பதுளை நோக்கி பயணிக்க இருந்த தபால் ரயிலில் குண்டு உள்ளதாக அண்மையில் பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் கொடுத்த 18 வயதான யுவதியை கோட்டை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
பொய்யான தகவலைக் கொடுத்து புரளியைக் கிளப்பியமை தொடர்பிலேயே கடவத்தை, கிரிந்திவல - வத்துருகம பகுதியைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மேற்படி யுவதி நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி இரவு 8.00 மணிக்கு பயணிக்க தபால் ரயில் தயாராக இருந்துள்ளது.
இதன் போது 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு குறித்த ரயிலில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த கோட்டை பொலிஸார் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவுக்கும் அறிவித்து குறித்த ரயிலை சிறப்பு சோதனைக்கு உட்படுத்தினர்.
ரயிலில் இருந்த ஒவ்வொருவரையும் சோதனைச் செய்த பொலிஸார் அவர்களது பயணப் பொதிகளையும் சோதனை செய்தனர். இதன் போது அங்கு குண்டோ அல்லது சந்தேகத்துக்கு இடமான பொருளொன்றோ இருக்கவில்லை என்பது உறுதியானது. இந் நிலையில் ரயிலை மாளிகாவத்தை ரயில் தரிப்பிடத்துக்கு கொண்டு சென்று சிறப்பு பயிற்சியளிக்கப்பட்ட பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடனும் சிறப்பு சோதனை நடத்தப்பட்டது.
எனினும் அந் நடவடிக்கையின் போதும் குண்டு ஏதும் இருப்பதாக கண்டறியப்படவில்லை. இதனையடுத்து குறித்த ரயிலானது சுமார் 2 மணித்தியாலங்கள் மற்றும் 45 நிமிடங்கள் வரை தாமதமாகி இரவு 10.45 மணிக்கு கோட்டையில் இருந்து பயணத்தை ஆரம்பித்தது.
இந் நிலையில் இது தொடர்பில் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்த கோட்டை பொலிஸார் 119 அவசர தொலைபேசிக்கு தகவல் வழங்கியது யார் என்பதைக் கண்டறிந்தனர். அதன்படி குறித்த 18 வயதான யுவதியை அழைத்து பொலிஸார் விசாரணை செய்துள்ளனர்.
இதன் போது தான் ரயில் நிலையத்தில் நின்றபோது, தொலைபேசியில் ஒருவர் யாருக்கோ ரயிலில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததாகவும் அதனையடுத்தே தான் பயத்தில் பொலிஸாருக்கு அழைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனினும் மேலதிக விசாரணைகளில் குறித்த யுவதியின் காதலனுடன் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து, காதலனை அவரது ஊருக்கு செல்ல விடாது தடுக்கவே மேற்படி யுவதி ரயிலில்குண்டு இருப்பதாக பொலிஸாருக்கு போலியாக தகவல் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அதன்படியே நேற்று காலை 10.00 மணிக்கு கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு குறித்த யுவதிக்கு அறிவிக்கப்பட்டது. இந் நிலையில் விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜரான யுவதியை பொலிஸார் கைது செய்து நேற்று பிற்பகல் கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
இதன் போது சந்தேக நபரான யுவதியை இவ்வாறான புரளிகள் குறித்து கடுமையாக எச்சரித்த நீதிவான் அவரை 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்தார். இது தொடர்பிலான அடுத்த கட்ட விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM