பாராளுமன்ற உறுப்பினர்கள் தொலவத்த, ஷெஹானின் கருத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

Published By: Digital Desk 5

11 Mar, 2023 | 07:28 PM
image

(நா.தனுஜா)

நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையைப் புறந்தள்ளும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேம்நாத் தொலவத்த மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்தை சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

இதுகுறித்து சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

உள்ளூராட்சிமன்றத்தேர்தல்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை மேற்கோள்காண்பித்து பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேம்நாத் தொலவத்த மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரால் வெளியிடப்பட்ட கருத்துக்களைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம்.

நீதிமன்றத்தின் இடைக்காலத்தடையுத்தரவு தமக்குரிய (பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய) பாராளுமன்ற சிறப்புரிமையை மீறுவதாக கடந்த 7 ஆம் திகதி பிரேம்நாத் தொலவத்த தெரிவித்துள்ளார்.

அதேபோன்று பிரேம்நாத் தொலவத்தவின் கருத்து தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் முடிவடையும்வரை உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத்தடையுத்தரவுடன் தொடர்புடைய எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவேண்டாமென சம்பந்தப்பட்ட கட்டமைப்புக்களுக்கு ஆலோசனை வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கடந்த 10 ஆம் திகதி சபாநாயகரிடம் வேண்டுகோள்விடுத்தார்.

இவ்விரு கருத்துக்களும் நீதிமன்றச்செயன்முறையில் இடையூறு விளைவிப்பதுடன், நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையைப் புறக்கணிப்பதாகவே நாம் கருதுகின்றோம்.

இலங்கை மக்களைப் பொறுத்தமட்டில் சுயாதீன நீதிமன்றக்கட்டமைப்பு இன்றியமையாதது என்பதுடன், நீதியை நிலைநாட்டுவதற்கு சுயாதீன நீதிமன்றக்கட்டமைப்பு அவசியம் என்பதை அரசின் அனைத்துக் கிளைக்கட்டமைப்புக்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

எனவே சுயாதீன நீதிமன்றக்கட்டமைப்பில் ஏற்படுத்தப்படும் எந்தவொரு தலையீட்டையும் சட்டத்தின் ஆட்சி மற்றும் நாட்டுமக்களின் உரிமைகளை அவமதிக்கும் செயலாகவே கருதுகின்றோம்.

அத்தகைய அவமதிப்பு, எவ்வித பக்கச்சார்புமின்றி நீதியை நிலைநாட்டுவதற்கான நீதிமன்றத்தின் இயலுமையைப் பாதிக்கும்.

ஆகவே நாட்டின் கடந்தகால வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை, நீதிமன்றக்கட்டமைப்பின் சுயாதீனத்தன்மையைப் புறந்தள்ளும் வகையில் செயற்படவேண்டாம் எனவும் வலியுறுத்துகின்றோம் என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17