நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப்பின் மக்கள் தமது அன்றாட உணவுகளை பெற்றுக்கொள்ள பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
தங்களது பிள்ளைகளுக்கு போசாக்குள்ள உணவுகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஒவ்வொரு பெற்றோரும் பல்வேறு சவால்களை சந்திக்கின்றனர்.
பிள்ளைகளுக்கு முட்டையொன்றை வாங்கி கொடுப்பதற்கே பெரும் பாடுபடும் பெற்றோர் தற்போது எந்த உணவுப் பொருட்களையாவது வாங்குவதற்காக கடைகளுக்கு சென்றால் அவற்றை வாங்குவதை விட்டுவிட்டு திரும்பி வந்து பட்டினி கிடந்தால் நல்லது என்று சிந்திக்கும் அளவுக்கு பொருட்களின் விலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
அரசாங்கம் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாகவும் சதொச போன்ற விற்பனை நிலையங்களில் அவற்றை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அறிவிக்கின்றது. ஆனால் அவ்வாறு சதொச போன்ற விற்பனை நிலையங்களுக்குச் சென்று பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வேறாக போக்குவரத்துக்குச் செலவு செய்ய வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர்.
“ நான் எனது வீட்டுக்கு அருகில் உள்ள கடையொன்றுக்கு வாழைப்பழம் வாங்கச் சென்றேன் விலையை கேட்டு எனக்கு தலைசுற்றிவிட்டது. 2 வாழைப்பழங்களை தராசில் போட்டு 100 கிராம் என்றார் கடைக்காரர், விலை எவ்வளவு என்று கேட்டேன் 40 ரூபா என்றார். இந்த இரு வழைப்பழத்திற்கே 40 ரூபாவென்றால் நாங்கள் எப்படி வாழ்க்கையை கொண்டு செல்வது” என்கிறார் வயதான அம்மா.
இந்தவாரம், சதொச விற்பனை நிலையத்தில் 7 அத்தியாவசிய உணவுப் பொருட்களான காய்ந்த மிளகாய், சிவப்பு பருப்பு, கோதுமை மா, வெள்ளை சீனி, சிவப்பு அரிசி, வெள்ளை நாட்டரிசி, பெரிய வெங்காயம் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகின.
இவ்வாறு தகவல் கிடைத்ததும் குறித்த சதொச விற்பனை நிலையங்களில் சிறிய கடை வியாபாரிகள் பொருட்களை கொள்வனவு செய்து தங்களது கடைகளில் அந்தப் பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பனை செய்கின்றனர். எனவே விலைகள் குறையும் போதோ அல்லது அதிகரிக்கும் போதோ நாட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் அவ்வாறு காட்சிப்படுத்தாத வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது என்பதற்காக கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் நோக்கில் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது அரசாங்கமும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்துடன் ஒவ்வொரு கடைகளிலும் விலைப்பட்டியல்களை காட்சிப்படுத்த வேண்டும் என உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு பொருட்களின் விலைகளை வியாபாரிகள் அதிகரித்து விற்கும் போது நாட்டில் கொள்ளை, கொலை போன்ற குற்றச் செயல்கள் மேலும் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் மக்களின் வருமானத்தில் எவ்வித உயர்வுகளும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
இவ்வாறு நிலைமை சென்றால் மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகவே மக்களின் நிலை அமையும் !
வீ.பி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM