மனந்திறந்து பாராட்டிய இந்திய தூதுவர் கோபால் பாக்லே
கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்க நாதனைப் பணிப்பாளராகவும், கலைத்துவ ஆலோசகராகவும் கொண்டு இயங்கிவருகின்ற அரு ஸ்ரீ கலையகத்தின் பதினெட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லயம்’ என்னும் தாளலய இசைக்கோல நடன நிகழ்ச்சி, கடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி மாலை கொழும்பு பிஷப் கல்லூரி கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்துடனும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்டுடனும் ( வீரகேசரி ) இணைந்து அருஸ்ரீ கலையகம் வழங்கிய இந்நிகழ்ச்சிக்கு சக்தி டி.வி. யும் அனுசரணை வழங்கியது. இந்நிகழ்ச்சியில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மெல்லென இசைத்துவரும் சுருதியோடும் நெகிழ்ச்சியைத் தூண்டிவிடும் சக்திவாய்ந்த தாளக்கட்டுடனும் நளினமான காலவெளியை இனிய ஒலி அலையாக கிளர்ந்தெழச் செய்யும் சக்தியைக் கொண்டது லயமாகும். சுருதியை மாதாவென்றும், இந்த அற்புதமான ஒலி வெளிப்பாடான லயத்தினை பிதா எனவும் கலைஞர்கள் போற்றுவர்.
இனங்களுக்கிடையே செளஜன்யத்தையும் , சமாதானத்தையும் கலைகளின் ஊடாக மேலோங்கச் செய்யும் நோக்குடன் இயங்கி வருகின்ற அரு ஸ்ரீ கலையகம் கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதனின் நெறிப்படுத்தலில் அதன் மூத்த நடனக்கலைஞர்கள், மற்றும் சிங்கள நடனக்கலைஞர்கள் ஆகியோரை இணைத்து நடத்திய இந்த ‘லய’ நடன ஆற்றுகையில் லயத்தின் பல்வேறு விசேட அம்சங்களும் வெளிப்படும்படியான கூறுகளும் நேர்த்தியாக சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தன.
( இந்தோனேஷிய கதக்களி, மற்றும் கிரேக்க நடனம் உள்ளடங்க) ஈற்றில் தில்லானாவுடனும் இணைந்த லயக் கதம்பத்துடனான இந்நடன நிகழ்ச்சி தொய்வின்றி தொடர்ச்சியாக விறுவிறுப்பாகவும் மிடுக்காகவும் நளினமாகவும் சிறப்பாகவும் இடம்பெற்று பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. காட்சிக்கு காட்சி வெவ்வேறு ஆடை, அணி,அலங்காரங்களுடன் உணர்வுபூர்வமாக ஆடிய அனுபவம்மிக்க கலைஞர்களின் நடன லாவகத்தில் மகிழ்ந்த ரசிகர்கள், தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த ‘லய’மான கரகோஷத்தை இடையிடையே எழுப்பியதையும் காணமுடிந்தது.
இந்நிகழ்வில் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
‘‘இசையோடும் நடனத்தோடும்’’தாளக்கட்டுனும் இணைந்து இனிமையாகவும் சீருடனும் ஒலிக்கும் லயம், இயற்கையோடு ஒன்றித்தது. இதன் ஒலியும் ஒரு லயத்துடன்தான் இயங்குகிறது. பேரிரைச்சலோடு சீறிப்பாய்ந்து ஓடிவந்து கரையில் அடங்கும் கடல் அலைகளும் இரைச்சலுடன் வீசி ஓயும் காற்றும், மழையும் காலையில் உதித்து மாலையில் மறையும் சூரிய ஒளியும் மெல்ல விரியும் மலர்களின் மலர்ச்சியும் இயற்கையின் அனைத்து கர்மங்களும் ஒருவித லயத்துடன்தான் இயங்குகின்றன.
இந்த அரிய லயத்தை பிரதான தலைப்பாகக் கொண்டு இங்கு அரங்கேறிய வெவ்வேறு காட்சியாக அமைந்த இந்த நடன நிகழ்ச்சி பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. இத்தகையதோர் அருமையான நடன நிகழ்ச்சியை ஒழுங்கு செய்து வழங்கிய அருஸ்ரீ கலையகத்துக்கும் குறிப்பாக அதனை தயாரித்து நெறியாள்கை செய்த அதன் கலைத்துவ ஆலோசகர் டாக்டர் அருந்ததி ஸ்ரீரங்கநாதனுக்கும் எமது இதயபூர்வமான நன்றியைத் தெரிவிக்கிறேன்’’
மேற்கண்டவாறு கூறிய இந்தியத் தூதுவர் பாக்லே மேலும் பேசுகையில் பரத நடனக் கலை இந்தியாவில் உருவாகி வளர்ந்ததெனினும் அது இந்தியாவிலும் இலங்கையிலும் சிறப்புற்று விளங்குவதாகவும் இனங்களுக்கிடையே இக்கலை நல்லுறவைப் பேண உதவுவது மகிழ்ச்சிக்குரியதெனவும் குறிப்பிட்டார். மேலும் சிறந்த இசைக்கலைஞரும் ஒலிபரப்புத்துறையில் உயர் பதவிகளை வகித்தவரும் அருஸ்ரீ கலையகத்தின் பணிப்பாளருமான கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதனின் பரந்துபட்ட அரியகலைச் சேவையினையும் பெரிதும் பாராட்டிப் பேசினார்.
அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் இந்நடன நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
–அன்னலட்சுமி இராஜதுரை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM