும் தயாராகும் வகையில் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பலம்மிக்க முப்படையை உருவாக்குவதற்காக 'பாதுகாப்பு 2030' செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அநுராதபுரம் விமானப்படை தளத்தில் இன்று சனிக்கிழமை முப்படையினர் மற்றும் பொலிஸார் மத்தியில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான முதற்படியாக சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் நானும் , பிரதமரும், ஏனைய அமைச்சர்களும் நாட்டுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். பாராளுமன்றத்திற்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தியதன் பின்னர் , கடந்த வாரம் வர்த்தக சமூகத்தினரை சந்தர்ப்பதற்கு வாய்ப்பு கிட்டியது. இன்று பாதுகாப்பு படையினரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.பல்கலைக்கழகங்களின் பொருளாதார விரிவுரையாளர்களை சந்திக்கவுள்ளேன். இம்மாதம் இது தொடர்பில் அனைவருக்கும் தெளிவுபடுத்த எதிர்பார்த்துள்ளோம்.
நாட்டில் பெரும் நெருக்கடி நிலவிய நிலையில் கடந்த ஆண்டு ஜூலை நான் ஜனநாதிபதியாக பொறுப்பேற்றேன். இது தொடர்பில் புதிதாகக் கூற வேண்டியதில்லை. இறுதியில் பாராளுமன்றத்தையும் சுற்றி வளைக்க முற்பட்டனர். அது நடந்திருந்தால் இன்று நாட்டில் நிர்வாகமொன்று இருந்திருக்காது. நாடு அராஜகமடைந்து சட்டவாட்சி கேள்விகுள்ளாக்கப்பட்டிருக்கும். நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டி பொருளாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய சூழல் காணப்பட்டிருக்காது.
அன்று பொலிஸார் எடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி கூறுகின்றேன். அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்காவிட்டால் இன்று இந்த சூழல் காணப்பட்டிருக்காது. நீங்கள் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியமையால் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து பேச சந்தர்ப்பம் கிடைத்தது. கடனை மீள செலுத்த முடியாத நாடு என்பதால் இலங்கையுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட வேண்டாம் என்ற நிலைமை காணப்பட்டது. எனவே அந்த நிலைமையிலிருந்து மீள வேண்டியதே முக்கியமாகக் காணப்பட்டது.
எவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் அவற்றிலிருந்து மீள வேண்டும். சுயாதீனம் என்பது அரசியல் சுயாதீனம் மாத்திரமல்ல. விடுதலைப்புலிகள் அமைப்பினை இல்லாதொழிப்பது மாத்திரம் சுயாதீனம் அல்ல. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி அதனையும் உறுதிப்படுத்த வேண்டும். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் சிறு சிறு பயங்கரவாத செயற்பாடுகள் பதிவாகியுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் போன்றவை இதற்கு உதாரணமாகும். இவை மீண்டும் இடம்பெறாமையை உறுதிப்படுத்த வேண்டும்.
இவற்றுக்கு அப்பால் தற்போது பிராந்தியத்தில் வல்லரசுகளுக்கிடையிலான போட்டிகள் தீவிரமடைந்துள்ளன. ஆரம்பத்தில் இப்போட்டி தன்மை பசுபிக் சமுத்திரத்தில் காணப்பட்ட போதிலும் , தற்போது இந்து சமுத்திரத்திலும் தாக்கம் செலுத்துகின்றது. எவ்வாறிருப்பினும் வல்லரசுகளுக்கிடையிலான போட்டியில் இயன்றவரை இலங்கையை விலக்கி வைத்திருக்கவே முயற்சிக்கின்றேன். இவ்வாறான நிலைமைகளின் கீழ் நாம் எவ்வாறு முன்னேறிச் செல்வது என்பதற்கு முக்கியத்துவமளிக்க வேண்டும்.
ஏற்பட்டுள்ள வல்லரசுகளுக்கிடையிலான போட்டி நிலைமை உலகில் எதிர்காலத்தில் எவ்வாறான நிலைமையை தோற்விக்குமெனத் தெரியாது. எனவே எதிர்காலத்தில் எமது தடைப்படைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டிய நிலைமை கூட ஏற்படலாம். இதனைக் கருத்திற் கொண்டு 'பாதுகாப்பு 2023' என்ற செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் தற்போதுள்ளதை விட வேறுபட்ட பலம் மிக்க முப்படை உருவாக்கப்படும். அவை நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM