(நா.தனுஜா)
இலங்கையில் தற்போதும் அமுலில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக இல்லாதொழிக்கப்படவேண்டுமென அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியிருக்கும் அதேவேளை, அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய பருவகால மதிப்பீடு தொடர்பான குழு புதன்கிழமை (01) மீளாய்வை மேற்கொண்டது. இதன்போது அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இந்தியா, பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், அயர்லாந்து, செக் குடியரசு, எஸ்தோனியா, எதியோப்பியா, கம்பியா, ஈரான், ஈராக், ஜப்பான் உள்ளடங்கலாகப் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம்வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை தொடர்பில் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
அதன்படி அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்திய அதேவேளை, அரச சார்பற்ற அமைப்புக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டவர்களைத் தண்டிக்குமாறும் கோரிக்கைவிடுத்தனர்.
அதேபோன்று கடந்த வருடம் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் உரியவாறான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று டென்மார்க் பிரதிநிதியும், பொலிஸ் காவலின் கீழ் இடம்பெறும் சித்திரவதைகளை முடிவிற்குக்கொண்டு வருவதுடன் வலிந்துகாணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய தீர்வை வழங்குமாறு கொலம்பியா நாட்டின் பிரதிநிதியும் வலியுறுத்தினர்.
மேலும் அங்கு கருத்து வெளியிட்ட இந்தியாவின் பிரதிநிதி, தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகள் குறித்து தாம் அறிந்திருப்பதாகவும், கடந்த வருடம் சுமார் 4 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை இலங்கைக்கு வழங்கியதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன் இந்தியா வம்சாவளி தமிழர்கள் உள்ளடங்கலாக அனைத்துத் தமிழ்மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தவேண்டும் எனவும், அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும், மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடாத்தவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பிரான்ஸ் பிரதிநிதி இலங்கையில் மரண தண்டனை முற்றாக இல்லாதொழிக்கப்படவேண்டும் என்று தெரிவித்ததுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார்.
மேலும் இங்கு இலங்கை தொடர்பில் உரையாற்றிய பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் மரணதண்டனை என்பன முற்றாக இல்லாதொழிக்கப்படவேண்டும் எனவும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன உறுதிசெய்யப்படவேண்டும் எனவும், பால்புதுமையினரை ஓரங்கட்டும் செயற்பாடுகள் முடிவிற்குக்கொண்டுவரப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM