(நா.தனுஜா)
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கே தற்போது அதிமுக்கியத்துவம் வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இவ்விவகாரத்தைப் பொறுத்தமட்டில் இம்மாதம் சில நேர்மறையான நகர்வுகளை அவதானிக்கமுடிவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவினால் அளிக்கப்பட்ட கடன் உத்தரவாதத்தைத் தொடர்ந்து சீனா மற்றும் பாரிஸ் கிளப் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு, கடிதங்களும் பரிமாற்றப்பட்டிருப்பதாக ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இவ்வருட இறுதிக்குள் பணவீக்கத்தை ஒரு இலக்கப்பெறுமதிக்குக் கொண்டுவரமுடியும் என எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ள ஆளுநர் நந்தலால் வீரசிங்க, அதன்மூலம் வட்டிவீதங்களைக் குறைத்துக்கொள்ளமுடியும் என்றும் பல்வேறு துறைகளின் இயக்கத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவரமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வர்த்தகப்பேரவையின் (சிலோன் சேம்பர் ஒஃப் கொமர்ஸ்) 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரக் கண்ணோட்டத்தை வெளியிட்டுவைக்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வர்த்தகப்பேரவையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையாற்றுகையிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் தொடர்ந்து நிலவும் ஸ்திரமற்றதன்மை காரணமாக வருடாந்தம் மத்திய வங்கியினால் வெளியிடப்படும் பொருளாதார வளர்ச்சி தொடர்பான செயற்திட்டம் இம்முறை தயாரிக்கப்படவில்லை.
அதனடிப்படையில் நோக்குகையில் இலங்கை வர்த்தகப்பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரக் கண்ணோட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
கடந்த வருடம் நாடு கையிருப்புப்பற்றாக்குறை நெருக்கடி மற்றும் கடன் நெருக்கடி ஆகிய இரு பிரதான சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தது.
அவ்விரு நெருக்கடிகளினால் ஏற்படக்கூடிய தாக்கங்களையும் பாதிப்புக்களையும் குறைத்துக்கொள்வதற்காக நாம் சில கடினமான தீர்மானங்களை மேற்கொண்டோம்.
அதன்பொருட்டு குறிப்பாக நாணயக்கொள்கை இறுக்கமாக்கப்பட்டது. அதன்மூலம் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையான இரு இலக்கப்பெறுமதிக்குச் செல்வதனையும், பணவீக்கம் 100 சதவீதத்தை அடைவதையும் தடுக்கமுடிந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டவுடன், கடந்த வருட முடிவிற்குள் இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை எட்டமுடியுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது தாமதமடைந்தது. இருப்பினும் இவ்விவகாரத்தைப் பொறுத்தமட்டில் இம்மாதம் சில நேர்மறையான நகர்வுகளை அவதானிக்கமுடிகின்றது.
ஆகையினால் தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், அதனூடாக வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சலை ஊக்குவிப்பதற்குமே அதிக முக்கியத்துவம் வழங்கியிருக்கின்றோம்.
அதற்கமைய கடன் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கும் அவசியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அதன் ஓரங்கமாக இந்தியா சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கையின் கடன்கள் தொடர்பில் உத்தரவாதம் அளித்திருக்கின்றது.
அதேபோன்று பாரிஸ் கிளப் மற்றும் சீனாவுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன் கடிதங்களும் பரிமாற்றப்பட்டிருக்கின்றன.
அனைத்துக் கடன்வழங்குனர்களிடமிருந்தும் நிதியியல் உத்தரவாதத்தைப் பெற்றவுடன் எம்மால் அடுத்தகட்ட நகர்வை மேற்கொள்ளமுடியும்.
அடுத்ததாக நாணயக்கொள்கையை இறுக்கமாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உதவியது. அதன்படி இவ்வருட இறுதியில் பணவீக்கம் ஒரு இலக்கப்பெறுமதிக்குக் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.
அதன்மூலம் வைப்புக்கள் மற்றும் கடன்களுக்கான வட்டிவீதங்களைக் குறைக்கமுடியும். பணவீக்கமும், வட்டிவீதமும் குறைந்த மட்டத்திற்குக் கொண்டுவரப்படும்போது பல்வேறு துறைகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு உருவாகும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM