16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்தால்...

Published By: Ponmalar

29 Dec, 2022 | 11:50 AM
image

சோமவாரம் என்பது திங்கட்கிழமையை குறிக்கிறது. 16 திங்கட்கிழமைகள் சிவபார்வதியை நினைந்து விரதமிருந்து பிரார்த்தனை செய்தால் எவ்வளவு மன கஷ்டங்களும் உங்களிடம் இருந்து சுலபமாக நீங்கி விடும். 

சாபத்தினால் ஒளியிழந்த சோமனான சந்திரன் சோமாவார விரதம் இருந்தபோது எம்பெருமான் காட்சியளித்ததோடு தேய்ந்து கீழே விழும் சந்திரனை தன்னுடைய இருகாரங்களாலும் காப்பாற்றி பிறைச்சந்திரனாக தலையில் சூடிக்கொண்டார் எம்பெருமான். பிறகு, சந்திரன் வளரும் நிலையையும் பெற்றான். அதுவே, தற்போது பௌர்ணமி, அமாவாசை என்றழைக்கப்டுகிறது. 

சோமவார விரதத்தை மேற்கொள்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த திங்கட்கிழமையிலும் துவங்கலாம். திங்கட்கிழமை அன்று அதிகாலையில் நீராடி மாலை வரை விரதம் இருந்து சிவபார்வதி பூஜைகள் மேற்கொள்ள வேண்டும். இதனால் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலைகளை இந்த விரதம் மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும். 

மேலும் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர மனதை ஒருநிலைப்படுத்தி 21 திங்கட்கிழமை விரதம் இருந்தால் மனம் மாறி இல்லறம் நல்லறமாக மாறும். 

மேலும் மாங்கல்ய தோஷம், களத்திரதோஷம், நீங்கும். இவ்விரதமுறையில் பெரியவர்களின் ஆசீர்வாதம் மிக முக்கியமானதாகும்.பெற்றோரிடமோ அல்லது மாமனார் மாமியாரிடமோ அல்லது வயதான தம்பதியரிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளலாம். 

திங்கட்கிழமையில் சிவபெருமான் பார்வதி தேவியுடன் இணைந்த படத்திற்கு வில்வ அர்ச்சனை செய்து லிங்காஷ்டகம் படிக்கலாம். அல்லது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு உரிய மந்திரங்களை ஜபிக்கலாம். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரத்தை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பழச்சாறுகள், பால், பழம் போன்றவற்றை உட்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம். 

நைவேத்தியமாக பழங்களையும் உங்களால் முடிந்த பாயாசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற ஏதாவது ஒரு நிவேதனத்தையும் படைக்கலாம். இது போல் தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொண்டு சிவ பார்வதியை வணங்கினால் நிச்சயம் நம்முடைய வேண்டுகோள்கள் நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right