(நெவில் அன்தனி)
தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான இலங்கை குழாத்தில் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண மகளிர் அணித் தலைவி விஷ்மி குணரட்ன பெயரிடப்பட்டுள்ளார்.
எனினும் ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்தவரும் ஐசிசியின் சிறப்பு உலக அணியில் பெயரிடப்பட்டவருமான தெவ்மி விஹங்கா சிரேஷ்ட அணியில் இடம்பெறவில்லை.
இலங்கை மகளிர் அணிக்கு வழமையான தலைவி சமரி அத்தபத்து தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேகப்பந்துவீச்சாளரும் அனுபவசாலியுமான 27 வயதுடைய ஹசினி பெரேரா உபாதைக்குள்ளானதால் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை துரதிர்ஷ்டவசமாக தவறவிட்டுள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் குழாத்தில் பெயரிடப்பட்டிருந்த அவருக்குப் பதிலாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் சந்த்யா சந்தீப்பனி இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். ஆனால், அவர் ஒரே ஒரு சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் மாத்திரம் விளையாடியவராவார்.
இலங்கை மகளிர் குழாத்தில் சமரி அத்தபத்துவுடன் இனோக்கா ரணவீர, ஓஷாதி ரணசிங்க ஆகிய அனுபவம்வாய்ந்த சிரேஷ்ட வீராங்கனைகளும் இடம்பெறுகின்றனர்.
90 போட்டிகளில் விளையாடியுள்ள சமரி அத்தபத்து 6 சதங்கள், 14 அரைச் சதங்கள் உட்பட மொத்தமாக 2,840 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2017 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் பெற்ற 178 ஓட்டங்கள் அவரது தனிப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும்.
மற்றொரு அனுபவசாலியான சுழல்பந்துவீச்சாளர் இனோக்கா ரணவீர 65 போட்டிகளில் 70 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். சகலதுறை வீராங்கனை ஓஷாதி ரணசிங்க 29 போட்டிகளில் 298 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் 25 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
குழாத்தில் இடம்பெறும் வீராங்கனைகளில் ஹர்ஷிதா சமரவிக்ரம, சுகந்திகா குமாரி, நிலக்ஷி டி சில்வா, அமா காஞ்சனா ஆகியோரும் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஓரளவு அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளாவர்.
அவர்களை விட கவிஷா டில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி, கௌஷினி நுத்யங்கன, மல்ஷா ஷெஹானி, அச்சினி குலசூரிய, தாரிகா செவ்வந்தி ஆகியோரும் இலங்கை மகளிர் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.
நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, வெகுவாக முன்னேறிவரும் பங்களாதேஷ், நியூஸிலாந்து, வரவேற்பு நாடான தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளுடன் கடினமான முதலாம் குழுவில் இலங்கை இடம்பெறுகிறது.
இராண்டாவது குழுவில் இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் தென் ஆபிரிக்காவும் இலங்கையும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி மோதவுள்ளன. இப் போட்டி கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM