(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசாங்க நிதிக்குழு ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவரை பதில் தலைவராக நியமித்து, கூடியது அரசியலமைப்புக்கு முரண். இந்த நிலைமையை மாற்றம் செய்து, பாராளுமன்றத்தின் நற்பெயரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதான எதிர்க்கட்சி இன்று (07) சபையில் வலியுறுத்தி வந்ததால் சபையில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை (07) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. ஆரம்ப நடவடிக்கையாக சபாநாயகர் அறிவிப்பு இடம்பெற்றது.
இதன்போது சபாநாயகர், அரசாங்க நிதி குழுவின் தலைவர் பதவியில் இருந்து மயந்த திஸாநாயக்க இராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார். புதிய தலைவர் ஒருவர் பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி தெரிவுசெய்யப்படும் என குறிப்பிட்டார்.
இதன்போது எழுந்த எதிர்க்கட்சியின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, அரசாங்க நிதிக்குழு தற்காலிகமாக பதில் தலைவராக ஆளும் கட்சி உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தலைமையில் கூடியிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்து.
தற்காலிகமாகவேனும் பதில் தலைவராக நியமிப்பதாக இருந்தால், அது எதிர்க்கட்சியில் இருந்தே நியமிக்கப்படவேண்டும். அவ்வாறே நிலையியற் கட்டளையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.ஆளும் தரப்பு உறுப்பிளர் ஒருவரை தற்காலிகமாக நியமிக்க முடியாது. அதனால் நிலையியற் கட்டளைகளை மீறி செயற்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இதன்போது எழுந்த எதிர்க்கட்சிஉறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா,
நிலையியற் கட்டளையின் பிரகாரம் அரசாங்க நிதி குழுவின் தலைவர், தலைமை தாங்க முடியாத சந்தர்ப்பத்திலேயே தற்காலிகமாக தலைவர் ஒருவரை நியமிக்க முடியும். ஆனால் தற்போது தலைவர் ஒருவர் இல்லை. அவ்வாறான நிலையில் தற்காலிகமாக தலைவர் ஒருவரை நியமிக்க முடியாது. அது பிழையான முன்னுதாரணமாகும் என்றார்.
இதன்போது எழுந்த ஆளும் கட்சி உறுப்பினர் நிமல் லான்சா,
அரசாங்க நிதிக்குழு கூடியபோது, நிதிக்குழுவின் தலைவர் பதவி விலகி இருக்கிறார். அதனால் தற்காலிக தலைவர் ஒருவரை நியமிக்கவேண்டும் என செயலாளர் தெரிவித்தார்.
அதன் பிரகாரம் சம்பிக்க ரணவக்கவின் பெயர் பிரேரிக்கப்பட்டது. ஆனால் அவர் அதனை நிராகரித்தார். எதிர்க்கட்சியில் யாராவது இதனை பொறுப்பேற்குமாறு தெரிவித்தோம். யாரும் முன்வரவில்லை.
அதனால்தான் தற்காலிகமாக ஒருவரை நியமித்து, நிதிக்குழுவின் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதனால் இந்த விடயத்தில் சட்டவிரோதமான எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை. சட்டத்துக்கு அமையவே இடம்பெற்றது என்றார.
இதன்போது எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஜே,சி. அலவத்துவல குறிப்பிடுகையில்,
நிதிக்குழுவின் தலைவர் ஒருவரை நியமிக்கும் பொறுப்பு எதிர்க்கட்சிக்கு உரியது. அதனை செய்வதற்கு எதிர்க்கட்சிக்கு இடமளிக்கப்படவேண்டும். இதுதொடர்பாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
இதன்போது எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் சந்திம வீரக்கொடி, நிதிக்குழு தலைவருக்கு வரமுடியாத சந்தர்ப்பத்தில் பதில் தலைவராக ஒருவரை நியமிக்க முடியுமான சட்டத்தை அடிப்படையாக்கொண்டு, தலைவர் பதவி விலகியுள்ள நிலையில் அதனை செய்ய முடியாது.
ஏனெனில் தலைவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதால், தலைவர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்றே நாங்கள் தெரிவித்தோம். பிரதி செயலாளரும் இந்த விடயத்தை அப்போது ஏற்றுக்கொண்டிருந்தார். அதனால் தற்காலிக தலைவர் ஒருவரை ஆளும் தரப்பில் இருந்து நியமித்து செயற்பட்டது அரசியலமைப்புக்கும் நிலையியற் கட்டளைக்கும் முரணாகும் என்றார்.
இதன்போது எழுந்த இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் குறிப்பிடுகையில்,
நிதிக்குழுவில் தற்காலிக தலைவராக சம்பிக்க ரணவக்க எம்.பியின் பெயரை நானே பிரேரித்தேன். அவர் நிராகரித்ததாலே வஜிர அபேவர்த்தன எம்.பியின் பெயரை நியமித்தோம். அதனால் சட்டத்துக்கு முரணாக எதுவும் இடம்பெறவி்ல்லை என்றார்.
இதன்போது எழுந்த ஆளும் கட்சி உறுப்பினர் வஜிர அபேவர்த்தன குறிப்பிடுகையில்,
அரசாங்க நிதிக்குழுவுக்கு தலைவராக மயந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டு, முதலாவது கூட்டம் கூடப்பட்டது. அந்த கூட்டத்தில் அடுத்த கூட்டத்துக்கான திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரமே அன்றைய தினம் நிதிக்குழு கூடப்பட்டது. என்றாலும் மந்த திஸாநாயக்க தலைவர் பதவியில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டிருந்தது. என்றாலும் ஏற்கனவே அடுத்த கூட்டத்துக்காக திகதி குறிப்பிடப்பட்ட நிலையில் நிதிக்குழு கூடியபோது தலைவர் இல்லாமையால் தற்காலிக தலைவராக சம்பிக்க ரணவக்கவின் பெயர் பிரேரிக்கப்பட்டது.
அதனை அவர் நிராகரித்ததுடன் எதிர்க்கட்சு உறுப்பினர்கள் யாரும் அதற்கு முன்வராததால் கூட்டத்தை கொண்டுசெல்வதற்காக எனது பெயர் தற்காலிகமாக பிரேரிக்கப்பட்டது. அதனால் நிதிக்குழுவின் நடவடிக்கைகள் சட்டத்துக்கு அமையவே இடம்பெற்றன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM