லோகன் பரமசாமி
ஒரு அரசு தோல்வியடைந்து போகிறது என்று சாதாரணமாக கூறி விடஇயலாது. தோல்வியடைந்து போகும் அரசுக்கு உரிய சில அம்சங்கள் அந்த அரசிற்கு எந்த வகையில் பொருந்துகிறது என்பதை கருத்தில் எடுத்துகொள்வது அவசியமானதாகும். அந்த அரசு எந்த நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதோ அந்த எதிர்பார்ப்புகளை அடைய முடியாத நிலை இதில் முதன்மையானதாகும்.
உதாரணமாக காலணி ஆதிக்கத்திடமிருந்து சுதந்திரம் பெற்றுக் கொண்டபோது ஒரு அரசின் தோற்றக்காலத்தில் எடுத்துக்கொண்ட திடசங்கற்பங்களில் இருந்து வழுவிய நிலையில் அந்த அரசு இருக்குமானால் அதுவொரு தோல்வி அடைந்த அரசாகிறது.
இரண்டாவதாக அந்த தேசத்தின் ஸ்தாபகர்கள் கொண்ட அதேதொலைநோக்குப் பார்வையில் தொடர்ந்து பயணித்து வருகிறதா என்பதாகும். உதாரணமாக ஒரு அரச உருவாக்கப்படும் போது அந்த அரசின் பிதாமகர்கள் அல்லது ஆரம்பகால சிந்தனையாளர்கள் ஆகியோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொலைநோக்கு பார்வைகளான சமாதானமான ஜனநாயக அரசொன்றை கொண்டுசெல்வது, தனக்கே உரித்தான தனித்துவமான சொந்தப் பார்வையை தொடர்ந்தும் வைத்திருப்பது போன்ற விடயங்களை தொடர்ந்து பாதுகாத்து வருகிறதா என்பதில் தான் குறித்த அரசின் வெற்றி தங்கியுள்ளது என்பதாகும்
மூன்றாவதாக பொருளாதாரத்தில் தன்னை சார்ந்திருக்கும் மக்களை தகுந்த தனித்துவமான பொருளாதார திட்டங்கள் மூலம் வழிநடாத்துவதாக இருக்க வேண்டும். நாட்டின் ஒருபகுதியின் வளர்ச்சியை முடக்குவதாக இருக்கலாகாது.
மேலும் அடிமட்ட வருமானம் பெறும்மக்களும், அன்றாடம் அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத பொருளாதார வளர்ச்சியற்ற நிலையை கொண்டிருப்பதுவும் தோல்வி அரசைப்பறை சாற்றுகிறது.
நான்காவதாக அரசின் தலைமைத்துவங்களின் உறுதியான நேர்மையான நகர்வுகளும் முக்கியமானதாகும். நாட்டில் அடிக்கடி இராணுவப்புரட்சிகளும், திடீர் ஆட்சி மாற்றங்களும் தன்னலக்குழுக்கள், சர்வாதிகாரிகள், குடும்ப ஆட்சிகள் ஆகிய ஜனநாயக பண்புகளுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் அதிகரிப்பு, நாட்டின் மக்களை ஏமாற்றும் வகையிலான தலைமைத்தவங்களின் ஊழல்கள் ஆகியன ஒரு அரசின் தோல்விக்கு அடிப்படைக்காரணிகளாகின்றன.
இறுதியாக மிக முக்கியமாக பேரழிவு தரக்கூடிய ஆட்சி முறைமையை கொண்டிருத்தல், தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கும் அல்லது தோல்வி கண்ட அரசுகள் பல இடங்களில் பேரரசுகளால் மிக இலகுவாக உள்வாங்கப்பட்டு கையாளப்படுகின்றன அல்லது அருகே இருக்கும் நாடுகளால் திசை தெரியாத நிலைக்கு இட்டுச் செல்லப்படுகின்றன அல்லது சர்வதேச நிறுவனங்களினால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இந்தநிலை பொதுவாக சொந்த ஆளுகைக்குட்பட்ட மக்களை இனஅழிப்பிற்குள் உள்ளாக்குதல், நாடற்ற, இருப்பிடமற்ற சமுதாயங்களை உருவாக்குதல் உள்நாட்டில் மத அடிப்படைவாத சக்கதிகள் ஆட்சி அதிகாரங்களில் செல்வாக்கு கொண்டிருத்தல், சர்வதேச மயப்படுத்தப்பட்ட தேசிய இனப்பிரச்சினைகளை கொண்டிருத்தல் போன்ற விடையங்கள் தோல்வியடைந்த அரசொன்றிற்கான அல்லது தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் அரசொன்றில் ஏற்படுகிறது.
தெற்காசிய நாடுகள் மத்தியில் மேற்குறிப்பிட்ட தோல்வி கண்டு வரும் அரசுகளில் பாகிஸ்தான் முன்னிலை வகிப்பதாக பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி வருகின்றன. இந்திய உபகண்டத்தில் இந்துகளின் மேலான்மைக்கு எதிரான இஸ்லாத்திற்கான பாதுகாப்புத் தேசமான திகழும் என்ற அடிப்படை நம்பிக்கையில் அன்றய இந்திய முஸ்லீம் லீக் தலைமைத்தவத்தால் பிரிந்து சென்று உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் என்ற தேசம் தற்போது இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கையில் சிக்கித் தவி;க்கிறது.
தனது தேசத்தின் ஒரு பகுதியான கிழக்குப் பாகிஸ்தான் அரசியல் நிர்வாக சீர்கேடுகளின் பலனாக பிரிந்து சென்று தற்போது பங்களாதேஷாக உருவாகியுள்ளது. இந்தப் பிரிவினையில் கிழக்கு, மேற்கு பாகிஸ்தான்களை ஒரு தேசமாக கட்டமைப்பதில் பெருந்தவறுகள் இழைக்கப்பட்டு விட்டது. இது பாகிஸ்தான் என்ற சிந்தனையையே அடிப்படையில் சிதைத்து விட்டது என்பது பாகிஸ்தானிய உள்நாட்டு ஆய்வாளர்களின் பார்வையாக உள்ளது .
பாகிஸ்தானில், நான்கு தடவைகள் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி ஆட்சி செய்ததன் விளைவாக இராணுவம் உள்நாட்டு ஆட்சி, நிர்வாக விவகாரங்களில் எப்பொழுதும் தனது செல்வாக்கை கொண்டிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு உட்பட நிர்வாக அலகுகளையும் நீதித் துறையையும் கூட இராணுவம் சவாலுக்கு உட்படுத்தும் நிலை, தேசத்தில் அமைதியாக சுதந்திர அரசியல் தன்மைக்கு ஏற்றதாகத் தெரியவில்லை.
அண்மையில் முரண்களுக்கும் பாதுகாப்பு கற்கைகளுக்குமான பாகிஸ்தான் நிறுவனம் வெளியிட்ட வருடாந்த அறிக்கையில் பாகிஸ்தானிய அரசுக்கு எதிரான வன்முறைகள் 2022ஆம் ஆண்டு கடந்த ஐந்த வருடங்களில் பதிவுசெய்யப்பட்டவற்றை விடவும் மிகவும் அதிகரித்த நிலையை காட்டியிருப்பதாக கூறியுள்ளது.
இஸ்லாமாபாதை மையமாக கொண்ட இந்த சிந்தனை நிறுவனம் வெளியிட்ட தகவலில் 2021ஆம் ஆண்டை விட 28 சத விகிதம் பயங்கர வாத வன்முறைகள் அதிகரித்திருப்பதாக கணிப்பிட்டு உள்ளது. இதிலே இறப்புக்கள் 37 சதவிகிதம் முன்னய வருடத்திலிருந்து அதிகரித்திருப்பதாகவும் 35 சதவீதம் படுகாயபமடைந்த நிலைமைகள் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடுகிறது. மேலும் தற்கொலைத் தாக்கதல்கள் முன்னைய வருடத்தை விட ஐந்து மடங்கு அதிகதித்துள்ளது.
பாதுகாப்பு தாக்குதல்கள் ஒரு புறத்தில் இருக்கும் அதேவேளை பொருளாதாரச் சிக்கல்கள் மக்களை பெரும் பட்டினிசாவுக்கு உள்ளாக்கி வருகிறது. கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில் பாகிஸ்தான் உலகில் எட்டாவது இடத்திலுள்ளது. ஆனால் தற்பொழுது கோதுமை மாவுக்கு பெரும் தட்டுபாடு நிலவி வருகிறது. இயற்கை அனர்த்தம் ஒரு புறத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தினாலும், இயற்கை வளங்களை அதிகம் தன்னகத்தே கொண்ட பாகிஸ்தானில் பொருளாதார திட்டமிடல் பலவீனமே தற்போதய வறுமைக்கு முக்கிய காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தானின் அரசியல்வாதிகள் அபிவிருத்தியடைந்து வரும் இதரநாடுகளான ஐக்கிய அரபு குடியரசு, சவுதி அரேபியா போன்ற நாடுகளிடம் உதவித்தொகைக்கு கையேந்தி நிற்கின்றனர். பல்வேறு தனியார் நிறுவனங்களும் கடன் பெறுவதற்கான நன்மதிப்பு பத்திரங்களை வழங்குவதற்கு முன்வரவில்லை.
பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் இருந்து சர்வதேச நாணய நிதியத்திடம் 23 தடவைகள் கடன்பெற்று கொண்டு பொருளாதாரத்தை சீர்செய்ய முயற்சித்துள்ளது. மேலும் முயற்சிகள் சர்வதேச நாணய நிதியத்தினால் விடப்பட்ட கடுமையான நிபந்தனைகள் காரணமாக கடன்பெறும் நிலைமை தாமதமாகி வருகிறது.
சீனாவின் உதவிகள் மிகச்சொற்பமான அளவிலேயே கிடைக்கப்பெற்றுள்ளது. இருந்த போதிலும் சுமார் 64பில்லியன் டொலர்கள். பெறுமதியாக சீனப் பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இது நாட்டை ஊடறுத்து வடக்கிலிருந்து, தெற்காக பெரும்பாதை அமைக்கம் திட்டமாகும்.
இந்நிலையிலேயே கடந்த வருடம் பாகிஸ்தானில் ஆட்சிக் கவிழ்பு இடம்பெற்றது. இதனால் சீன திட்டமும் சீர்கெட்ட நிலையில் உள்ளது. பாராளுமன்றில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் ஆட்சியில் இருந்த பிரதமர் இம்ரான் கான் பதவிலிருந்து இறக்கப்பட்டு புதிய தலைமை பதவி ஏற்கப்பட்டுள்ளது.
புதிதாக தலைமை ஏற்று அரசாங்கத்தை வழி நடாத்திவரும் பிரதமர் ஷெபாஷ் சரீப், மீது இம்ரான் கான் பெரும் குற்றசாட்டுக்களை வைத்துள்ளார். இம்ரான் கானின் குற்றசாட்டுக்களின்படி முன்னை நாள் இராணுவ தளபதி குவாமர் ஜாவிட் பஜ்வாவும் பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதுவர்; ஹாலியும் இணைந்த சதியின் காரணமாகவே தாம் பதவியில் இருந்த விலகவேண்டி ஏற்பட்டதாக குற்றம்சாட்டி வருகிறார்.
எது எவ்வாறு இருப்பினும் அடிப்படையில் அரசியல் ஸ்திரதன்மை அற்றநிலை, நிர்வாக சீர்கேடு இராணுவ தலையீடு வெளிநாட்டவர்களின் செல்வாக்கு ஆகியன பாகிஸ்தானிய எதிர்காலத்தை தோல்வியை நோக்கியே கொண்டு சென்று கொண்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM