(நெவில் அன்தனி)
அவுஸ்திரேலிய அணி பலம் வாய்ந்தது. ஆனால், அவ்வணியை எவ்வாறு கையாள்வது என்பது எங்களுக்கு தெரியும். எனவே எப்போதும் போல எமது வழமையான விளையாட்டு ஆற்றலை வெளிப்படுத்துவோம்.
மேலும் அவ்வணியை எதிர்கொள்ள நாங்கள் சிறந்த தயார்நிலையில் இருக்கிறோம் என இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண போட்டியை முன்னிட்டு புதன்கிழமை (15) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 'நாங்கள் எமது ஆரம்பப் போட்டிகள் இரண்டிலும் திறமையாக விளையாடி வெற்றிபெற்றுள்ளோம்.
அவை முடிந்தவையாக இருக்கட்டும். நாங்கள் இப்போது இன்னுமொரு போட்டியில் விளையாடவுள்ளோம். இரண்டாவது போட்டியில் பந்துவீச்சில் சிறு குறைபாடுகள் இருந்தன. ஆனால், எமது துடுப்பாட்டம் சிறப்பாக இருந்தது.
ஹர்ஷிதா, நிலக்ஷி ஆகியோருடன் நானும் கணிசமான ஓட்டங்களைப் பெற்றுவருகிறோம். விஷ்மியும் திறமையை வெளிப்படுத்துகிறார்.
அவுஸ்திரேலியா போன்ற அணியுடன் மோதும்போது அது நல்ல விடயம். இந்தப் போட்டியை முன்னிட்டு நாங்கள் சிறந்த தயார் நிலையில் இருக்கிறோம்' என்றார்.
அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஜீகுவேபேர்ஹா, சென். ஜோர்ஜ்ஸ் பார்க் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (16) நடைபெறவுள்ள 1ஆம் குழுவுக்கான ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இரண்டு அணிகளுக்கும் தீர்மானம் மிக்க போட்டியாக அமையவுள்ளது.
இது குறித்து கேட்கப்பட்டபோது பதிலளித்த சமரி அத்தப்பத்து, 'இந்தப் போட்டி இரண்டு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதும் தீர்மானம் மிக்கதுமாகும். இந்தப் போட்டியை நேர்மறையான மனப்போக்குடன் எதிர்கொள்வோம். எமது அணி இதுவரை துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியா பலம் வாய்ந்த அணி என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், குறிப்பிட்ட நாளில் எந்த அணி திறமையாக விளையாடுகிறதோ அந்த அணிதான் வெற்றிபெறும். அவுஸ்திரேலியா என்ற பெயர் குறித்தோ அதன் தரவரிசை நிலை குறித்தோ நான் நினைக்க மாட்டேன். திறமையாக விளையாடுவதற்கு முயற்சிப்பேன். அத்துடன் இந்தப் போட்டியில் அணியை நான் சிறப்பாக வழிநடத்துவேன்' என்றார்.
இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி பெரும்பாலும் அரை இறுதி வாய்ப்பை பெறுவது உறுதியாகிவிடும் என்பதால் இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் அழுத்தங்களை எதிர்கொள்ளும் என கருதப்படுகிறது. கடந்த இரண்டு போட்டிகளில் இலங்கை சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றதால், நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவே அதிக அழுத்தத்தை எதிர்கொள்ளும் என கருதப்படுகிறது.
எவ்வாறாயினும் இரண்டு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட 6 சந்தர்ப்பங்களிலும் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றுள்ளதால் இன்றைய போட்டி இலங்கைக்கு இலகுவாக அமையும் என்று எதிர்பார்க்க முடியாது.
அவுஸ்திரேலியாவை வெற்றிகொள்வதற்கு இலங்கை அணி சகலதுறைகளிலும் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்துவது அவசியமாகும்.
இலங்கை அணி
ஹர்ஷித்தா சமரவிக்ரம, சமரி அத்தபத்து (தலைவி), விஷ்மி குணரட்ன, அனுஷ்கா சஞ்சீவனி, நிலக்ஷி டி சில்வா, அமா காஞ்சனா, காவிஷா டில்ஹாரி, ஓஷாதி ரணசிங்க, சுகந்திகா குமாரி, இனோக்கா ரணவீர, அச்சினி குலசூரிய.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM