(இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய அறிக்கைக்கு அமைய தேர்தலை நடத்துவதாக இருந்தால், தேர்தலை இன்னும் ஆறு மாத காலத்திற்கு மேல் பிற்போட நேரிடும்.
தற்போதைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைக்கு அமைய தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உரிய காலத்தில் தேர்தலை நடத்தலாம்.
அதற்கு எல்லை நிர்ணய குழுவின் பரிந்துரைகள் செல்வாக்கு செலுத்தாது என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (15) இரவு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தொகுதி எல்லை நிர்ணய செயற்பாடுகள் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சந்திப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி நில அளவை திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
எல்லை நிர்ணயம் தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்படும்.
உள்ளூராட்சி மன்றங்களின் தற்போதைய 8800 உறுப்பினர் எண்ணிக்கையை உள்ளூராட்சி மன்றங்களுக்கான தொகுதி எல்லை நிர்ணய அறிக்கைக்கையின் பிரகாரம் 5,100 முதல் 5,200 வரை குறைத்துக் கொள்ள மதிப்பிடப்பட்டுள்ளது.
நிர்ணய அறிக்கை 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும்,அதனை தொடர்ந்து மீளாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தொகுதி எல்லை நிர்ணய அறிக்கையின் பரிந்துரைகளின் பிரகாரம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் தேர்தலை இன்னும் ஆறு மாத காலத்திற்கு அதிகமான காலம் பிற்போட நேரிடும். ஏனெனில் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை செயற்படுத்த உரிய காலவகாசம் வேண்டும்.
தற்போதைய உள்ளூராட்சி தேர்தல் முறைக்கு அமைய தேர்தலை உரிய காலத்தில் நடத்த முடியும்.எல்லை நிர்ணய அறிக்கை உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு தடையாக அமையாது என்றார்.
தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் அறிவித்ததை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தன கடந்த நவம்பர் மாதம் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நால்வர் அடங்கிய குழுவை நியமித்தார்.
கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் நியமிக்கப்பட்ட இந்த குழு எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் நகர சபை மற்றும் பிரதேச சபை தேர்தல் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரின் அதிகாரத்துக்கு அமைய ஏற்கனவே ஒரு வருட காலம் பிற்போடப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தலை பிற்போடும் நோக்கத்தில் அரசாங்கம் எல்லை நிர்ணய குழுவை நியமித்துள்ளது என பிரதான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.
அரசியலமைப்பு மற்றும் நாட்டின் பொது கோட்பாடுகளுக்கு அமைய உரிய காலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களான ஜி.எல் பீரிஸ்,ரஞ்சித் மத்தும பண்டார,தயாசிறி ஜயசேகர,எம்,ஏ சுமந்திரன் மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் கடந்த திங்கட்கிழமை (12ஆம் திகதி )உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM