‘கர்மா’ என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்குப் பொருள், செயல் என்பதாகும். ஆனால், நாம் உடலால் செய்யும் செயலை மட்டும் இந்த வார்த்தை குறிப்பிடவில்லை. மாறாக, நாம் எண்ணும் எண்ணம், பேசும் பேச்சு, உணரும் உணர்வுகள் என்பனவும் கர்மாவுக்குள் அடக்கம். எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், நாம் மேற்கூறப்பட்டவற்றால் செய்யும் எந்தச் செயலும் நம்மிடமே திரும்பி வரும். அதேபோல், நாம் பெறும் அனைத்துமே நாம் ஏற்கனவே யாருக்கோ, எதற்கோ கொடுத்ததுதான்.
காரணங்களாலும், அதன் விளைவுகளாலும் ஏற்படுவதே கர்மா. நமது இன்றைய வாழ்க்கை - அது எப்படியிருந்தாலும் - இப்படி அமையக் காரணம், நமது முன்ஜென்ம கர்மாவின் விளைவே! அதேபோல், இப்பிறவியில் நாம் எண்ணும் எண்ணம், பேசும் பேச்சு, செய்யும் செயல் அனைத்துமே நமது அடுத்த பிறவியில் வாழப்போகும் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தும்.
நமது முற்பிறவியில் நாம் செய்த கர்மாவைச் சமப்படுத்தும் வகையிலேயே நாம் பிறக்கும் இடம், நமது பெற்றோர், நமது சொத்து, நம்மைப் பீடிக்கும் நோய்கள் என்பன அமைகின்றன. அதேபோல சந்தோஷமானதும் கஷ்டமானதுமான சூழல்கள் கூட, நமது முற்பிறவி கர்மாவின் பலன்களே! எனவே, இந்தப் பிறவியில் நீங்கள் அனுபவிப்பவை அனைத்துமே, ஏற்கனவே நீங்கள் முற்பிறவியில் செய்த கர்மாக்களின் பலன்களே என்பதை நம்புங்கள். உங்கள் இன்றைய நிலைக்கு நீங்களே காரணம் என்பதை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
இதில் உள்ள சுவாரசியம் என்னவென்றால், முற்பிறவியில் கர்மாவில் இருந்து நாம் தப்ப முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அதேயளவு உண்மையானது என்னவென்றால், இப்பிறவியில் நாம் அனுபவிக்கும் கர்ம பலன்களுக்கு எவ்வாறான எதிர்விளைவை நாம் வெளிப்படுத்துகிறோம் என்பது முழுக்க முழுக்க உங்களைச் சார்ந்ததே என்பதுதான்!
தியானம் மூலம், நமது நிலைக்கு நாமே காரணம் என்ற உண்மையை வெறுப்பின்றி ஏற்றுக்கொள்வதன் மூலமும், மிருக வலியையும், வேதனையையும் தரக்கூடிய புலால் உணவுகளை அடியோடு தவிர்ப்பதன் மூலமும், எப்போதும் குறைகள் அல்லது முறைப்பாடுகளையே சொல்லிக்கொண்டிருப்பதைத் தவிர்ப்பதன் மூலமும், வம்பு பேசுவதைத் தவிர்ப்பதன் மூலமும், கர்மாவின் தீவிரத்தைக் குறைக்க முடியும்.
கர்மாவை, ‘நல்ல கர்மா’ மற்றும் ‘தீய கர்மா’ என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இந்தப் பிரபஞ்சத்துக்கு அல்லது தன்னைத் தவிர, எந்த அல்லது ஏதோவொரு உயிரினத்துக்கு நன்மை பயக்கும் செயலைச் செய்வது நல்ல கர்மா... பிரபஞ்சத்துக்கோ அல்லது ஏதோவொரு உயிரினத்துக்கோ தீங்கு விளைவிக்கும் செயல் தீய கர்மா!
நாம் செய்யும் கர்மாக்களின் பலன்களை மூன்றாகப் பிரிக்கலாம். சஞ்சிதம், பிராராப்தம், கிரியாமனம் என்பனவே அந்த மூன்றும்!
சஞ்சிதம் என்பது நாம் என்று பூவுலகில் முதன்முறை ஜனித்தோமோ, அன்று முதல் இந்த நொடிவரை நாம் ஆற்றிய கர்மாக்களின் மொத்த பலன். பிராராப்தம் என்பது, இப்போது நாம் பிறந்திருக்கிறோமே... இந்தப் பிறவியில் மட்டும் நாம் ஆற்றிய கர்மாக்களின் பலன். ஏனென்றால், சஞ்சித கர்ம பலன்களை நாம் அனுபவிக்க ஒரு பிறவி போதாது. கிரியாமனம் என்பது, இந்தப் பிறவியில் பிராராப்த கர்ம பலனால் நமக்கு உண்டாகும் சுக துக்கங்களுக்கு நாம் தெரிந்தும் தெரியாமலும் ஆற்றும் எதிர்வினையால் விளையக்கூடிய பலன். இதுதான் எமது அடுத்த பிறவியைத் தீர்மானிக்கும்.
இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அறிந்தோ, அறியாமலோ மனதாலும் வார்த்தையாலும் உடலாலும் நாம் ஆற்றும் ஒவ்வொரு செயலும் கர்மாக் கணக்கில் பதியப்படும் என்பதே! எனவே, இதை உணர்ந்து, நமது எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றினது ஒவ்வொரு நடவடிக்கையையும் விழிப்புணர்வோடு செயற்படுத்தும் முழுப் பொறுப்பும் எமதேயாகிவிடுகிறது.
-வெலியமுனை குருசாமி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM