சென்னை தமிழிசைச் சங்கம் - சிங்கப்பூர் கலாமஞ்சரி (தமிழ் இணைப் பரப்பு மன்றம்) தமிழ் இசைப் பயிற்றுவிக்கும் நிறுவனம் செய்துகொண்ட 'புரிந்துணர்வு கையொப்பமிடல்' நிகழ்ச்சி கடந்த மார்ச் 20ஆம் திகதி சிங்கப்பூர் தேசிய வாரியக் கட்டடத்தின் பொசிபிளிட்டி அறையில் இனிதே நடைபெற்றது.
இவற்றின் தமிழிசைப் பயணம் பற்றிய விளக்கப் படக்காணொளி சிறப்பாக தயாரிக்கப்பட்டு, நல்ல அரிய பல வரலாற்றுச் செய்திகள் மக்களிடம் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
இதன்போது பேராசிரியர் சுப. திண்ணப்பன் தனது தலைமையுரையில், தமிழிசையின் தொன்மை, வழமை, நன்மைகளை பட்டியலிட்டு இந்நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததென பாராட்டிப் பேசினார்.
தமிழிசையை பாடுவது அருகிவரும் இக்காலத்தில் அவ்விசையை மீட்டெடுக்கும் முயற்சி மிகுந்த பாராட்டுக்குரியது எனவும் குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினராக இந்திய மரபுடமைக் கழகத்தின் தலைவர் மற்றும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஆர். இராஜாராம் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.
அவர்தம் உரையில், விழாவின் நோக்கத்தையும், மேலும் இதற்காக கலாமஞ்சரி அமைப்பு தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு மேன்மையடைந்த விதத்தை பற்றியும் குறிப்பிட்டார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சிங்கையில் கலாமஞ்சரி அமைப்பினரால் சென்னை தமிழிசைச் சங்கத்தின் மூலம் தமிழ் இசையில் நிகர்நிலைப் படிப்புகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிட இயலும் என்பது மகிழ்ச்சிக்குரியது என்றும் கூறினார்.
அதனை தொடர்ந்து இசையறிஞர் அரிமளம் பத்மநாபன் தனது வாழ்த்துரையில், கலாமஞ்சரியின் ஆலோசகராக தான் பங்களிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.
மேலும், இதன் மூலம் வருங்காலத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் உருவாகும் சூழலை தான் மகிழ்வுடன் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு சௌந்தரநாயகி வயிரவன் தனது உரையில், கலாமஞ்சரி அமைப்பானது தமிழிசை மூலம் செய்துவரும் பல நல்ல சமூகப் பணிகளைக் குறிப்பிட்டுப் பேசினார். தாமும் தமக்கு உறுதுணையாக இருந்துவரும் சமூக அமைப்புகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு அத்தருணம் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்த ஒப்பந்தத்துக்கு சாட்சி கையெழுத்திட்ட டாக்டர் வெள்ளையப்பன் மற்றும் டாக்டர் கருணாநிதி ஆகியோர் இந்நிகழ்வில் கெளரவிக்கப்பட்டனர்.
அடுத்து, இசையாசிரியர் உமா பிரகாஷ் தனது மாணவர்களுடன் நேர்த்தியாக சில தமிழிசைப் பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
அதனையடுத்து, சென்னை தமிழிசைச் சங்கத்தின் முதல்வர் டாக்டர் மீனாக்ஷி தனது நன்றியுரையில், தமிழிசையின் முக்கியத்துவத்தையும் பயனையும் குறிப்பிட்டு இந்நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.
நிகழ்வின் ஒலி, ஒளிக் காட்சிகளை நட்சத்திரம் பிரேம்குமார் மற்றும் ஜெயக்குமார் இணைந்து கையாண்டனர்.
விழா நிகழ்ச்சியினை அகிலா முத்து அழகான தமிழில் மிக நேர்த்தியாக தொகுத்து வழங்கினார்.
மிக மகிழ்ச்சியான, நிறைவான நல்ல நிகழ்வு சிங்கைக்கு தமிழிசையின் பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாக நடந்தேறியது!
- முனைவர் பா. ராமநாதன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM