கரைச்சி பிரதேச சபை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் 'பயங்கரவாதி' நாவலின் வெளியீட்டு நிகழ்வு நேற்று (ஜன. 15) ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபையின் அரங்கில் நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை பேராசிரியர் கலாநிதி சி. ரகுராம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது நூலின் முதல் பிரதியை நிகழ்வின் பிரதம விருந்தினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் வெளியிட, கிளிநொச்சி 'இளையோரின் எதிர்காலம் இன்றே' அமைப்பின் தலைவர் திரு. கணபதிப்பிள்ளை ஆனந்தவடிவேல் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை சிறப்புப் பிரதியை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வழங்க, விடுதலைப்புலிகளின் மூத்த போராளி பசீர் காக்கா எனப்படும் மு. மனோகரன் பெற்றுக்கொண்டார்.
மேலும், நிகழ்வில் முன்னாள் வட மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா வாழ்த்துரை வழங்கினார்.
எழுத்தாளரும் போராளியுமான வெற்றிச்செல்வி மற்றும் யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தி.செல்வமனோகரன் விமர்சன உரையினை ஆற்றினர்.
அறிமுக உரையினை செந்தூரனும், வெளியீட்டுரையை பண்பாட்டுப் பேரவை தலைவர் அ. சத்தியானந்தனும் வழங்கினர்.
ஈழத்து விடுதலைப் போராட்டம் குறித்த பதிவு என்ற வகையில் 'பயங்கரவாதி' நாவல் முக்கியத்துவம் பெறுவதாக குறிப்பிட்ட பேராசிரியர் கலாநிதி சி. ரகுராம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எக்காலத்திலும் படிக்கவேண்டிய முக்கியமான நூலாக இந்த நாவல் அமையும் என்றும் இதன்போது தெரிவித்தார்.
அழகியல், மொழி, படிமம், நாவல் களம் என்பனவற்றில் 'பயங்கரவாதி' தேர்ந்த நாவலாக இருப்பதாகவும், கலைத்திறன் மற்றும் கலை அழகியலில் முதிர்ச்சி பெற்ற இந்த நாவல், ஈழ நாவல்களில் தனித்து நிலைத்திருக்கும் என்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் தி. செல்வமனோகரன் குறிப்பிட்டார்.
இதேவேளை நிகழ்வில் பேசிய போராளி எழுத்தாளர் வெற்றிச்செல்வி, இந்த நாவலில் வரக்கூடிய பாத்திரங்களோடும் களத்தோடும் தானும் வாழ்ந்த ஞாபகங்களை நினைவுபடுத்தியதுடன், தீபச்செல்வனின் கவித்துவமான மொழி பெறும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தீபச்செல்வன் மனிதநேயம் மிக்க தலைசிறந்த படைப்பாளி என்று குறிப்பிட்டதுடன், கொள்கைக்காகவும் இனப்பற்றுக்காகவும் உறுதியோடு பயணிக்கும் தீபச்செல்வன் ஓர் இலக்கியப் போராளி என்றும் புகழாரம் சூட்டினார்.
இந்நிலையில் ஏற்புரை ஆற்றிய நூலாசிரியர் தீபச்செல்வன் கூறகையில், மக்கள் இன்று வழங்கியுள்ள மகத்தான வரவேற்பு எனக்கு சிறந்த உற்சாகத்தை தருகிறது என்றதோடு, புகழுக்கும் பணத்துக்குமாக தான் எழுதுவதில்லை என்றும் தனது இன விடுதலைக்கான எழுத்துப் பயணம் தொடரும் என்றும் கூறினார்.
தொடர்ந்து அவர், இறுதிப் போர் நடைபெற்ற காலத்தில் தன்னை பயங்கரவாதியாக கூறி, இலங்கை இராணுவம் அடக்கி ஒடுக்கிய நினைவுகளை பகிர்ந்ததுடன், அதனை சவாலாகக் கொண்டே அன்றைய நாட்களில் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், அக்காலத்து பயண நினைவுகள்தான் 'பயங்கரவாதி' நாவலாக உருக்கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
தீபச்செல்வனின் உணர்வும் ஆழமும் அறிவும் கொண்ட உரையினை தொடர்ந்து நிகழ்வுகளை தொகுத்தளித்த ஜனகா நீக்கிலஸ் நன்றியுரை ஆற்றியதோடு நிகழ்வு நிறைவுபெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM