மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் கையளிக்கப்படும் - சம்பந்தன், சுமந்திரனுடனான சந்திப்பில் அரசாங்கம் தெரிவிப்பு

20 Jan, 2023 | 09:54 PM
image

(ஆர்.ராம்)

அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைவாக, மாகாணங்களுக்கான  காணி, பொலிஸ் அதிகாரங்களை கையளிப்பதற்குரிய நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுவதாக தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் எம்.ஏ.சுமந்தரன் ஆகியோருடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வடக்கு, கிழக்கில் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்படுகின்ற திணைக்களங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது பற்றிய அமைச்சரவைப் பத்திரத்தினை எதிர்வரும் திங்களன்று விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி சமர்ப்பிப்பார் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு தமிழ்த் தரப்பினால் வழங்கப்பட்ட ஒருவார காலக்கெடு கடந்த 17ஆம் திகதி நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை திடீரென தமிழ்த் தரப்பினருடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது.

குறித்த அழைப்பானது, சம்பந்தன், சுமந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு விடுக்கப்பட்டபோதும் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் மட்டுமே சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் பிற்பகல் 3.30மணியளவில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்களான அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழான திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளும் ஜனாதிபதியின் பணிக்குழாமினரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் குறித்த சந்திப்பு தொடர்பில் சுமந்திரன் எம்.பி. கருத்துவெளியிடுகையில்,

அரசாங்கத்திற்கான எம்மால் வழங்கப்பட்ட ஒருவாரகாலக்கெடு நிறைவுக்கு வந்து மூன்று நாட்களின் பின்னர் எம்முடன் சந்திப்பு நடத்த வேண்டுமென்று குறுகிய நேர இடைவெளிக்குள் அழைப்பு கிடைத்தது. இந்நிலையில்ரூபவ் நானும் சம்பந்தனும் குறித்த சந்திப்பில் பங்கேற்றோம்.

இச்சந்திப்பின்போது, அபகரிக்கப்பட்ட காணிகள் சம்பந்தமாக முதலில் கவனம் செலுத்தப்பட்டனது. குறிப்பாக வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழான திணைக்களங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் பற்றிய அவதானம் செலுத்தினும். விடயதானத்துக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் பவித்திராவும் வருகை தந்திதமையால் குறித்த விடயம் சம்பந்தமான தீர்மானமொன்றை எடுப்பதற்கு முயன்றோம்.

அப்போது, மாவட்ட ரீதியாக குறித்த திணைக்களங்கள் கையகப்படுத்தியுள்ள காணிகளை நாம் சுட்டிக்காட்டினோம். அதன்போது, அதிகாரிகள் அவற்றை மீளக் கையளிப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டனர். 

அச்சமயத்தில் சம்பந்தன் ஐயா, அந்தக் காணிகளை விடுவிப்பதற்கான காலவரையறையை கூறுங்கள். அவ்வாறு காலமொன்றை குறிப்பிடாது விடுவிப்போம் விடுவிப்போம் என்பதால் பயனில்லை என்று காட்டமாக கூறினார்.

அதுமட்மன்றி, ஏற்கனவே ஐந்து அரசியல் கைதிகளை விடுவிப்பதாக கூறியபோதும் 108ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக இணங்கியபோதும் இன்னமும் எந்தவிடயமும் நிலத்தில் நடைபெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் திங்கட்கிழமை விடுவிக்கப்படக்கூடிய காணிகளின் விபரங்களை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவை கூட்டத்தின் போது, அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்து அதுகுறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என்று தெரிவித்தார்.

அதற்கு அடுத்தபடியாக, தொல்பொருளியல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் அதிகாரிகளுடன் பேசப்பட்டது. இதில் குறிப்பாக குருந்தூர் மலையினைச் சுற்றியுள்ள காணிகளை கையகப்படுத்தியுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. இதன்போது குருந்தூர் மலை உட்பட தென்னமரவடி, திரியாய் போன்ற இடங்களில் தாம் கற்களை நாட்டியுள்ளபோதும் அவை வர்த்தமானி அறிவித்தல் விடுவிக்கவில்லை என்று குறிப்பிட்டனர்.

அச்சமயத்தில், நாம், அவ்வாறாயின் திணைக்கள அதிகாரிகளே கற்களை உடன் அகற்ற வேண்டும் என்று கோரினோம். அதற்கும் அரச தரப்பினர் இணங்கினார்கள்.

இதனையடுத்து, அதிகாரப்பகிர்வு விடயம் சம்பந்தமாக உரையாடினோம். இந்த உரையாடலின்போது, 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டோம். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பின்போது இந்த விடயத்தினை வலியுத்தியமையையும் நாம் எடுத்துரைத்தோம்.

அச்சமயத்தில், ஜனாதிபதி, தேசிய காணி ஆணைக்குழு தொடர்பான சட்ட வரைவு செய்யப்படுவதாக குறிப்பிட்டார். அது நிறைவடைந்தவுடன் காணி அதிகாரங்களை மாகணங்களுக்கு வழங்குவது குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் மாகாணங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர்களின் எண்ணிக்கையை 10ஆக வரையறுப்பதற்கு நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. ஒன்பது மாகாணங்களுக்கும் தலா ஒரு பிரதிப்பொலிஸ்மா அதிபரும், கொழும்பு மெற்றோபொலிக்கன் பிரிவுக்கு ஒருவருமாக பத்து நியமனங்களாக வரையறுக்கப்படவுள்ளன. அதன் பின்னர் அவர்களை மாகாண நிருவாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றார்.

இதேநேரம்,  உண்மைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தினை மீளப்பெற்று புதிய சட்டத்தினை உருவாக்குதல் உள்ளிட்டவற்றுக்கான சட்ட வரைவுகள் தயராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவரைவுகளை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக எம்முடன் கலந்தாலோசிக்குமாறு எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், இறுதியாக ஏற்கனவே இணங்கிய விடயங்கள் மற்றும் இன்றைய சந்திப்பில் இணங்கிய விடயங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் அதனடிப்படையிலேயே அடுத்த கட்டப்பேச்சுக்களை முன்னெடுப்பது பற்றிய தீர்மானங்களை எடுக்க முடியும் என்று அரச தரப்புக்கு தெரிவித்தோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right