(நா.தனுஜா)
சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் செயற்முறை உறுதிசெய்யப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலுள்ள மக்களுக்கு ஆதரவாக நாம் இருப்பதுடன், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டத்தின் பிரகாரம் மக்களின் விருப்பம் உரியகாலப்பகுதியில் நடாத்தப்படும் தேர்தல்களின் ஊடாகப் பிரதிபலிப்பதை உறுதிசெய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்று சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் உள்ளுராட்சிமன்றத்தேர்தலை நடாத்துவதற்கான செயன்முறையில் இடையூறு ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் மிகுந்த விசனமடைகின்றோம்.
இந்த உள்ளுராட்சிமன்றத்தேர்தல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி நடாத்தப்பட்டிருக்கவேண்டும். இருப்பினும் இத்தேர்தல் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற விவகாரங்கள் அமைச்சரால் சுமார் ஒருவருடகாலமாகப் பிற்போடப்பட்டுவிட்டது.
எதுஎவ்வாறெனினும் எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சிமன்றத்தேர்தல் செயன்முறையில் இடையூறு விளைவிப்பதை நோக்காகக்கொண்டு அண்மையகாலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் கவலையடைகின்றோம்.
அதேபோன்று அரச அச்சகக்கூட்டுத்தாபனம் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான நிதி செலுத்தப்படும் வரையில் அவற்றை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிப்பதற்கு மறுப்புத்தெரிவித்துள்ளது. அதன்விளைவாக இம்மாதம் 22 - 24 ஆம் திகதிவரை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த தபால்மூல வாக்களிப்பு காலவரையறையின்றிப் பிற்போடப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மூவருக்கு எதிராகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டமை மற்றும் அவர்களைப் பதவி விலகுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டமை என்பன குறித்து வெளியான செய்திகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளோம்.
இவைபற்றி உரியவாறான விசாரணைகளை முன்னெடுக்குமாறும், குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவதை உறுதிசெய்யுமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் என்பது ஓர் அடிப்படை உரிமை எனும் அதேவேளை, இவ்வுரிமையில் தலையீடுகளை மேற்கொள்வதற்கான எந்தவொரு முயற்சியும் இயலுமான அனைத்து வழிமுறைகளிலும் தோற்கடிக்கப்படவேண்டும்.
அதேவேளை மேலும் தாமதமின்றி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட திகதிகளில் உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் நடாத்தப்படுவதையும், அச்செயன்முறை வெளிப்படைத்தன்மையானதும் நியாயமானதுமான முறையில் இடம்பெறுவதையும் அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும்.
இவ்வாறானதொரு பின்னணியில் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் செயன்முறை உறுதிசெய்யப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலுள்ள மக்களுக்கு ஆதரவாக நாம் இருப்பதுடன், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டத்தின் பிரகாரம் மக்களின் விருப்பம் உரியகாலப்பகுதியில் நடாத்தப்படும் தேர்தல்களின் ஊடாகப் பிரதிபலிப்பதை உறுதிசெய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM