(நெவில் அன்தனி)
இந்தியா, நியூஸிலாந்து ஆகியவற்றின் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட அணிகள் இன்று நடைபெறவுள்ள இரண்டு வெவ்வேறு சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.
தென் ஆபிரிக்காவின் பொச்செஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதவுள்ளன.
இதேவேளை, இந்திய - நியூஸிலாந்து ஆகியவற்றின் சிரேஷ்ட ஆடவர் அணிகள் 3 போட்டிகளைக் கொண்ட இருதரப்பு சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் ரஞ்சி விளையாட்டரங்கில் இன்ற இரவு மோதவுள்ளன.
19இன் கீழ் மகளிர் இ20 உலகக் கிண்ணம்
பொச்செஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்தியாவும் நியூஸிலாந்தும் முயற்சிக்கவுள்ளன.
19 வயதுக்குட்பட்ட ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும். எனவே அரை இறுதிக்கு முன்னேறியுள்ள நான்கு அணிகளும் எப்படியாவது உலக சம்பியனாகவேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடவுள்ளன.
இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் இன்று (27) வெள்ளிக்கிழமை விளையாடவுள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை (27) நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி அதன் தலைவி ஷபாலி வர்மாவில் பெரிதும் தங்கியிருக்கிறது. மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய சிரேஷ்ட அணியில் நிரந்தர இடம் பிடித்துள்ள ஷபாலி வர்மா, 51 மகளிர் சர்வதேச இருபது 20 போட்டிகளில் மொத்தமாக 1231 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ணத்தில் 5 போட்டிகளில் 147 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். சிரேஷ்ட அணியில் இடம்பெறும் மற்றொரு வீராங்கனை விக்கெட்காப்பாளர் ரிச்சா கோஷ் 30 போட்டிகளில் 427 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் 5 போட்டிகளில் 93 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இவர்கள் இருவரை விட ஷ்வேட்டா சஞ்சய் செஹ்ராவத் (5 போட்டிகளில் 231 ஓட்டங்கள்) துடுப்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
பந்துவீச்சில் மன்னாட் சஞ்சீவ் காஷியப் (7 விக்கெட்கள்), பர்ஷவி கௌரவ் சொப்ரா (6 விக்கெட்கள்), அர்ச்சனா ஷிவ்ராம் தேவி (5 விக்கெட்கள்) ஆகியோர் முக்கிய வீராங்கனைகளாக இடம்பெறுகின்றனர்.
19இன் கீழ் நியூஸிலாந்து மகளிர் அணி
நியூஸிலாந்து அணிக்கு ஒலிவியா அண்டர்சன் தலைமை தாங்குவதுடன் அவ்வணியில் மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் விளையாடிய 2 அனுபவசாலிகள் இடம்பெறுகின்றனர்.
இஸபெல்லா சார்ளி கேஸ், ஜோர்ஜியா பிளிம்மர் ஆகிய இருவரே சிரேஷ்ட மகளிர் அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளாவர். ஆனால் அவர்கள் பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை.
அனா சொஃபியா ப்ரவ்னிங் (4 போட்டிகள் - 126 ஓட்டங்கள், 4 விக்கெட்கள்), ஜோர்ஜியா எலென் ப்ளிம்மர் (5 போட்டிகள் - 120 ஓட்டங்கள்), எம்மா மேரி அமண்டா மெக்லியொட் (5 போட்டிகள் - 91 ஓட்டங்கள்), நட்டாஷா ஆன் வேக்லின் (4 போட்டிகள் - 6 விக்கெட்கள்), நட்டாஷா எம்மா கோடயர் (3 போட்டிகள் - 5 விக்கெட்கள்), கெத்தரின் மேரி சண்ட்லர் (2 போட்டிகள் - 5 விக்கெட்கள்), ஒலிவியா அண்டர்சன் (3 போட்டிகள் - 5 விக்கெட்கள்) ஆகியோர் முக்கிய வீராங்கனைகளாக நியூஸிலாந்து கனிஷ்ட அணியில் இடம்பெறுகின்றனர்.
இந்த இரண்டு அணிகளில் நியூஸிலாந்து தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாடுவதுடன் இந்தியாவைவிட பலம் வாய்ந்த அணியாக தென்படுகிறது.
இதற்கு அமைய நியூஸிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கின்ற போதிலும் இந்திய அணித் தலைவி ஷபாலி வர்மா தனது அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM