(நா.தனுஜா)
அண்மைய சில மாதங்களாக பணவீக்கம் குறித்தளவினால் வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், இவ்வருட இறுதிக்குள் பணவீக்கத்தை 4 - 6 சதவீத மட்டத்திற்குக் கொண்டுவரமுடியுமென எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, பணவீக்கம் வீழ்ச்சியடையும்போது அதனுடன் இணைந்ததாக சந்தை வட்டிவீதங்களும் குறைவடையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாணயச்சபையின் இவ்வருடத்திற்கான முதலாவது கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை நடைபெற்ற நிலையில், அதில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மத்திய வங்கியின் ஆளுநர், சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நகர்வுகள் தற்போது நேர்மறையான துலங்கலை வெளிக்காட்டுவதாகத் தெரிவித்தார். குறிப்பாக அண்மையில் இந்தியாவினால் சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியியல் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத்தொடர்ந்து சீனா மற்றும் பாரிஸ் கிளப் உறுப்புநாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், அப்பேச்சுவார்த்தைகள் சாதகமான பிரதிபலிப்பை வெளிக்காட்டுவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். எனவே அனைத்துக் கடன் வழங்குனர்களிடமிருந்தும் நிதியியல் உத்தரவாதத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும் என்றும், அதன்மூலம் இயலுமானவரை விரைவாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும் உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களை நடாத்துவது குறித்து ஆளுநரின் நிலைப்பாடு என்னவென்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், தேர்தல்களுக்கும் மத்திய வங்கிக்கும் எவ்வித தொடர்புமில்லை என்றும், எனவே அக்கேள்விக்குப் பதில்கூறவேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார். அதேவேளை உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களை நடாத்துவதற்கு அவசியமான போதியளவு நிதி உள்ளதா? என்ற கேள்விக்குப் பதிலளித்த ஆளுநர் நந்தலால் வீரசிங்க, அது அரச திறைசேரியிடம் எழுப்பப்படவேண்டிய கேள்வி என்று சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வரி அதிகரிப்பு பற்றிய கேள்விக்கு, அது நிதியமைச்சின்கீழ் வகுக்கப்படும் கொள்கை எனவும், அதற்கும் தமக்கும் தொடர்பில்லை எனவும் பதிலளித்தார்.
இதுஇவ்வாறிருக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது துணைநில் வைப்பு வசதி வீதத்தை 14.50 சதவீதமாகவும், துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தை 15.50 சதவீதமாகவும் அதன் முன்னைய மட்டங்களிலேயே பேணுவதற்குத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM