( எம்.எப்.எம்.பஸீர்)
படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் விவகாரத்தில் 10 நாட்கள் கடந்தும் மர்மம் நீடிக்கின்றது.
சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலகக்குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சம்பவம் குறித்த சிறப்பு விசாரணைகள் இடம்பெறும் நிலையில் இதுவரை சந்தேக நபர் எவரும் உறுதியான சாட்சியங்களின் பிரகாரம் அடையாளம் காணப்படவில்லை. அதன்படி இது குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.
கடந்த சனிக் கிழமை 24 ஆம் திகதி, சி.ஐ.டி.யினரின் கோரிக்கையின் பிரகாரம் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, இலக்கம் 39 , பிளவர் வீதி கொழும்பு - 7 எனும் முகவரியில் அமைந்துள்ள தினேஷ் ஷாப்டரின் வீட்டுக்கு சென்று பகுப்பாய்வு செய்திருந்தது.
இதன்போது, தினேஷ் ஷாப்டரின் கழுத்தை இறுக்க பயன்படுத்தப்பட்டிருந்த வயரினை ஒத்த, அவ்வயரின் மற்றைய பகுதியாக இருக்கலாம் என சந்தேக்க முடியுமான வயர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
ஷாப்டரின் தாயாரின் வீட்டின் தொலைக்காட்சி அன்டனா வயரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதனைவிட கைகளைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஒருவகை பிளாஸ்டிக் பட்டிகளை ஒத்த 8 பட்டிகள் ஷாப்டரின் அறையின் இலாச்சி ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதனைவிட, ஷாப்டர் தனது மனைவியின் தாயாருக்கு, மனைவியின் குண நலன்களை வர்ணித்து நன்றி கூறி எழுதிய கடிதம் ஒன்றும், அதனை ஒத்த குறுஞ்செய்தி ஒன்று தொடர்பிலும் விசாரணை அதிகாரிகள் வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.
பல நிறுவனங்களின் உரிமையாளரான தினேஷ் ஷாப்டர், பல கோடி ரூபாவை பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்துள்ளமையும் அவற்றினால் எதிர்பார்த்தபடி இலாபமீட்ட முடியாமல் நாளுக்கு நாள் அவரது வியாபாரம் நஷ்டமடைந்து வருவதும் நெருங்கிய சிலரின் வாக்கு மூலங்கள் ஊடாக தெரியவந்துள்ளது.
நுவரெலியா பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 300 கோடி ரூபா பெறுமதியான காணி ஒன்று மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் கையகப்படுத்தப்பட்டமை, கையளிக்கப்பட்டுள்ளதாகவும், யாழ். பிரதேச அரசியல்வாதி ஒருவருடன் இணைந்து முன்னெடுத்த வர்த்தக நடவடிக்கை ஒன்றுக்காக 85 கோடி ரூபாவை முதலீடு செய்து அதனை மீளப் பெற முடியாமல் போனமை, பிரயன் தோமஸுடன் தொடர்புபட்ட 143 மில்லியன் ரூபா கொடுக்கல் வாங்கல் என பல கோடி ரூபாக்களை ஷாப்டர் இழந்துள்ளதாக குடும்பத்தார் மற்றும் நெருங்கியோர் சிலரின் வாக்கு மூலங்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், ஷாப்டர் வசித்த கறுவாத்தோட்டம் , பிளவர் வீதியில் உள்ள வீட்டை விற்பனை செய்வதாக நாளிதழ் ஒன்றில் விளம்பரம் செய்திருந்தமை தொடர்பிலும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.
இவற்றை மையப்படுத்தியும் ஷாப்டரின் குடும்பத்தரின் வாக்கு மூலங்கள் பலவற்றை மையப்படுத்தியும் ஷாப்டரின் மரணம் தற்கொலையா என்ற கேள்வி ஊடகங்கள் வாயிலாக எழுப்பட்டுள்ளன.
எனினும் இது தொடர்பில் விசாரணைகள் தீர்க்கமான கட்டத்தில் இருக்கும் நிலையில், கொலையா, தற்கொலையா என்ற முடிவுக்கு இதுவரை விசாரணையாளர்கள் வரவில்லை எனவும் அவ்வாறு தீர்மானிக்க போதுமான தடயங்கள் இல்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளிடையே கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள், ஷாப்டர் கொலை செய்யப்பட்டிருப்பின் அவருக்கு மிக நெருக்கமான ஒருவர் கொலையாளியாகவோ அல்லது அதனுடன் தொடர்புபட்டவராகவோ இருப்பதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கத் தக்க தரவுகளை மேலதிக விசாரணையில் வெளிப்படுத்தலாம் என விசாரணைகளுடன் நெருக்கமான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் வீரகேசரிக்கு சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM