(நெவில் அன்தனி)
இலங்கையில் மரித்துப்போயுள்ள கால்பந்தாட்ட விளையாட்டுக்கும் செயலிழந்துள்ள நிருவாகத்திற்கும் உயிர்கொடுக்கும் உயிரிய நன்னோக்குடன் முன்னாள் எதிராளிகள் மீண்டும் நண்பகர்களாக இணைந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
இலங்கைக்கு பீபாவினால் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி கால்பந்தாட்டத்திற்கு புத்துயிர் கொடுப்பதே தங்கள் முன்னே உள்ள தலையாய பணி என நீர்கொழும்பில் அண்மையில் கூடிய இந்தத் தரப்பினர் ஆணித்தரமாக எடுத்துக்கூறியுள்ளனர்.
பீபாவினால் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குதல், பீபாவினால் பரிந்துரைக்கப்பட்ட யாப்பு விதிகளை நிறைவேற்றுதல், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நியாயமான தேர்தலை நடத்தி நிருவாகிகளைத் தெரிவுசெய்யும் பொருட்டு தேர்தல் குழுவை நியமித்தல் உட்பட இன்னும் பல யோசனைகளை நிறைவேற்றும் பொருட்டு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் சபையைக் கூட்டுவதற்கு இந்தத் தரப்பினர் இணங்கியுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்களான ரஞ்சித் ரொட்றிகோவும் அனுர டி சில்வாவும் தெரிவித்தனர்.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாக உத்தியோத்தர்கள் குழுவிலிருந்து செயளாளர் நாயகம், பொருளாளர், உதவித் தலைவர்கள் இருவர் பதவி விலகியதை அடுத்து நிருவாக சபை கோரம் இழந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ரஞ்சித் ரொட்றிகோ, நிருவாக சபை தொழில்நுட்பரீதியாக செயலிழந்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஜனவரி மாதம் 14ஆம் திகதி இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகளைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட தேர்தலின்போது தலைவராகத் தெரிவான ஜே. ஸ்ரீரங்கா, நிருவாகிகள் தெரிவானதை பீபாவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்க தாமதம் செலுத்தியதால் ஜனவரி 22ஆம் திகதியன்று அரசியல் தலையீடு என காரணம் காட்டி இலங்கையை பீபா தடை செய்வதாக அறிவித்தது.
இது இவ்வாறிருக்க, சம்மேளனத் தலைவர் என்ற வகையில் ஜே. ஸ்ரீரங்கா நிறைவேற்றுச் சபையையும் பொதுச் சபையையும் கூட்டத்தவறியதால் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பு விதிகளை அவர் மீறியுள்ளதாக குறிப்பிட்ட ரஞ்சித் ரொட்றிகோ பொதுச் சபையைக் கூட்டி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்து நிறைவேற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது வவுனியா மேல் நீதிமன்ற உத்தரவின்பேரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜே. ரங்காவை பொதுச் சபைக் கூட்டத்திற்கு அழைப்பதில்லை என நீர்கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன நிருவாக உத்தியோகத்தர்களுக்கு இடையில் கடந்த பல வருடங்களாக கருத்துவேறுபாடுகள் இருந்துவந்தபோதிலும் தற்போது உருவாகியுள்ள மிகமோசமான நிலை கால்பந்தாட்ட வரலாற்றில் முன்னர் ஒருபோதும் ஏற்பட்டதில்லை என்பதை கால்பந்தாட்டத்துடன் தொடர்புபட்ட அனைவரும் ஒப்புக்கொள்ளவேண்டும்.
கால்பந்தாட்ட வளர்ச்சியை முன்னிட்டு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டுவந்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மணிலால் பெர்னாண்டோ கால்பந்தாட்டத்திலிருந்து ஓரங்கட்டப்பட்ட பின்னர்தான் கால்பந்தாட்டத்தில் பிளவுகளும் கருத்து முரண்பாடுகளும் எழத் தொடங்கின.
மணிலால் பெர்னாண்டோவின் தூரநோக்கு சிந்தையை தற்போதைய நிருவாகிகள் புரிந்துகொள்ள தலைப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
எனவே, 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு' என்பதை இப்போதாவது புரிந்து கொண்டு கால்பந்தாட்ட விளையாட்டிற்கு புத்துயிர் கொடுக்க வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
அதேவேளை, கால்பந்தாடத்தின் வளர்ச்சிக்காக உண்மையாகவும் நேர்மையாகவும் அவர்கள் செயல்படுவதுடன் பழைவாங்கும் எண்ணதையும் கைவிடவேண்டும் என முன்னாள் மற்றும் சமகால கால்பந்தாட்ட வீரர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM