(நா.தனுஜா)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவினால் அடையாளங்காணப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ள சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள், அக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்துமாறும் கோரியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை தொடர்பான 6 ஆவது மீளாய்வுக்கூட்டம் மார்ச் மாதம் 7 - 8 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இம்மீளாய்வின்போது இலங்கை தொடர்பில் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் எதிர்வருங்காலங்களில் இலங்கையால் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய பரிந்துரைகள் என்பவற்றை உள்ளக்கிய ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 12 பக்க இறுதி அறிக்கை கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
அவ்வறிக்கையில் இலங்கை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களை வரவேற்பதாகவும், கடந்தகால மீறல்களுடன் தொடர்புடையவர்களைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கும் அனைத்து இலங்கையர்களினதும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதற்கும் அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் எனவும் சர்வதேச ரீதியில் மனித உரிமைகளை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி இயங்கிவரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவை மற்றும் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையம் என்பன வலியுறுத்தியுள்ளன.
குறிப்பாக இலங்கையில் பலவருடகாலமாகத் திட்டமிட்ட வகையிலான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுவருவது ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் அறிக்கையின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் 'தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் சமூகத்தைச்சேர்ந்த சந்தேகநபர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட வகையில் நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் என்பன தொடர்பில் இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை.
அதேபோன்று அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்புத்தரப்பினரால் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் முக்கிய மனித உரிமைகள் வழக்கு விசாரணைகளுக்குத் தடையேற்படுத்தப்பட்டுள்ளன.
போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்குப் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டிருக்கும் அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிப்படுத்துவதில் எவ்வித முன்னேற்றமும் அடையப்படவில்லை' என்பன தொடர்பில் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு அவதானம் செலுத்தியிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு இத்தகைய மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து அவதானம் செலுத்தப்படாமல் இருப்பது இனியும் தொடரக்கூடாது எனவும், இவ்விவகாரங்களை உரியவாறு கையாள்வதற்கும், இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கும், அனைத்து இலங்கையர்களினதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை இதுகுறித்துக் கூட்டாகக் கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவை மற்றும் மனித உரிமைகள், அபிவிருத்திக்கான நிலையம் என்பன, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் இலங்கை அரசாங்கத்தினால் மீறப்பட்டிருப்பதை அடிக்கோடிட்டுக்காண்பிக்கும் வகையில் ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவினால் கண்டறியப்பட்டுள்ள விடயங்களை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளன.
அதுமாத்திரமன்றி அம்மீளாய்வுக்குழுவினால் கண்டறியப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும், அக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்துமாறும் அவ்விரு அமைப்புக்களும் வலியுறுத்தியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM