(எம்.எப்.எம்.பஸீர்)
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கல்முனை மாநகர சபைக்கு வேட்புமனு ஏற்றுக்கொள்வதை தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்கால தடை உத்தரவு வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையிலான , நீதியர்சர்களான யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இதர்கான உத்தரவை பிறப்பித்ததுடன் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதியும் வழங்கியது.
மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், அதன் உறுப்பினர்கள், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர், அதன் உறுப்பினர்கள், அம்பாறை தெரிவத்தாட்சி அதிகாரி மற்றும் உதவி தெரிவத்தாட்சி அதிகாரி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பிக்குமாறும் இதன்போது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்தவரும், அரச சேவை ஆணைக்குழு உறுப்பினருமான அஹமட் லெப்பை மொஹம்மட் சலீம் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதியான அஹமட் ரஹிம் மொஹம்மட் ஹசீம் ஆகியோர், கல்முனை மாநகர சபைக்கு வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுவதை ஆட்சேபித்து அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தனர்.
இம்மனுவை கடந்த செவ்வாயன்று பரிசீலனைச் எய்த உயர் நீதிமன்றம் கல் முனை மாநகர சபைக்கு வேட்பு மனு ஏற்பதை தற்காலிகமாக தடுத்து, இன்று (19) மீண்டும் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. இதன் போதே இந்த இடைக்கால தடையுத்தரவு, வழக்கு விசாரணை நிறைவு பெறும் வரை நீடிக்கப்பட்டது.
இன்றைய தினம் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான ரஷ்மி டயஸ், ஷியாமலி லியனகே ஆகியோருடன் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் ஞானராஜ் , உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவதற்காக வேட்பு மனுக்களை கோரி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், சாய்ந்தமருது நகர சபை உள்ளடக்கப்படவில்லை என நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டினார்.
சாய்ந்தமருதையும், கல்முனைக்குள் உள்ளடக்கி வேட்பு மனு கோரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் ஞானராஜ், அதனூடாக சாய்ந்தமருது வாக்காளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அதனால் தேர்தல் ஒன்றினை நடாத்துவது மட்டும் போதுமானது அல்ல எனவும், நடாத்தப்படும் தேர்தல் சட்ட ரீதியாக நடாத்தப்படல் வேண்டும் எனவும் சட்டத்தரணி ஞானராஜ் குறிப்பிட்டார்.
இதன்போது, பிரதிவாதிகளில் ஒரு தரப்பான தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மன்றில் ஆஜராகி சமர்ப்பணங்களை முன் வைத்தார்.
வாக்களிப்பு மக்களின் அடிப்படை உரிமை என சுட்டிக்காட்டிய அவர், அதற்கு இடையூறு ஏற்படுத்துவது பொருத்தமானது அல்ல என அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் விடயங்களை ஆராய்ந்து, நீதிமன்றம் பொருத்தமான உத்தரவொன்றினை பிறப்பிக்க வேண்டும் என அவர் கோரினார்.
இந் நிலையில், விடயங்களை ஆராய்ந்த 3 நீதியரசர்களைக் கொண்ட நீதியரசர்கள் குழாம், இந்த மனு மக்களின் வாக்குரிமை தொடர்புபட்ட விடயம் என்பதால், அதன் விசாரணை விரைவாக முன்னெடுக்கப்படல் வேண்டும் என சுட்டிக்கடடி, மனுவை எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக அறிவித்தது.
அதன்படி வழக்கு தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றை நேற்று ( 19) முதல் 4 வாரங்களுக்குள் முன் வைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கும், அவ்வாட்சேபனைகளுக்கான பதில்கள் இருப்பின் அவற்றை குறித்த நான்கு வாரங்கள் நிறைவடையும் தினத்திலிருந்து இரு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மனுதாரர்களுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை, இந்த மனுக்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் விண்ணப்பம் செய்துள்ளார்.
உரிய ஆவணங்களுடன் இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய முடியும் என இதன்போது உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM