உலகக் கிண்ணத்தை முத்தமிட்ட துருக்கிய சமையல் கலைஞர்: பீபா விசாரணை

Published By: Sethu

24 Dec, 2022 | 02:52 PM
image

உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டி நடந்த மைதானத்துக்குள், துருக்கியைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞரான சோல்ட் பே எவ்வாறு நுழைந்தார் என்பது குறித்து சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (பீபா) விசாரணை நடத்துகிறது.

கத்தாரின் லூசெய்ல் அரங்கில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸை தோற்கடித்து, உலகக் கிண்ணத்தை ஆர்ஜென்டீனா கைப்பற்றிய பின்னர், புகழ்பெற்ற சமையல் கலைஞர் சோல்ட் பேவும் (Salt Bae) மைதானத்துக்குள் காணப்பட்டார். 

ஆர்ஜென்டீன அணிக்கு வழங்கப்பட்ட உலகக் கிண்ணத்தை அவர் கையில் ஏந்தியவாறும் முத்தமிட்டவாறும் காணப்படும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. வீரர் ஒருவரின் பதக்கத்தை கடித்தவாறும் அவர் போஸ் கொடுத்தார். 

பீபா விதிகளின்படி, உலகக்கிண்ண சுற்றுப்போட்டியில் சம்பியனாகியவர்கள், பீபா அதிகாரிகள் மற்றும் நாடுகளின் தலைவர்கள் மாத்திரமே சம்பியன் கிண்ணத்தை ஏந்த முடியும்.

இந்நிலையில், சோல்ட் பேவுக்கு எவ்வாறு இவ்வாய்ப்புகள் கிடைத்த என்பது குறித்து பீபா விசாரணை நடத்துகிறது.

சில தனிநபர்கள், தகுதியற்ற வகையில் ஆடுகளத்துக்குள் நுழைந்தமை குறித்து விசாரணை நடத்தப்படுவதாக பீபா பேச்சாளர் ஒருவர்,  தெரிவித்துள்ளார்.

39 வயதான சோல்ட் பேயின் உண்மையான பெயர் நுஸ்ரத் கோக்சே  (Nusret Gokce) ஆகும். லொஸ் ஏஞ்சல்ஸ், லண்டன் உட்பட உலகின் பல பகுதிகளில் அவருக்கு சொந்தமான உணவகங்கள் உள்ளன. 

உலகக் கிண்ண ஆரம்பத்தில், போட்டியொன்றின்போது பீபா தலைவர் கியானி இன்பன்டினோவுக்கு அருகில் தான் காணப்படும் வீடியோவை சோல்ட் பே வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right