(எம்.ஆர் எம்.வசீம்., இராஜதுரை ஹஷான்)
இந்தியாவிலிருந்து முதற்கட்டமாக 20 இலட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவை இன்னும் ஓரிரு நாட்களில் சந்தைக்கு விநியோகிக்கப்படும். முட்டை ஒன்றின் விலையை 35 முதல் 40 ரூபாவாக நிர்ணயிக்க தீர்மானித்துள்ளோம் என வர்த்தகத்துறை அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (23) வியாழக்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ரோஹண பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது.
நாட்டில் கடந்த ஏழு மாதங்களாக முட்டைக்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது.அதனைக் கவனத்தில் கொண்டு நாம் விவசாய அமைச்சு மற்றும் அதன் கீழ் வரும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
சந்தையில் முட்டைக்கான கேள்வி 40 சதவீதமாக காணப்படுவதாக விவசாயத்துறை அமைச்சின் உணவு பாதுகாப்பு குழு வர்த்தகத்துறை அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்தது,இதனை அமைச்சரவை கவனத்திற்கு கொண்டு சென்று முட்டை இறக்குமதிக்கு அனுமதி பெற்றுக்கொண்டேன்.
வெளிநாட்டில் இருந்து முட்டை இறக்குமதி செய்யும் வரை தேசிய சந்தையில் முட்டைக்கு நிலவும் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் பொருட்டு முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்தேன்,இருப்பினும் கட்டுப்பாட்டு விலையை நிலையாக பேண முடியாத நிலை ஏற்பட்டது.
எவ்வாறெனினும் நாட்டின் முட்டைக்கான தேவையில் 40 வீத பற்றாக்குறை நிலவியதால் எதையும் முறையாக முன்னெடுக்க முடியாமல் போனது. அதன் பின்னரே நாம் முட்டையை இறக்குமதி செய்வது என கொள்கை ரீதியான முடிவை எடுத்தோம்.
முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து அமைச்சரவை உப குழுக்கள் இரண்டு நியமிக்கப்பட்டு அதன் ஊடாக முட்டையை இறக்குமதி செய்வதே சிறந்தது என்ற பரிந்துரைகள் பெறப்பட்டன.அதனையடுத்து நாம் முட்டை இறக்குமதிக்கான நடவடிக்கையை மேற்கொண்டு அதற்கிணங்க இன்று முதலாவது தொகை முட்டை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அதனை பரிசோதனை செய்வதற்காக மூன்று தினங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் கோரப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் பாரிய முட்டை விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனத்திடமிருந்தே முட்டை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.உரிய சான்றிதழுடன் நாம் அதனை கொள்வனவு செய்கின்றோம்.
ஓரிரு தினங்களில் இந்த முட்டை சந்தைக்கு விற்பனைக்காக விநியோகிக்கப்படும்.அதை வேளை உலகில் முன்னணி நிறுவனம் ஒன்றிலிருந்து திரவ முட்டையை இறக்குமதி செய்ய உத்தேசித்துள்ளோம்.
திரவ முட்டை விமானங்களில் உணவு தயாரித்தல் உள்ளிட்ட பாரிய நட்சத்திர ஹோட்டல்களிலும் உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதாகும். அதற்கான இறக்குமதி அனுமதியும் வழங்கியுள்ளோம்.
அந்த வகையில் இறக்குமதி செய்யும் முட்டைகள் 35 மற்றும் 40 ரூபாவுக்கிடையில் விற்பனை செய்யவும் அதேபோன்று திரவ முட்டைகளையும் அதே விலைக்கு பெற்றுக் கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கால்நடை வளங்கள் அமைச்சின் அனுமதியும் அதற்காக பெற்றுக் கொள்ளப்பட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அதனை இறக்குமதி செய்வதற்கான அனுமதியும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. திரவ முட்டையின் தரம் தொடர்பில் எவரும் சந்தேகம் கொள்ள தேவையில்லை.
பண்டிகை காலங்களில் நாட்டில் முட்டைக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது தற்போதைய நிலையில் பாராளுமன்றத்தில் கூட முட்டை இல்லாத நிலையே காணப்படுகிறது.
நாம் எப்போதும் எமது தேவைகளின் போது இந்தியாவையே பெருமளவு நாடியுள்ளோம். அந்த வகையில் அதிக முட்டை விற்பனை செய்யப்படும் நாடான இந்தியாவிலிருந்தே இந்த முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM