(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக்கொண்டு தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக பிரதான எதிர்க்கட்சி இன்று (10) சபையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கடும் வாக்குவாம் இடம்பெற்றது.
பாராளுமன்றம் இன்று (10) வெள்ளிக்கிழமை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் தலையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத்தொடர்ந்து, சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைப்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க எழுந்து தெரிவிக்கையில், உயர் நீதிமன்றம் விடுத்திருக்கும் தடை உத்தரவை அடிப்படையாகக்கொண்டு இடம்பெறும் நடவடிக்கைகளை இடை நிறுத்த வேண்டும் என பாராளுமன்ற சிறப்புரிமை குழு உத்திரவிடவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து எழுந்த எதிர்க்கடசி பிரமதகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிடுகையில், தேர்தலுக்கு பணத்தை வழங்காமல் இருப்பதை தடுத்து உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவொன்றை பிரப்பித்திருக்கிறது.
அதன் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழுவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதியை நிர்ணயித்திருக்கிறது. தற்போது அரசாங்கம் நீதிமன்றத்துக்கும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கும் எதிராக சிறப்புரிமை மீறுவதாக தெரிவித்து பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பது இந்த இரண்டு நிறுவனங்களையும் அடக்குவதற்காகும்.
நீதிமன்ற தீர்ப்பை கேள்விக்குட்படுத்துவதை நிறுத்த வேண்டும். இது தொடர்பாக ரவூப் ஹக்கீம் இன்று (10) சபையில் தெளிவுபடுத்தி இருந்தார். அதனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் நீதிமன்றம் பயப்படும் என நினைக்க வேண்டாம். நீதிமன்றத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க முற்பட்டால், நீதிமன்றம் இதனைவிட கடுமையாக செயற்படும்.
அத்துடன் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதியை இரண்டாவது தடவையே நிர்ணயித்திருகிறது. அதனால் இந்த நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதன்போது எழுந்த ரவூப் ஹக்கீம் எம்.பி. குறிப்பிடுகையில், பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக்கொண்டு நீதிமன்ற தீர்ப்பையும் நீதிபதிகளையும் கேள்விக்குட்படுத்தக்கூடாது என நான் சபையில் நேற்று (09) தெரிவித்திருந்தேன்.
அதற்கு மாற்று நடவடிக்கையாகவே தற்போது நிதி இராஜாங்க அமைச்சர் சிறப்புரிமையை பயன்படுத்திக்கொண்டு, நீதிமன்றத்தின் தடை உத்தரவை இடைநிறுத்துமாறு சிறிப்புரிமை குழு உத்திரவிடவேண்டும் என கேட்கிறார்.
அதனூடாக உயர் நீதிமன்றம் நிதி அமைச்சின் செயலாளருக்கு விடுத்திருக்கும் உத்தரவுக்கு, அவர் நீதிமன்றத்துக்கு பதிலளிக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக்கொண்டு இவ்வாறு நீதிமன்ற நடவடிக்கையை கட்டுப்படுத்த இடமளிக்க முடியாது என்றார்.
அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்படுவதென்ற காரணத்தை மேலோங்கச்செய்து, நாட்டின் நீதிமன்ற நடவடிக்கைக்கு தலையீடு செய்யும் வேலைத்திட்டங்களை பாராளுமன்றத்துக்குள் செயற்படுத்த இடமளிக்க முடியாது.
ஜனநாயகத்தின் பிரதான தூண்களான நீதிமன்றம், பாராளுமன்றம் மற்றும் நிறைவேற்றுத்துறை ஜனநாயகத்தின் பிரதான மூன்று விடயங்களாகும்.
அத்துடன் பிரேமனாத் சி தொலவத்த மற்றும் ,இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஆகிய இருவரின் நடவடிக்கை , தேர்தலை நடத்துவதற்கு பணத்தை ஒதுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீள பெற்றுக்கொள்ள அரசாங்கம் மேற்கொண்டு வரும் சதித்திட்டத்தின் மற்றுமொரு நடவடிக்கையாகும்.
அதனால் பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக்கொண்டு தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. அதற்கு இடமளிக்க முடியாது என்றார்.
இதன்போது எழுந்த இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் உரிமையின் பிரகாரே நான் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை எழுப்பினேன். அந்த உரிமை எனக்கு இருக்கிறது. தற்போது எனது சிறப்புரிமை பிரச்சினை சிறப்புரிமை குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு பிரதி சபாநாயகரால் உத்தரவிடப்பட்டிருக்கிறது என்றார்.
அதனைத் தொடர்ந்து எழுந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிடுகையில், ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியை வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது என்றே நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஒதுக்கப்பட்டிருந்தால் அதுதொடர்பில் பார்க்கலாம்.
அடுத்த விடயம் பாராளுமன்றத்தில் சிறப்புரிமை ஒன்றை எழுப்ப பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் உரிமையை மற்றுமொரு உறுப்பினர் கேள்விக்குட்படுத்துவது பிரச்சினைக்குரியதாகும். அப்படியானால் யாருக்கும் சிறப்புரிமை பிரச்சினை எழுப்ப முடியாமல் போகும். என்றார்.
இறுதியா பிரதி சபாநாயகர் பதிலளிக்கையில், உறுப்பினரால் சபைக்கு முன்வைக்கப்பட்ட சிறப்புரிமை பிரச்சினை, சிறப்புரிமை குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறேன். அதனால் இதுதொடர்பில் விவாதிக்க இடமளிக்க முடியாது என தெரிவித்து, சபை நடவடிக்கையை கொண்டு சென்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM