பனிக் காலத்தில் உடலை பராமரிப்பது எப்படி?

Published By: Ponmalar

23 Dec, 2022 | 09:42 AM
image

பனிக் காலத்தில், குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

சருமம் சுருங்காமல் இருக்க, புரதச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்.

குளிர் காலத்தில், கண்களும் கூட உலர்ந்து போக வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, கம்ப்யூட்டர் ஸ்கிரீனை தினம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இது இன்னும் அதிகமாக இருக்கும். பஞ்சில் வெள்ளரிச்சாறு அல்லது பன்னீரை நனைத்து, கண்கள் மேல், 10 நிமிடம் போட்டு, பின்னர் கண்களை கழுவலாம்.

வெந்தயத்தை பொடி செய்து, பாலில் கலந்து, உதட்டில் தடவினால், உதடு வெடிப்புகள் சரியாகும்.

இரவு துாங்குவதற்கு முன், பாதாம் எண்ணெயை உதட்டில் தடவலாம்.

உதட்டு வெடிப்பு மற்றும் வறட்சி நீங்க, பீட்ரூட் மற்றும் மாதுளைப் பழச்சாறு, தலா ஒரு தேக்கரண்டி எடுத்து பூசலாம்.

இறந்த செல்களை நீக்க, 'பேஸ் மாஸ்க்'காக முட்டையின் வெள்ளைக்கரு, தேன் மற்றும் எலுமிச்சை சாறு, தலா ஒரு தேக்கரண்டி கலந்து, முகத்தில் பூசலாம். ஒரு மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.

முகத்திற்கு ஆவி பிடிக்க வேண்டாம். 'புரூட் பேஷியல்' செய்து கொள்ளலாம். தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளை சேர்த்து குழைத்து, உடல் முழுவதும் பூசி, 20 நிமிடம் கழித்து, பாசிப்பயறு மா போட்டு குளிக்கலாம்.

பப்பாளியுடன் சிறிது பால் சேர்த்து மசித்து, முகத்தில் தடவினால், முகச் சுருக்கங்கள் சரியாகும்.

பாலாடை மற்றும் பன்னீரை சம அளவு கலந்து, முகத்தில் பூசலாம்

நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், தேங்காய் எண்ணெயுடன் வெண்ணெய் கலந்து முகத்தில் பூசினால், எப்படிப்பட்ட வறட்சியும், சுருக்கமும் சரியாகும்.

வாழைப்பழத்துடன் தேன் கலந்து முகத்தில் பூசிக் கொள்ளலாம்.

பாதாம் பருப்பை ஊற வைத்து அரைத்து, அதனுடன் சம அளவு சோயா மா சேர்த்து பன்னீரில் கலந்து, 'பேஸ் பேக்'காக போடலாம். இதனால் சுருக்கம் நீங்கும்.

துாங்குவதற்கு முன் நகத்தின் மீது சிறிது ஒலிவ் எண்ணெயை தடவலாம். இதனால், நகம் வறண்டு, உடையாது.

செம்பருத்தி, துளசி, வேம்பு கலந்து தலைக்கு, 'பேக்'காகப் போட்டு, சிறிது நேரத்திற்கு பின் குளிக்கலாம்.

பொடுகுத் தொல்லை அதிகமாகும் நேரம் இது என்பதால், தலைக்கு கொஞ்சமாவது எண்ணெய் வைப்பது அவசியம்.

தலைக்கு குளித்ததும், முடியை கட்டி வைக்காமல், உடனே நன்கு துவட்ட வேண்டும்.

இரவில், பாத வெடிப்பின் மீது, தேங்காய் எண்ணெய் பூசினால், வெடிப்பு மறைந்து விடும்.

கால் கப் தயிருடன், சிறிது வினிகர் கலந்து, கால் பாதங்களில் தேய்த்து, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், இறந்த செல்கள் நீங்கி பாதம் பளபளக்கும்.

சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள், குளித்து முடித்ததும், யூகலிப்டஸ் ஒயிலை, பின் கழுத்து மற்றும் நெற்றிப் பொட்டில் பூச வேண்டும். இதனால், சளி பிடிக்காது.

அப்பிளை வேக வைத்து மசித்து, தேன் கலந்து கை மற்றும் கால்களில் சொரசொரப்பான இடங்களில் தடவலாம்.

பலருக்கும் முழங்கை மற்றும் முழங்காலில் கருமை படர்ந்து சொர சொரப்பாக இருக்கும். இதற்கு, கடலை எண்ணெயுடன், எலுமிச்சை சாறு கலந்து போடலாம்.

குளிர் காலத்தில், சருமம் ரொம்ப வறண்டு விடும். அதனால், சோப் பயன்படுத்துவதற்கு பதிலாக, கடலை மா, பாசிப்பயறு மா சம அளவு எடுத்து, பாலில் கலந்து, தேய்த்து குளிக்கலாம். கூடவே, ஒரேஞ்ச் தோல் பொடியையும் கலந்து குளிக்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right