(தவக்காலத்தில் “அன்பு” பற்றி சிந்திப்போம்.)
புது இடத்துக்கு பயணப்பட்டு வந்து இன்னும் இரண்டு மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே அலுவலகத்துக்கு தயாராகி விடை கூற வந்த கணவரை ஆற்றாமையோடு பார்த்தாள் நிம்மி என்ற நிர்மலா. கத்தோலிக்கர்களான நிர்மலாவும் அவள் கணவர் றொபேட்டும் நான்கு பிள்ளைகளின் பெற்றோர். கடைசிக் குழந்தை ஐந்தே மாதங்களான கைக்குழந்தை. இந்நிலையில் வவுனியாவில் வாழ்ந்து வந்த இவர்கள் கணவரின் வேலை இடமாற்றத்தால் இன்று காலை தான் கண்டி வந்து சேர்ந்தார்கள்.
கணவனை வழியனுப்பி வைத்து பின் வெறுமையும் சோர்வுமாக கையில் குழந்தையுடன் வரவேற்பறையில் அமர்ந்தாள் நிர்மலா. வரவேற்பறையை பார்க்கிறாள் ஒரு புறம் பிள்ளைகள் பசியும் களைப்புமாக சோர்ந்து விட்டனர். சாப்பிட ஏதாவது செய்ய வேண்டும். மற்றது கொண்டு வந்த பொருட்கள் பயணப் பைகள் பெட்டிகள் எல்லாம் ஒழுங்கு படுத்த வேண்டும். புதிய இடம் யாரையும் தெரியாது. மனம் சுமையாகிறது ஆனாலும் அப்படியே இருக்க முடியாது...
தூங்கி விட்ட குழந்தையை படுக்கையினை ஒழுங்கு படுத்தி கிடத்திய பின் விரைவாக காலை உணவு தயாரித்து பிள்ளைககளை குளிப்பாட்டி சாப்பிடக் கொடுத்தாள். மூத்த பிள்ளைகள் இருவரும் தாம் உள்ளேயிருந்து விளையாட வேண்டும் என்றனர். மற்ற பிள்ளையையும் தூங்க வைத்தாள். பின் தானும் நன்றாக களைப்பு தீர குளித்து உடை மாற்றி தலையை வாரி முடிந்து விட்டாள். கோப்பியுடன் பாலும் சேர்த்து குடித்த போது புத்துணர்ச்சி பெற்றாள். கொஞ்ச நேரம் செபிக்க வேண்டும் போல ஒரு உந்துதல் ஏற்ப்பட்டு அமைதியாக உட்கார்ந்தாள்.
எப்பொழுது வெறுமையும் பிரச்சினையும் பலவீனமும் மேலோங்குகிறதோ அப்பொழுது எம்மால் நிம்மதியாக செபிக்க கூட முடியாது. வார்தைகளும் வராது அமைதியாகவும் இருக்க முடியாது. சிந்தனைகள் தறி கெட்டு அலையும் ஆசையிருந்தும் விரும்பிய மாதிரி செபிக்க முடியாத ஒரு நிலை. ஆனால் எப்பொழுது வெறுமையும் பலவீனமும் அதிகமாயுள்ளதோ அப்பொழுது இறைவனின் அன்பு அபரீதமாக வெளிப்படும். அந்த அன்பை நாம் பூரணமாக விளங்கிக் கொள்ளாவிட்டாலும் அது மெதுவாக ஆனால் மென்மையாக துல்லியமாக எமக்கு வெளிப்படுத்தப்படும். இப்படித்தான் நிம்மியும் குழப்பத்துடனே செபத்தில் உட்கார்ந்திருந்தாள்... அப்படியே அசந்து தூங்கி விட்டாள்.
சில நிமிடங்கள் கழித்து கண் திறந்த பொழுது அவள் மனதில் சொல்ல முடியாத ஒரு அமைதி நிலவியது. இதயத்தில் கணவனைப் பற்றி பிள்ளைகளைப் பற்றிய அன்பு வளர்ந்திருந்தது. தனது பலவீனங்களை மேற்கொண்டு அன்பினால் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. வெறுமையான இதயம்; இப்பொழுது அன்பாலே புதுப்பிக்கப்பட்டுள்ளது. இறைவனின் அருளால் மகிழ்வின் ஆவியால் நிறைந்துள்ளது.
இறைவனுக்கு நன்றி கூறி தனது சிறிய செபத்தை முடித்துக் கொண்டு... காலை உணவை உண்ட பின்னர் மிகுதி வேலைகளைப் பார்க்கலானாள். துப்பரவாக்கும் போதும் கூட்டும் போதும் உடுப்புகளை மடித்து வைக்கும் போதும் மீண்டும் சமைக்கும் போதும் பாத்திரங்கள் கழுவும் போதும் நேரம் விரைவாக போய் விடும். களைப்பும் சோர்வும் திரும்பவும் வரும். ஆனால் அன்பும் அர்ப்பணிப்பும் மீண்டும் கடமைகளை மகிழ்வோடு செய்வதற்கு அவளை தூண்டிக் கொண்டே இருக்கும்.
“பாவம்”
பாவம் என்றால் என்ன என்று மிக எளிமையாக விளங்கிக் கொள்வோம். எமது இயல்பான நேர்த்தியான வாழ்வின் ஓட்டத்தை தடை செய்வது எதுவும் பாவம் என்று வரையறுக்கலாம். அதாவது அன்பாக இருத்தல் எமது இயல்பு நிலை ஏனெனில் அன்பான கடவுளின் இறை சாயலாக படைக்கப்பட்டதால் “அன்பு” எம்மிடத்திலே இயல்பாகவே உள்ளது. இந்நிலையிலிருந்து எம்மை தடை செய்வது பாவம் என்றால் அது வெறுப்பு மன்னிக்க முடியாமை எதிர்மறை எண்ணம் வன்முறை இப்படி பலவற்றைக் கூறலாம்.
ஆகையால் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்: விதிக்கட்டுப்பாடுகளற்று தன்னிச்சையாக நடப்பதுவும் எமது சின்ன சின்ன தீய சிந்தனைகளால் செயற்பாடுகளால் கடவுள் துயருக்குள்ளாகிறார் அல்லது எனது பாவத்துக்காக என்னை சோதனைக்கு உட்படுத்துகின்றார் என்று நினைப்பதும் நாம் “பாவம்” என்பதை வரையறுக்கும் குறுகிய அளவீடுகள்.
பாவம் இ இறையருள் பற்றி சரியாக அறிந்து கொள்ள புனித பவுல் அடிகள் ஒரு முரண்பாடான போக்கை எமக்கு அறிமுகப்படுத்துகிறார். அதாவது எதிர்நிலை நோக்கிலிருந்து ஒரு தைரியமான பார்வைக்குள் எம்மை அழைத்துச் செல்கிறார். எப்படியெனில்:
குற்றம் செய்ய வாய்ப்பு பெருகும் படி சட்டம் இடையில் நுழைந்தது. ஆனால் பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது. இவ்வாறு சாவின் வழியாய் பாவம் ஆட்சி செலுத்தியது போல் நம் ஆண்டவர் இயேசுக் கிறீஸ்து வழியாய் அருள் ஆட்சி செய்கின்றது. இந்த அருள் தான் மனிதர்களைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்கி நிலை வாழ்வு பெற வழி வகுக்கின்றது. (உரோமையர் 5: 20-21)
எமது சொந்த பாவங்களை எமது சொந்த மீட்புக்காக கடவுள் பயன்படுத்துகிறார். ஏனெனில் கடவுளுடைய இரக்கம் முடிவில்லாதது முழுமையானது வளமிக்கது.
இறைவன் éரணமானவர் முடிவில்லாதவர் ஆதலால் எமது பாவ நிலைகளால் அவரது முழுமையான இயல்புக்கு நாங்கள் ஊறு விளைவிக்கவோ அவரைத் துயரப்படுத்தவோ முடியாது. ஆனால் எமது பாவங்களால் நாங்கள் தான் எம்மைத் துயரப்படுத்துகிறோம். எங்களைக் காயப்படுத்துகின்றோம். எங்கள் மீது தீமைகளை வருவிக்கின்றோம். நாங்கள் துயரப்படுவதைத் தான் இறைவனாலே தாங்கிக் கொள்ள முடியவில்லை.
உயிர்த்த கீறிஸ்து புனித பவுலுக்கு தோன்றிய பொழுது இதைத்தான் சொன்னார்.
“சவுலே சவுலே ஏன் என்னைத் துன்புறுத்துகின்றாய்? தாற்றுக் கோலை உதைப்பது உனக்கு கடினமாய் இருக்கும்”
இங்கு தாற்றுக் கோல் அல்லது அங்குசம் என்றால் என்ன என்று விளங்கிக் கொள்வோம். மிருகங்களை உழவு நிலத்திலோ பயணங்களிலோ பயன்யடுத்தும் போது அவைகளை சரியான திசை நோக்கி வழிநடத்துவதற்காக கைகளிலே பயன்படுத்தும் இரும்பினால் செய்யப்பட்ட கோல். இது ஒரு ஊக்கி போன்று செயற்படும்.
சவுலுடைய கதையிலே அவர் கிறீஸ்துவை நோக்கி செல்பவர்களை எதிர்த்திசையில் கொண்டு செல்வதற்காக அதிகம் பிரயாசைப்படுகின்றார். இப்படி அவர் இயல்பான ஓட்டத்துக்கு எதிராக சென்று தன்னை வருத்திக் கொள்வது கிறீஸ்துவை துயரப்படுத்துகின்றது.
பாவமும் தீமையும் ஏன் உலகில் நிலவுகின்றது?
இங்கு ஏற்கனவே எமக்கு தெரிந்த உணவுச் சங்கிலி பற்றி மீண்டும் ஒருமுறை பார்ப்போம். குறிப்பிட்ட சூழலிலே வாழும் உயிரினங்களுக்கு இடையிலான உணவுத் தொடர்பினை விளக்கும் நடைமுறை. அதாவது மான்கள் புற்களை உணவாகவும் அந்த மான்களை புலிகள் வேட்டையாடி உண்பது வழமை. இது பாவமா என்றால் இல்லை. ஏனெனில் இவைதான் அவற்றின் இயல்பு நிலை.
ஏற்கனவே ஆரம்பத்தில் குறிப்பிட்ட மாதிரி எமது இயல்பு நிலை ஓட்டத்துக்கு எதிராக செல்வது பாவம். இன்னொன்று éரணமாக இருக்க வேண்டிய இயல்பு நிலையில் வாழ தேவையானவற்றை செய்யாமல் தவிர்ப்பதும் பாவமாகும். அதாவது “வட்டம்” என்பது அதன் இயல்பு நிலையில் முழுமையைக் குறிக்கும் ஒரு வடிவமாகும். அதில் ஒரு சிறிய பகுதி விடுபட்டாலும் அது éரணமான வட்டமாகாது. அதாவது செய்ய வேண்டிய ஒன்றை நாம் செய்யாதிருத்தலைக் குறிக்கின்றது.
இது எமது இயல்பு நிலையில் எப்படி சாத்தியமாகும் என்று பார்த்தால்:
இறைவன் எம்மை தம் உருவிலும் சாயலிலும் படைத்த போது “அன்பு” எப்படி எமது அடிப்படை இயல்பானதோ அவ்வாறு சுதந்திரமும் சுய விருப்பும் எமது அடிப்படை உரிமையானது. சுதந்திர வேட்கையை எம்முள் நட்டு வைத்தவர் கடவுளே! மனிதர் தமது சுய விருப்புடன் செயல்படும் போது அது நன்மையாகவோ தீமையாகவோ இருக்கலாம் இறைவன் அதைத் தடை செய்ய மாட்டார்.
திருவிவிலியத்திலே நாம் காண்கின்றோம்:
இதோ பார் உன் மேல் இன்று வாழ்வையும் சாவையும் ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கின்றேன்... வாழ்வைத் தேர்ந்து கொள்! (இணைச்சட்டம் 30: 19)
சுதந்திரத்துக்கான தெரிவு எம்மிடத்திலே தான் விடப்படுகின்றது!
இப்பொழுது எமது கட்டுரையின் முதற் பகுதியிலே வாசித்த நிர்மலா றொபேட்டின் அனுபவத்தில் நிம்மி தனது தெரிவுகளை மிகவும் அவதானமாக உள்மன சுதந்திரத்துடன் கையாண்டார். தான் நான்கு பிள்ளைகளின் அம்மா ஒரு குடும்பத் தலைவி என்ற எளிமையான இயல்பு நிலையிலே செய்ய வேண்டிய பகுதிகளை அன்போடும் பொறுப்போடும் கையாள்கிறார். பூரணமான அன்பின் இயல்பு நிலையை வெளிப்படுத்துகிறார். அவவுக்கு தெரிவுகள் இருந்தது: சோர்ந்து போய் கவனமின்றி இருக்கலாம். ஆனால் அன்று அந்தக் குடும்பத்தில் சந்தோசம் தொலைந்திருக்கும் கணவனுடன் கோபப்பட்டிருக்கலாம். இத்தகய விளைவுகளிலிருந்து தன்னையும் தனது குடுப்பத்தையும் அவளுடைய தெரிவுகளே பாதுகாத்தது. அன்று அங்கு பாவத்துக்கு இடமிருக்கவில்லை.
எமது நாளாந்த வாழ்விலே எமது தெரிவுகள் எமது அன்பான இயல்பு நிலைக்கு எதிராக பயணிக்கும் போது தீமைக்கும் பாவத்துக்கும் இடமளிக்கின்றோம். ஆனால் தீமையில் நாம் உழன்றாலும் அழகான ஒரு மறைபொருளை நாம் புரிந்து கொள்வது அவசியம். இறைவன் தீமையை அனுமதிக்கின்றார்...அதிகூடிய சிறந்த நன்மையை நாம் உணர்ந்து கொள்வதற்காக. எப்படியெனில்;: கடவுள் முடிவில்லா வல்லமை கொண்டவர். ஒவ்வொரு தீமையிலிருந்தும் மிகப் பெரிய நன்மையைக் கொண்டு வர இறைவனால் முடியும். அதனால் தான் எமது மீட்பின் நிமித்தம் இயேசுவை எமது பாவங்களுக்காக சிலுவையில் பலியாக்கி விடுதலையின் மக்களாக எம்மை மாற்றினார். இது தான் எமது மீட்பின் கதை! எமது அன்பின் கதை!
நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: எமது அன்பான இயல்பு நிலையில் செய்ய வேண்டியதை éரண மனச் சுதந்திரத்துடன் முழுமையாச் செய்வோம் தெரிவுகளில் கவனமாயிருப்போம். தவறிவிட்டோம் என்று உணர்கையில் குற்ற உணர்வினில் சிக்கி தவிக்காது முறையான ஒப்புரவு அருட்சாதனம் ஊடாக மீண்டும் அன்பால் இறைவனோடு இணைவோம்.
அருட்சகோதரி. மறிஸ்ரெலா அனி
திருக்குடும்ப சபை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM