ரொபட் அன்டனி
புலம்பெயர் மக்கள் இலங்கையின் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக புலம்பெயர் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் சென்று அங்கு விசேட பிரச்சார கண்காட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள விருக்கின்றோம் என்று கொழும்பு பங்குபரிவர்த்தனை நிறுவனத்தின் தலைவர் டில்ஷான் வீரசேகர தெரிவித்தார்.
மேலும் கொழும்பு பங்கு பரிவர்த்தனை தரவுகள் தற்போது மத்திய தர மையப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுவிட்டதாகவும் மக்கள் இலகுவாக தமது பங்குச்சந்தை கணக்குகளை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தற்போது நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் காரணமாக பங்கு சந்தையின் நடவடிக்கைகள் எந்தவகையிலும் பாதிக்காது என்றும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றால் அதில் தாக்கம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எந்த காரணம் கொண்டும் இலங்கையின் பங்குச் சந்தை நடவடிக்கைகளை பாதிக்காது என்றும் மறுபுறம் உள்நாட்டில் கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டால் அது பங்குசந்தையின் செயற்பாட்டில் ஆரோக்கியமான ஒரு தாக்கத்தையே ஏற்படுத்தும் என்றும் டில்சான் வீரசேகர கூறினார்.
கொழும்பு பங்குபரிவர்த்தனை நிறுவனத்தின் 2023ஆம் ஆண்டுக்கான வரைபடத்தை, செயற்பாட்டுத் திட்டங்களை வெளியிடும் நிகழ்வு கடந்த புதன்கிழமை சங்கரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் தலைவர் டில்ஷான் வீரசேகர இந்த விடயங்களை வெளிப்படுத்தினார்.
முன்னதாக இந்த நிகழ்வில் கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ் பண்டாரநாயக்க 2023 ஆம் ஆண்டுக்கான வரைபடத்தை வெளியிட்டார்.
கடந்த வருடம் நாட்டில் இடம்பெற்ற கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் போராட்டங்கள், ஆட்சி மாற்றங்கள், அரசியல் பதற்ற நிலைமைகள் என்பவற்றினால் பங்குசந்தையின் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த போதிலும் நம்பிக்கை தரும் வகையிலான சில நகர்வுகளும் இடம்பெற்றதாகவும் கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ் பண்டாரநாயக்க கடந்த வருட நிலை மற்றும் அடுத்த வருட திட்டங்கள் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
கடந்த 2022ஆம் ஆண்டு எங்களுக்கு சவால்கள் நிறைந்ததாக காணப்பட்டது. அதற்கு மத்தியிலும் நாங்கள் சில முன்னேற்றங்களை நோக்கி நகர்ந்தோம். முக்கியமாக ஏ.ஸ்.பி.ஐ . என்று கூறப்படும் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 30 வீதத்தால் வீழ்ச்சி அடைந்தது.
அதேபோன்று ஸ்டாண்டர்ட் என்ட் புவர் - இலங்கை 20 என்ற விலைச்சுட்டெண் 37 வீதத்தால் வீழ்ச்சி வீழ்ச்சி அடைந்தது. எனினும் நாம் அவற்றை ஓரளவு ஆரோக்கியமான ரீதியில் கொண்டு செல்லக் கூடியதாக இருந்தது. கடந்த வருடத்தில் வட்டி வீதங்கள் கடுமையாக அதிகரிக்கப்பட்டன.
அந்த அதிகரிப்பு பங்குச்சந்தையில் பாரிய தாக்கத்தை செலுத்தியது. கடந்த வருடத்தில் பங்கு சந்தையின் முதலீடுகளில் 95 வீதமானவை உள்ளக ரீதியானதாக காணப்பட்டன. சர்வதேச மட்டத்திலான முதலீடுகள் கடந்த வருடத்திலும் குறிப்பிடத்தக்களவில் காணப்பட்டன.
இந்த வருடத்தில் நாம் அதனை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். சவால்கள் மற்றும் கடினமான நிலைமைகளுக்கு மத்தியிலும் இலங்கைக்குள் முதலீட்டாளர்கள் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்ததை அவதானிக்க முடிந்தது. பங்கு பரிவர்த்தனையின் செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கைகளிலும் 2022 ஆம் ஆண்டில் முன்னேற்றத்தை கண்டோம்.
மூன்றாவதும் இறுதியுமான கட்டத்தை நாங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றினோம். அது போன்று புதிய தகவல் மையம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது. அதன் நடவடிக்கைகளும் சிறப்பாக செய்யப்பட்டன. அத்துடன் இலங்கை பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழுவின் புதிய சட்டத் திட்டங்களுக்கு ஏற்ப நாங்களும் வரையறைகளை புதிய சட்ட திட்டங்களை வகுத்துக் கொண்டோம்.
மேலும் மக்களை தெளிவுபடுத்தும் பல்வேறு திட்டங்கள் கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக 500 செயலமர்வுகள் கடந்த வருடம் நடத்தப்பட்டன. இதேவேளை மிக முக்கியமாக கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் இரண் கிளைகள் இன்னும் சில மாதங்களில் மட்டக்களப்பு மற்றும் பாணந்துரை பகுதிகளில் நிறுவப்படவுள்ளன.
இது இவ்வாறு இருக்க கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் செயற்பாடுகளை 2023ஆம் ஆண்டில் பாரியளவில் விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். மக்களுக்கு பாரிய அளவில் இது தொடர்பான தெளிவு படுத்தல்களை மேற்கொள்ளவிருக்கின்றோம். கொழும்பு பங்கு பரிவர்த்தனை அகடமி ( கல்வியகம்) ஒன்றை நிறுவுவதற்கும் அதனூடாக முதலீட்டு துறை தொடர்பான கல்வி அறிவைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பங்குசந்தையில் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு தொலைபேசி செயலி ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதன் ஊடாக மிக இலகுவாக பங்குச்சந்தையில் கணக்குகளை ஆரம்பிக்க முடியும். மேலும் இந்த 2023 ஆம் வருடத்தில் பணத்துக்கு மேலதிகமாக அதிகளவு நிதி கருவிகளை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றார்.
இதேவேளை கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் தலைவர் டில்ஷான் வீரசேகர குறிப்பிடுகையில் 2022ஆம் ஆண்டில் இலங்கை வங்குரோத்து நாடு என்று பிரகடனப்படுத்தப்பட்டது. இது கடினமான காலமாக அமைந்தது. எனினும் நாங்கள் அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தினோம்.
கேள்வி கடந்த வருடம் லண்டனில் நீங்கள் புலம்பெயர் மக்களின் முதலீடுகளைப் பெற்று கொள்வதற்காக பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தீர்கள். அது எவ்வாறு அமைந்தது?
பதில் கடந்த வருடம் லண்டனுக்கு விஜயம் செய்து எமது பங்கு சந்தையில் அங்குள்ளவர்கள் முதலீடு செய்து தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதன் ஊடாக முழுமையான வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் எம்மால் அதிகளவு பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது.
உள்நாட்டில் காணப்பட்ட நிலைமை அதற்கு காரணமாகும் எப்படி இருப்பினும் 2023ஆம் ஆண்டில் மேலும் நாங்கள் அவ்வாறான நாடுகளுக்கு சென்று இந்த பிரசார செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம். புலம் பெயர் மக்களின் முதலீடுகளை இலங்கை பங்குசந்தைக்கு பெற்றுக்கொள்ள முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
கேள்வி சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கடனுதவியை எதிர்பார்த்திருக்கின்றது. அதற்கு இலங்கைக்கு கடன் வழங்கிய உலக நாடுகளுடன் கடன் மறு சீரமைப்பு செய்து கொள்ள வேண்டும். சர்வதேச மற்றும் உள்ளக கடன் மறு சீரமைப்பு பங்குச்சந்தையை பாதிக்குமா?
வெளிநாடுகளுடன் இலங்கை மேற்கொள்ளும் முறைப்பாடுகள் இலங்கையின் பங்குச் சந்தைகளில் தாக்கம் செலுத்தாது. உள்ளக ரீதியில் அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு செய்வதற்கு முயற்சித்தால் அது பங்குச் சந்தைகளில் சாதகமான தாக்கத்தையே ஏற்படுத்தும். பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாது.
கேள்வி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்?
பதில் தற்போது நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பங்கு சந்தையின் நடவடிக்கைகள் எந்தவகையிலும் பாதிக்காது. ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றால் அவற்றினால் தாக்கம் ஏற்படலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM