மூச்சுவிட கிடைத்திருக்கும் சந்தர்ப்பம்

Published By: Digital Desk 3

24 Mar, 2023 | 03:06 PM
image

ரொபட் அன்டனி 

பல்வேறு முயற்சிகள்,  பேச்சு வார்த்தைகள்,  சர்ச்சை நிலைகள்,  சவால்கள்,  ராஜதந்திர நகர்வுகள்,  கடந்தவருட கசப்பான அனுபவங்கள், வரிசை யுகம், பற்றாக்குறை, வாழ்க்கை செலவு உயர்வு, உணவுத்தட்டுப்பாடு, கல்வி, சுகாதார துறைகளில் நெருக்கடி என சவால்களுக்கு மத்தியில்    சர்வதேச நாணயம் இலங்கைக்கு 3 பில்லியன் டொலர் கடன் உதவியை வழங்குவதற்கான திட்டத்துக்கு அனுமதி வழங்கிருக்கின்றது.  

இலங்கைக்கு இந்த நீண்ட கால நீடிக்கப்பட்ட கடன் உதவியை வழங்குவதற்கான திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்ற பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜியாவோ நேற்று முன்தினம் நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவுக்கு சமர்ப்பித்திருந்த  நிலையில் அந்த  திட்டத்திற்கு சர்வதேச நாணயத்தின் அனுமதி வழங்கியுள்ளது. 

முக்கிய அடைவுமட்டம் 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு இது மிகப்பெரிய ஒரு வெற்றியாகவே அமைந்திருக்கிறது. முக்கியமாக அரசாங்கத்துக்கு என்று கூறுவதை விட இது நாட்டின் பொருளாதார மீட்சிக்கு கிடைத்த ஒரு வெற்றியாக காணப்படுகிறது.  

சர்வதேச நாணயத்தின் இந்த கடன் உதவி என்பது ஒரு பிணை வழங்கும் செயற்பாடாகவே கருதப்படுகிறது.  எனவே சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி மிக முக்கியமான ஒரு திருப்பு முனையாகும்.    

இலங்கையின் பொருளாதாரம்   நீரில்   மூழ்கியிருக்கின்ற நிலையில் அதனை மீட்டெடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த உதவி கருதப்படுகிறது.  பொருளாதார ரீதியாக மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு மூச்சு விடுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை  சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி   வழங்கி இருக்கின்றது. 

ஜனாதிபதியின் பதில் 

இலங்கைக்கான கடன் உதவி  திட்டத்திற்கு சர்வதேச நாணயம் அனுமதி வழங்கி இருக்கின்றமை  தொடர்பாக கருத்து வெளியிட்டிருக்கின்ற ஜனாதிபதி ரணில்   சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள்  மற்றும்  பல் தரப்பு அமைப்புகளிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள்  வரையிலான நிதியுதவியை இலங்கைக்கு  பெறும் வகையில் சர்வதேச நாணய  நிதியத்தின் செயற்குழுவினால் எமது திட்டத்திற்கு  அனுமதி வழங்கியிருப்பது குறித்து  மகிழ்ச்சியடைகிறோம். 

ஆரம்பத்திலிருந்தே, நிதி  நிறுவனங்களுடனும் எங்கள் கடன் வழங்குபவர்களுடனும் நாங்கள் நடத்திய  அனைத்து  பேச்சுவார்த்தைகளும் முழு வெளிப்படைத்தன்மையுடன்  முன்னெடுக்கப்பட்டன. தூர நோக்கான பொருளாதாரக் கொள்கை மற்றும் எமது  இலட்சிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மூலம் பொருளாதாரம் நீண்ட கால   மீட்சியை எதிர்பார்க்கும். இந்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும்  நமது சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்  என்று  அறிவித்துள்ளார்.

மேலும்  “கடந்த ஜூலை மாதம்  நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாளில்  இருந்து,  இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, நிலையான கடன் நிலையை அடைவதே  எனது முன்னுரிமையாக இருந்தது. அதற்காக சில கடினமான முடிவுகளை எடுத்தோம். நாட்டிற்கான இந்த நோக்கை  அடைவதற்கு    சர்வதேச நாண நிதியத்தின்  திட்டம் மிகவும் முக்கியமானது.

இந்தத் திட்டத்தை  வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கும் கடன் நிலைத்தன்மையை அடைவதற்கும் நாம்  அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். எங்களின் அனைத்து கடன் வழங்குநர்களுடனும்  நாங்கள் தொடர்ந்து தொடர்புபட்டிருக்கிறோம்  என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

அந்தவகையில்   நாணய நிதியத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள உதவி திட்டத்தின் ஊடாக மிகப்பெரிய பொருளாதாரம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் படுகுழியில் விழுந்திருக்கின்ற இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார். 

பேச்சுவார்த்தைகள் 

உண்மையில் ஜனாதிபதி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி பதவி ஏற்றதன் பின்னர்   சர்வதேச நாணயத்தின் அதிகாரிகளுடனான  பேச்சுவார்த்தைகள் தீவிரப்படுத்தப்பட்டன. 

ஆரம்பத்தில்   கடந்த வருடம் ஏப்ரல் மாதமே முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி  தலைமையிலான குழுவினர் அமெரிக்காவுக்கு விஜயம் செய்து சர்வதேச நாணயத்துடன் பேச்சு நடத்தியிருந்தனர்.  அதன்பின்னர் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தன.  கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி சர்வதேச நாணய  நிதியத்தின் உத்தியோகஸ்த்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது. அதாவது இலங்கைக்கு 2.9  பில்லியன் கடனுதவியை    வழங்குவதற்கான  உத்தியோகஸ்தர் மட்டத்திலான இணக்கப்பாடு எட்டப்பட்டது.  அதனை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு அங்கீகரிப்பதாயின் இலங்கை தனக்கு கடன் வழங்கிய சகல தரப்புகளுடனும் கடன் மறுசீரமைப்பை செய்துகொள்ள வேண்டிய தேவை காணப்பட்டது. 

சவாலான கடன் மறுசீரமைப்பு 

அதுவே இலங்கைக்கு மிகப்பெரிய ஒரு சவாலாகவும் காணப்பட்டது.  முக்கியமாக இலங்கைக்கு கடன் வழங்கிய சீனா இந்தியா ஜப்பான் ஐரோப்பிய நாடுகள் மற்றும் உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி சர்வதேச நிதிநிறுவனங்களுடன்  இலங்கை    கடன்  மறுசீரமைப்பை செய்து கொள்ள வேண்டி இருந்தது.  அதாவது கடன் மறுசீரமைப்பு  என்பது இலங்கை   கடன்களை ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் எவ்வாறு மீள வழங்கும் என்பது தொடர்பான ஒரு உத்தரவாதத்தை ஏற்படுத்துக் கொள்வதாகும்.    

கடன் மறுசீரமைப்பு செய்து கடன் வழங்கிய   நாடுகள் இலங்கைக்கான ஒரு நிதியியல் உத்தரவாதத்தை வழங்கினால் மட்டுமே நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும்.  கடந்த சில மாதங்களாக இந்த கடன் மறுசீரமைப்பை செய்து கொள்வதற்கு கடுமையான நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டது.  முக்கியமாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  இந்தியா முதலாவது நாடாக இலங்கைக்கு நிதியியல் உத்தரவாதத்தை வழங்கியதுடன் சர்வதேச நாணயத்துக்கு கடிதத்தை அனுப்பியது. அதேபோன்று ஜப்பானும் இலங்கைக்கு முழுமையான உத்தரவாதத்தை வழங்கியது.  ஜப்பான் தலைமையிலான பரிஸ் கிளப் நாடுகளும் இலங்கைக்கு நிதியியல் உத்தரவாதத்தை வழங்கின. 

சீனாவுடனான பேச்சுக்கள் 

எனினும் சீனாவிடம் நிதியியல் உத்தரவாதத்தை பெறுவதே இந்த கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் இலங்கைக்கு பாரியதொரு சவாலாக அமைந்தது.    காரணம் சீனா பொதுவாக இவ்வாறு கடன் மறுசீரமைப்பு செய்து கொள்வதில்லை.  ஆனால் தொடர் பேச்சுவார்த்தைகளின்    அடிப்படையில் சீனா இலங்கைக்கு கடன் மீள் செலுத்துவதற்கு இரண்டு வருடகால அவகாசத்தை வழங்கியது. அது முக்கியமானதாக அமைந்தது. 

மேலும்  உள்நாட்டில் பல மறுசீரமைப்புக்களை  செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை விதித்தது. முக்கியமாக அரச வருமானத்தை அதிகரித்தல், வரிகளை அதிகரித்தல்,  உள்நாட்டில் நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மறுசீரமைத்தல் போன்ற    பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.  அதனடிப்படையில்  வரிகள் அதிகரிக்கப்பட்டதுடன்  மின்சார கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டன.   இதனையடுத்தே  தற்போது இந்த கடன் உதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய  நிதியம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. 

இந்நிலையில் இலங்கைக்கான திட்டத்துக்கு அனுமதி வழங்கி இருக்கின்றமை குறித்து   கருத்து வெளியிட்டிருக்கின்ற சர்வதேச நாணயத்தை நிறைவேற்று பணிப்பாளர்  கிறிஸ்டலினா  இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்காக IMF சுமார் 3 பில்லியன் டொலர் உதவியை இன்று எமது நிறைவேற்று சபை அங்கீகரித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளது. முக்கிய மைல்கல்      என்று குறிப்பிட்டுள்ளார். 

இனி என்ன நடக்கும்? 

அந்தவகையில்  சர்வதேச நாண நிதியத்தின் கடன் உதவி திட்டம் கிடைத்ததும்  சர்வதேச நாடுகள் இலங்கைக்கு கடன்களை வழங்கும்.   7 பில்லியன் டொலர்களை கையிருப்பில் சேர்க்க முடியும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.  இந்த திட்டத்தின் ஊடாக டொலர் உள்வரும் பட்சத்தில் டொலரின் ரூபாவுக்கு நிகரான பெறுமதி குறைவடையும். ரூபாவின் பெறுமதி வளர்ச்சியடையும்.   அதேபோன்று இறக்குமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படலாம்.  எரிபொருள் இறக்குமதி   தேவையான அளவு மேற்கொள்ளப்படலாம். அதன் ஊடாக   கியு. ஆர்.  கோட்டா முறை நீக்கப்படும் சாத்தியம் இருக்கின்றது. 

வங்கி  வட்டி விகிதங்கள் குறைவடையலாம். காரணம் ரூபாவின் பெருமதியை உயர்த்துவதற்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்குமே  வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.  வரலாற்றில் என்றும் இல்லாதவாறு தற்போது வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.   சர்வதேச நாணயத்தின் திட்ட உதவி திட்டத்துடன் வட்டி வீதங்கள் குறைவடையும் சாத்தியம் இருக்கின்றது. வட்டி விகிதங்கள் குறைவடையும் பட்சத்தில் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள்   தமது வர்த்தக செயற்பாடுகளை முன் கொண்டு செல்ல முடியும்.  எனவே இந்த செயற்பாடுகளுக்கான கதவுகள் திறக்கப்படும் நிலைமை காணப்படுகிறது.   இது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு மிக முக்கியமாகும்.  குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் தொழில்வாய்ப்புக்களை  உருவாக்கும் செயற்பாட்டை   மேற்கொள்கின்றன.  கடந்த காலங்களில் வட்டி விகிதங்கள் அதிகரித்ததால்  அந்த செயற்பாடு ஸ்தம்பித்தன.    

மூழ்கிய கப்பலை மீட்பதற்கு... 

தற்போது மூழ்கியிருக்கின்ற பொருளாதார கப்பலை மீட்டெடுப்பதற்கு  சர்வதேச நாணயத்தின் உதவி குறித்த அங்கீகாரம் மிக முக்கியத்துவமாக இருக்கின்றது.  இது ஜனாதிபதி ரணில் தலைமையிலான நிர்வாகம்  மேற்கொண்ட முயற்சியின் பலனாகவே   சாத்தியமாகி இருக்கின்றது.   

மக்களுக்கு மூச்சு விடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.  அதாவது இது மறுக்கவே முடியாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  இராஜதந்திர அடைவுமட்டமாகும்.  மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் வகிபாகமும் இங்கு மிக முக்கியமானது.  எதிர்க்கட்சி எம்.பி. ஹர்ஷ டி. சில்வா இந்த அடைவு மட்டம் குறித்து ஜனாதிபதியை பாராட்டியிருக்கின்றார்.  இதனூடாக  இதன் முக்கியத்துவத்தை உணர முடியும். 

சவால்கள் 

ஆனால்  இங்கு சவால்களும் இலங்கைக்கு இல்லாமல் இல்லை.  நாணய நிதியத்தின்  இந்த உதவியுடன் இலங்கை உடனடியாக மேலே வந்து விடும் என்று கூற முடியாது.  அதனுடன் இலங்கை தனது சொந்த முயற்சியின் ஊடாக டொலர் வருகையை அதிகரித்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குறிப்பாக ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறை வருமானத்தை உயர்த்துதல், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்புகின்ற அந்நிய செலாவணியை அதிகரித்தல்,  வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெற்றுக் கொள்ளுதல்,  சர்வதேச சுதந்திர வர்த்தக  உடன்படிக்கைளை செய்து வர்த்தக பரப்பை அதிகரித்தல்    உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இலங்கை டொலர் உள்வருகையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். 

இந்த இரண்டு விடயங்களும் சமாந்தரமாக பயணிக்கும் பட்சத்தில் மட்டுமே இலங்கையின்  பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49