(நெவில் அன்தனி)
டெஸ்ட் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அது குறித்து தெரிவாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் திமுத் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி முடிவில் வெலிங்கடனில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
'அயர்லாந்துடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவில் நான் தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொள்வேன்' என்றார் திமுத் கருணாரட்ன.
அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை விளையாடவுள்ளது. அந்த 2 போட்டிகளும் காலியில் நடைபெறவுள்ளன.
காலியில் நடைபெறவுள்ள 2ஆவது டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் புதிய டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியின் ஆரம்பத்திலிருந்தே இலங்கை அணிக்கு புதிய ஒருவர் தலைவராக வரவேண்டும் என கருதுவதாக திமுத் கருணாரட்ன குறிப்பிட்டார்.
'அயர்லாந்து டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின்னர் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் சம்பயின்ஷிப் தொடருக்கான சுழற்சி ஆரம்பிக்கும் போது இலங்கை அணிக்கு புதிய ஒருவர் தலைவராக வேண்டும் என்பதே எனது கருத்து. நான் சில காலம் அணித் தலைவராக இருந்துவிட்டு சுழற்சி பருவகாலத்தின் இடையில் ஒதுங்குவது பொருத்தம் அல்ல. புதிய தலைவருக்கு ஆரம்பித்திலிருந்தே அணியை வழிநடத்த வாய்ப்பு வழங்க வேண்டும் நான் எண்ணுகிறேன். இது குறித்து தெரிவாளர்களுக்கு நான் அறிவித்துள்ளேன். ஆனால், நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் இருபது 20 தொடர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தி வருவதால் அவர்களிடம் இருந்து எனக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை' என்றார்.
நியூஸிலாந்துடனான டெஸ்ட் தொடர் தோல்விக்கான காரணம் குறித்து கேட்டபோது,
'எமது 3 வேகப்பந்துவீச்சாளர்கள் முதல் தடவையாக நியூஸிலாந்தில் பந்துவீசினர். பயிற்சிகளின்போது காற்று வீசாதபோதிலும் போட்டியின்போது வேகக் காற்று வீசியதால் எமது பந்துவீச்சாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர். நியூஸிலாந்தின் அனுபவசாலியான டிம் சௌதியும் ஒருசில சந்தர்பங்களில் சிரமப்பட்டதைப் பார்த்தேன். எமது பந்துவீச்சாளர்கள் நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் எவ்வாறு பந்துவீச வேண்டும் என்பதை அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். இந்தப் போட்டியில் நிறைய தடவைகள் மோசமாக பந்துவீசினர். அந்தக் குறைகளை நிவர்த்திசெய்துகொள்வது மிகவும் அவசியம்.
'துடுப்பாட்டத்தைப் பொறுத்த மட்டில் 2ஆவது இன்னிங்ஸில் நாங்கள் திறமையாக செயற்பட்டபோதிலும் முதல் இன்னிங்ஸில் 164 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது நியூஸிலாந்துக்கு சாதகமான திருப்புமுனையாக அமைந்துவிட்டது. தனஞ்சய டி சில்வா சதம் பெறத் தவறியது துரதிர்ஷ்டம் என்று நான் கருதுகிறேன். அழுத்தத்துக்கு மத்தியிலும் அவரும் தினேஷ் சந்திமாலும் திறமையாகத் துடுப்பெடுத்தாடினர். 8 மாதங்களின் பின்னர் விளையாடிய டெஸ்ட் தொடரில் 3 அரைச் சதங்களை என்னால் பெற முடிந்ததையிட்டு நான் திருப்தி அடைகிறேன்' என திமுத் கருணாரட்ன மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM