ஆர் . பி. என்.
இஸ்ரேலில் அண்மைய காலமாக தொடர்ந்த போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் சற்று ஓய்ந்து இனம் புரியாத ஓர் அமைதி தோன்றியுள்ளது.
நீதி அமைப்பை மாற்றியமைப்பதற்கான சர்ச்சைக்குரிய திட்டங்களின் முக்கிய பகுதியை தாமதப்படுத்துவதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்ததை அடுத்தே இஸ்ரேலில் அமைதி திரும்பியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு அவர் உரையாற்றுகையில் "எங்கள் மக்களிடையே பிளவு ஏற்படுவதை" தடுக்க சட்டத்தை இடைநிறுத்துவதாக (தாமதிப்பதாக) கூறினார். இருப்பினும், இந்த நடவடிக்கை காலம்கடத்துவதைத் தாண்டி எதனை சாதிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று பலரும் விமர்சிக்கின்றனர் .
நீதி அமைப்பை மாற்றியமைப்பதற்கான சர்ச்சைக்குரிய திட்டங்களுக்கு எதிராகப் பேசிய தனது பாதுகாப்பு அமைச்சரை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, திடீரென பதவி நீக்கியதைத் தொடர்ந்து தீவிரமான எதிர்ப்பு அலையை அவர் எதிர்நோக்க நேர்ந்தது.
நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இதனால் பிரதான விமான நிலையம், கடைகள் மற்றும் வங்கிகள், வைத்தியசாலைகள் என அனைத்தும் செயலிழந்தன. நாடே முடங்கியது.
இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக், சீர்திருத்தம் இடைநிறுத்தப்பட்டது "செய்யவேண்டிய சரியான விடயம்" என்று கூறினார். குறித்த திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் முன்பே கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை எதிர்க்கட்சித் தலைவர் Yair Lapid, "நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய நெருக்கடி" என்று வர்ணித்துள்ளார். மேலும் சீர்திருத்தங்களை கைவிட பிரதமர் நெதன்யாகுவை நிர்பந்திக்கும் வகையில் இந்த வாரம் ஒருங்கிணைந்த போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இஸ்ரேலின் வலதுசாரி அரசாங்கம், நீதிபதிகளை நியமிக்கும் குழுவின் மீது தீர்க்கமான கட்டுப்பாட்டை எடுக்க முயல்கிறது. இந்தச் சீர்திருத்தங்கள், நீதிமன்றத் தீர்ப்புகளை அடிப்படைப் பெரும்பான்மையுடன் புறக்கணிக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும். மேலும் பிரதமர் ஒருவரை பதவிக்குத் தகுதியற்றவர் என்று அறிவித்து அவரை ஆட்சியில் இருந்து அகற்றுவது கடினமாகிவிடும். ஆனால் பிரதமர் நெதன்யாகு, இந்த மாற்றங்கள் நீதிமன்றங்கள் தங்கள் அதிகாரங்களை மீறுவதைத் தடுக்க உதவும் என்று கூறுகிறார்.
எனினும், பிரதமர் நெதன்யாகு, ஊழலுக்கு எதிரான விசாரணையை எதிர்கொள்வதால் அவருக்கு இது வாய்ப்பாக அமையும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர் . பிரதமர் நெதன்யாகு ஊழல், லஞ்சம், நம்பிக்கைமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார் . அதேவேளை தாம் எந்த தவறும் செய்யவில்லை என்றும் தாம் பலிக்கடாவாகி விட்டதாகவும் கூறுகிறார்.
முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் ஜனவரி 4 அன்று அறிவிக்கப்பட்டதில் இருந்து பெரும்பாலும் அனைத்து பகுதிகளிலும் இராணுவத்தினர் உட்பட இஸ்ரேலிய சமூகத்தினர் மத்தியில் அது மிகுந்த கோபத்தை தூண்டிவிட்டுள்ளது.
இதனை அடுத்து இறுதியாக கடந்த திங்கட்கிழமை இரவு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ''தீவிரவாத சிறுபான்மையினர்" நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். இருந்த போதிலும் குறித்த இந்த சீர்திருத்த சட்டமூலத்தை அவரது சொந்த கட்சியே அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் இஸ்ரேலின் எதிர்க்கட்சிகள் புதிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக கூறியுள்ளன.
இந்த சூழ்நிலையில், பாராளுமன்றம் மீண்டும் ஏப்ரல் இறுதியில் ஆரம்பமாகும்போது எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை "யூத சக்தியின்" தலைவரான இடாமர் பென்-க்விர், சீர்திருத்த தாமதத்தை தாம் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார் . ஏனெனில் அதற்கு ஈடாக , பிரதமர் நெதன்யாகு தனது தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தை நெசட்டை சூழ ஜெருசேலமின் மத்தியில் ஒரு புதிய "தேசிய காவலர் " பொறுப்பில் விடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
இவ்வாறன போராட்டங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இஸ்ரேலில் ஒருவித குழப்பகரமான, ஏட்டிக்கு போட்டியான போக்குகளை காணமுடிகிறது. இவற்றுக்கு இடையே எதிர்க்கட்சித் தலைவர் லாபிட், சர்ச்சைக்குரிய திட்டங்களின் முக்கிய பகுதியை தாமதப்படுத்துவதாக பிரதமர் கூறியுள்ளதை எச்சரிக்கையுடன் வரவேற்றுள்ளதுடன், அரசாங்கம் ஒரு உண்மையான மற்றும் நியாயமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், இந்த நெருக்கடியிலிருந்து நாம் வெளிவர முடிவதுடன் மேலும் வலுவாகவும் ஐக்கியமாகவும் ஒன்றாகவும் வாழமுடியும். மேலும் சிறந்த தருணமாக இதனை மாற்றியமைக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான இஸ்ரேல், மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரமன்றி அதன் சக்திவாய்ந்த இராணுவம் உலகிற்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளது என்பதே பொதுவான அபிப்பிராயம். எனினும் தற்போது அங்கு தோன்றியுள்ள நிலைமை எங்கே அதன் ஸ்திரத்தன்மைக்கும், வலுவான ஐக்கியத்துக்கும் வேட்டு வைத்துவிடுமோ என்ற எண்ணத்தையே மேலோங்க செய்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM