மட்டக்களப்பின் பழம்பெரும் 'களுவங்கேணி' கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, தனது அயராத முயற்சியின் பயனாக கல்வி, தொழில் தகைமைகளில் உயர்நிலையடைந்த முயற்சியாளர் திரு. மு.சச்சிதானந்தம் 38 வருட கல்விச்சேவையில் இருந்து இன்று சனிக்கிழமை (டிச. 31) ஓய்வுபெறுகிறார்.
முத்துவேல் - தங்கத்தாய் தம்பதியின் இரண்டாவது புதல்வரான இவர், தனது ஆரம்பக்கல்வியை சொந்த ஊரான மட்/ களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் கற்றார். இடைநிலைக் கல்வியை வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயம் மற்றும் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கற்றுத் தேறினார்.
இவர் பேராதனை பல்கலைக்கழக கலைப்பட்டதாரியும் ஆவார். இதன் மூலம் இக்கிராமத்தின் முதலாவது பட்டதாரி என்ற பெருமையையும் சிறப்பையும் பெற்றார்.
அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட ஆசிரிய போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து 27.12.1984 அன்று குருநாகல் மாவட்டத்தில் உள்ள நிக/நம்முவாவ முஸ்லிம் வித்தியாலயத்தில் முதல் ஆசிரய நியமனம் பெற்றார்.
அதன் பின்னர் இவர் சேவை கருதி நிக/கல்பாணவ முஸ்லிம் வித்தியாலயத்துக்கு இடமாற்றப்பட்டார்.
அடுத்து, தனது சொந்த ஊரான மட்/ களுவங்கேணி விவேகானந்தா வித்தியாலயத்துக்கு இடமாற்றம் பெற்றுச் சென்று, அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார். காலக்கிரமத்தில் இவ்வித்தியாலயத்தின் பிரதி அதிபராகவும் கடமையாற்றினார்.
இவர் அப்பள்ளியில் கடமையாற்றிய காலத்தில் அந்த பாடசாலையின் பாடவிதான இணைப்பாடவிதான மற்றும் பௌதீக வள மேம்பாட்டுக்காக கடினமாக உழைத்தார்.
பாடசாலையின் தரத்தினை உயர்த்தியதுடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அதிகரிப்புக்காக முன்னின்று செயற்பட்டார்.
அதுமட்டுமன்றி, சமூகத்தினரையும் இணைத்துக்கொண்டு பல்வேறு பௌதீக வளர்ச்சிகளை ஏற்படுத்தினார். இவரது துரிதமான செயற்பாட்டின் காரணமாக பாடசாலை அபரிமிதமான வளர்ச்சியடைந்தது.
இவரது அயராத பணியை கருத்திற்கொண்டு இப்பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்குமாறு இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும், நாகரிகம் கருதி அதனை ஏற்காமல், தொடர்ந்து பிரதி அதிபராகவே கடமையாற்றினார்.
முன்மாதிரியான ஆசிரியராக இருந்து சிறப்பாக கற்பித்தது மாத்திரமன்றி, தான் கற்பித்த மாணவர்களை தொழில்துறைக்கு வழிகாட்டி, பலருக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்துக்கும் உதவினார்.
பின்னர் மட்/தன்னாமுனை புனித ஜோசப் வித்தியாலயத்துக்கு இடமாற்றம் பெற்றுவந்து, உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு அரசியல் விஞ்ஞான பாடத்தினை கற்பித்து, பலர் பல்கலைக்கழகம் புகுவதற்கு காரணகர்த்தாவாக விளங்கினார்.
சேவை மாத்திரமன்றி, தனது கல்வி, தொழில் தகைமைகளையும் விருத்தி செய்துகொண்டார். பட்டபின் கல்வி டிப்ளோமா மற்றும் இரண்டு முதுமாணிப் பட்டங்களை கல்வித்துறை சார்ந்து பெற்றுக்கொண்டார்.
இதன் நிமித்தமாக கல்வித்துறையில் பல உயர்பதவிகளை வகித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகர், முன்பள்ளி இணைப்பாளர், உதவி கல்விப் பணிப்பாளர், கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர், இறுதியாக மட்டக்களப்பு ஆசிரிய மத்திய நிலையத்தின் முகாமையாளராக கடமையாற்றி ஓய்வுபெற்றுள்ளார்.
இத்துடன் திறந்த பல்கலைக்கழகம், தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றின் பிராந்திய நிலையங்களின் வருகைதரும் விரிவுரையாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
இவ்வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிலவற்றில் அங்கம் வகித்து, சமூகத் தொண்டுகளையும் ஆற்றி வருகிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக இவர் சிறந்த குணநலன்களை உடையவர். எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகுகின்ற மனிதராவார். நண்பர்களுடன் கலகலப்பாக பேசி நன்மதிப்பை பெற்றவர். உண்மையும் நேர்மையும் செயற்றிறனும் கடின உழைப்பும் சிறந்த குரல் வளமும் பேச்சாற்றலும் பெற்றவர். ஆளுமைப் பண்புகளும் ஆற்றலும் மிக்கவர்.
இரு பிள்ளைகளுக்கு தந்தையான இவர், ஒரு சிறந்த குடும்பத் தலைவராகவும் இருக்கிறார். தனது வாழ்வின் பெரும்பகுதியை கல்வித்துறைக்கு அர்ப்பணித்த ஒரு பெருந்தகை மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விப் புலத்தில் 'சச்சி சேர்' என்று நன்கறியப்பட்டவர். இவரது அரும்பணிகள் காலத்தால் அழியாதவை.
இவர் ஓய்வுபெறுவது எமது மாவட்ட கல்வித் துறைக்கு பெரிய இழப்பாகும். இவரது சேவை மேலும் எமக்கு கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM