• தொலவத்த, ஷெஹானின் விவகாரத்தை ஒழுக்கம் மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மேற்பார்வைக்குழுவுக்கு அனுப்பினார் சபாநாயகர் மஹிந்த
• உயர்நீதிமன்ற இடைக்கால உத்தரவு ஆவணத்தை வழங்குவதற்கு சிறப்புரிமை மேற்பார்வைக்குழு மார்ச் 22வரை காலக்கெடு
ஆர்.ராம்
பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சி தொலவத்த மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஆகியோர் எழுப்பிய சிறப்புரிமைப் பிரச்சினை விவகாரம் தொடர்பில் ஒழுக்கம் மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மேற்பார்வைக்குழு விவாதிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
குறித்த இரு உறுப்பினர்களினதும் சிறப்புரிமைப் பிரச்சினைகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சமல் ராஜபக்ஷ தலைமையிலான ஒழுக்கம் மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மேற்பார்வைக்குழுவிற்கு அனுப்பியுள்ள நிலையிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த இரு உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறும் வகையில் உயர்நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்கால உத்தரவு தொடர்பான ஆவணத்தினை ஒழுக்கம் மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மேற்பார்வைக்குழுவிற்கு அனுப்பி வைப்பதற்கு எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
சிறப்புரிமைப் பிரச்சினை
முன்னதாக, கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின்போது, பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த, “உயர்நீதிமன்றமானது கடந்த 3ஆம் திகதி உள்ளுராட்சி மன்றங்களுக்களுக்கான நிதியை விடுவிக்குமாறு உயர் நீதிமன்றம் விடுத்த இடைக்கால உத்தரவானது பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறுவதாக உள்ளது” என்று சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்பினார்.
அத்துடன், “குறித்த விடயம் சம்பந்தமாக ஒழுக்கம் மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வைக்குழு கவனம் செலுத்தி ஆராய வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்
மறுதினமான 8ஆம் திகதி நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, பாராளுமன்ற உறுப்பினரால் சிறப்புரிமைப் பிரச்சினையொன்று முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை தடை செய்யும் வகையில் இடைக்கால உத்தரவொன்றை பாராளுமன்றம் பிறப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி தனது சிறப்புரிமைப் பிரச்சினை எழுப்பியிருந்தார்.
சபாநாயகரின் அறிவிப்பு
குறித்த காலப்பகுதியில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில், அவர் நாடு திரும்பியதும் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, பொதுஜபெரமுன உறுப்பினர்கள் இருவரும் எழுப்பிய சிறப்புரிமைப் பிரச்சினையை கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.
அதனையடுத்து, குறித்த சிறப்புரிமைப் பிரச்சினையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, ஒழுக்கம் மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மேற்பார்வைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை அவர், வீரகேசரியிடத்தில் உறுதிப்படுத்தினார்.
அதுகுறித்து சபாநாயகர் கூறுகையில், “பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பிரச்சினையை எழுப்பினார்கள். அவர்களுக்குள்ள உரித்தின் அடிப்படையில் அவர்களின் விவாகாரத்தினை ஒழுக்கம் மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மேற்பார்வைக்குழுவிற்கு அனுப்பியுள்ளேன்” என்றார்.
சிறப்புரிமைக் குழுவின் தீர்மானம்
இந்நிலையில், ஒழுக்கம் மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மேற்பார்வைக்குழு குறித்த சிறப்புரிமை பிரச்சினை விவகாரத்தினை விவாதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்மட்டத்தக்கவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அத்துடன், குறித்த குழுவானது, உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்குரிய நிதியை விடுவிக்குமாறு உயர்நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்கால உத்தரவு ஆவணத்தினை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னதாக வழங்குமாறு காலக்கெடுவும் வழங்கப்பட்டுள்ளது.
முன்னுதாரணத்துடன் தயாராகும் ஆளும்தரப்பு
இவ்வாறான நிலையில் குறித்த சிறப்புரிமை விவகாரத்தினை ஒழுக்கம் மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மேற்பார்வைக்குழு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் எதிரணி எதிர்ப்புக்களை வெளியிடுகின்ற தருணத்தில், 2001ஆம் ஆண்டு அநுர பண்டாரநாயக்க சபாநாயகராக பதவி வகித்தபோது உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக விடுக்கப்பட்ட பாராளுமன்ற அறிவிப்பை முன்னுதாரணமாக காண்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்தகாலப்பகுதியில் அப்போதைய எதிக்கட்சியினர் பாராளுமன்றத்தில், நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக குற்றப்பிரேரணையை கொண்டுவருவதற்கு முனைந்த வேளையில் உயர்நீதிமன்றம் எதிரணியின் செயற்பாட்டை தடுக்கும் வகையில் குறித்த குற்றப்பிரேரணையை முன்னகர்த்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும், சபாநாயகராக இருந்த அநுர பண்டாரநாயக்க உயர்நீதிமன்றம் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற உத்தரவை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM