ஒரு பெண் திருமணமாகி கர்ப்பமுற்று ஒரு சிசுவைப் பெற்றெடுக்கும் போதுதான் அப்பெண் பிறந்ததன் பயனை பூர்த்தி செய்கிறாள். தற்போதைய நவீன உலகில் ஒரு பெண் பிறந்து வளர்ந்து வாழ்க்கைக் காலத்தை பூர்த்தி. செய்து இவ்வுலகை நீத்து இறக்கும் வரை அவளின் வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் நவீன தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்துகின்றது. அதாவது ஒரு குழந்தை பிறக்கும் போதிலிருந்து அது வளர்ந்து தனது கல்வி நடவடிக்கைகளை பூர்த்தி செய்து பின்னர் தனக்குரிய வாழ்க்கைத் துணையினை தேர்வு செய்யும் தருணத்திலும் பின்னர் தமது சந்ததியை பெற்றுக் கொள்ளும் போதும் இத்தொழில்நுட்பம் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றது.
இதேபோன்று இத்தொழில்நுட்ப வளர்ச்சியினால் தற்காலப் பெண்களின் கர்ப்பகாலப் பராமரிப்பிலும் அதன் பின் பிரசவமுறையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இங்கு ஆராய்வோம். ஒரு கர்ப்பிணிப் பெண் தனது வயிற்றிலுள்ள கருவை பெற்றெடுக்கும் முறை சாதாரண சுகப்பிரசவமா? அல்லது சிசேரியன் பிரசவமா? (சத்திரசிகிச்சை முறை) என்பது கர்ப்பமுற்றிருக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் கணவனுக்கும் அவரது குடும்பத்தவருக்கும் பெரிய ஒரு கேள்விக்குறியாகவே இருக்கும்.
ஏனெனில் முன்னைய காலங்களில் பெண்கள் பிரசவம் என்றால் சாதாரண சுகப்பிரசவம் என்றுதான் கேள்விப்பட்டிருப்பார்கள். அதாவது முன்னயை காலங்களில் பிரசவம் என்பது வைத்தியசாலைகளில் மட்டுமன்றி வீடுகளிலும் பிரசவம் பார்க்கும் பெண்ணால் பார்க்கப்பட்டது. இதன்போது கூடுதலாக எவ்வித சிக்கலும் இல்லாது சுகப்பிரசவம் நடைபெற்று தாயும் சேயும் நலத்துடன் இருந்தார்கள். அக்காலத்தில் சிசேரியன் பிரசவம் என்ற கதைக்கே இடமில்லாது இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பிரசவங்கள் வீடுகளில் நடைபெறுவதில்லை. பிரசவவலி ஏற்பட்டதும் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்கிறார்கள். பிரசவம் வைத்தியர்களின் கண்காணிப்பில் நடைபெறுகின்றது. இதில் சாதாரண சுகப்பிரசவமும் சிசேரியன் பிரசவமும் நடைபெறுகின்றன.
இக்காலத்தில் நடைபெறும் பிரசவங்களைப் பார்க்கும்போது எம்மனதில் எழும் முதல் கேள்வி முன்னைய காலத்தில் பலர் சாதாரண சுகப்பிரசவங்களை எவ்வித சிக்கலுமின்றி இலகுவில் மேற்கொண்டனர். அத்துடன் இவற்றில் பல வீடுகளிலேயே நடைபெற்றன. ஆனால் இன்று ஏன் அவ்வாறு முடிவதில்லை?
இன்று பிரசவம் என்றால் அவை வைத்தியசாலையிலேயே நடைபெறுகின்றன. அத்துடன் அவற்றில் பெரும்பாலானவை சிசேரியன் பிரசவங்களிலேயே முடிவடைகின்றன. இந்த மாற்றத்திற்கான காரணங்களை ஆராய்வோமானால் இன்று இளம்பெண்களது வாழ்க்கை முறை முன்னைய காலங்களுடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது. அதாவது அன்றைய காலத்தில் பெண்கள் தமது சகல வேலைகளையும் தாமாகவே செய்தனர். அவர்களது உடல் உழைப்பு அதிகமிருந்தது. இதனால் அன்றைய பெண்கள் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமானவர்களாகவும் இருந்தனர். சமைத்தல், துணி துவைத்தல், கூட்டுதல், நடத்தல் என பலவேலைகளையும் தாங்களே செய்யும் போது அவர்கள் உடல் ஆரோக்கியம் திடகாத்திரமாக இருந்தது. இந்நிலை இப்போதைய பெண்களிடம் இல்லை. இன்றைய காலத்தில் பெண்களது சகல வேலைகளிலும் இயந்திரங்களும் நவீன கருவிகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. இதனால் பெண்களுக்குத் தேவையான அன்றாட உடற்பயிற்சிகள் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் உடல் திடகாத்திரநிலை குறைந்து சோம்பல் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் பிரசவ நேரத்தில் அவர்களது பிரசவ முறை மாற்றமடைய இவை பெரும்பங்கு வகிக்கின்றன.
தற்போதைய உணவு முறைகளும் முன்னைய உணவு முறைகளிலும் முற்றிலும் வேறுபட்டவை. முன்னைய பெண்களது உணவுப்பழக்கங்கள் ஆரோக்கியமானவையாகக் காணப்பட்டன. உணவுப் பதார்த்தங்களும் இயற்கையானவையாகப் பெரும்பாலும் காணப்பட்டன. தற்போதைய உணவு பழக்கங்கள் பெண்கள் உடலில் அதிகளவு சீனிச்சத்து, மாச்சத்து, கொழுப்புச்சத்தை அதிகரிப்பனவாக காணப்படுகின்றன. அத்துடன் உடற்பயிற்சிகளும் குறைவாக உள்ள நிலையில் கூடுதலாக பெண்கள் கணனிகள் முன்னும் தொலைக்காட்சி முன்னும் கைத்தொலைபேசிகளுடனும் தமது நேரத்தை செலவழிப்பதுடன் இவ்வாறான உணவுப்பழக்கங்களையும் கடைப்பிடிக்கும்போது அவர்களது உடல்நிறை அதிகரிப்பதுடன் ஆரோக்கியம், சுறுசுறுப்புத் தன்மை குறைவடைகின்றது. இந்நிலையில் இன்றைய பெண்கள் பலர் சாதாரண சுகப்பிரசவத்தை மேற்கொள்ள முடியாது திணறுகின்றார்கள். இவ்வாறு சுகப்பிரசவம் இயலாது போகின்றபோது பிரசவ அறையில் பெண்கள் தொடர்ந்து தம்மால் சாதாரண பிரசவத்தை முயற்சிக்க முடியாதுள்ளது. சிசேரியன் செய்து விடுங்கள் என மன்றாடும் சந்தர்ப்பங்களும் உள்ளன.
இவ்வாறு சுகப்பிரசவத்திற்கு கஷ்டப்பட்டு தாமாகவே கேட்டு சிசேரியன் பிரசவம் மேற்கொண்டால் கூட, கூட இருப்பவர்களும் உறவினர்களும் வைத்தியசாலைகளில் இப்போதெல்லாம் எடுத்தவுடன் சிசேரியன் செய்து விடுகின்றனர் என பேசிக்கொள்வதே வழமையாகி விட்டது.
மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள நவீன தொழிநுட்ப வளர்ச்சி சிசேரியன் பிரசவம் அதிகரிக்கக் காரணமாகிவிட்டதா?
மருத்துவத்துறை தற்போது மிகவும் முன்னேறி விட்டது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் ஸ்கேன் பரிசோதனைகள், சிசுவின் இருதயத் துடிப்பை கண்டறியும் கருவிகளின் வருகை, சிசுவின் அங்க வளர்ச்சிகளை துல்லியமாக அறிந்து கொள்ளும் ஸ்கேன் பரிசோதனை (4D, 5D Scan) போன்றவற்றின் மூலம் தற்காலத்தில் சிசுவளர்ச்சி, சிசு ஆரோக்கியம் குறித்து துல்லியமாக முன்கூட்டியே அறியக்கூடியதாகவுள்ளது. இதனால் சிசுவிற்கு ஏதும் ஆபத்துகள் ஏற்படுமா? என முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். இதனால் சிசுக்கள் ஆரோக்கியம் குறைந்து துடிப்புகள் நின்று போவதற்கு முன்னரே குழந்தைகளை காப்பாற்ற சிசேரியன் பிரசவம் மூலம் வெளியே கொண்டுவருகிறோம்.
இவ்வாறான வசதிகள் முன்னைய காலங்களில் இல்லாமையால் அன்று சிசுக்களின் ஆரோக்கியம் சரியாக அறியப்படாமல் சிசேரியனும் செய்யப்படாமல் குழந்தைகள் சில பல ஆரோக்கியக் குறைகளுடன் பிறந்து கஷ்டப்பட்டமை மருத்துவ வரலாற்றில் உள்ளது.
சிசேரியன் முறையில் ஏற்பட்ட மாற்றம்
இன்றைய காலகட்டத்தில் சிசேரியன் பிரசவமானது முற்றிலும் இலகுவானதும் ஆபத்துகள் இல்லாததுமான ஒரு சத்திரசிகிச்சையாக உள்ளது. இதற்கான மயக்கமும் பெண்ணை முழுதாக மயக்காமல் உடலின் கீழ்ப்பகுதியை மட்டும் விறைக்கப்பண்ணி சிசேரியன் செய்யப்படுவதால் ஆபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன.
கடந்த 50 வருடங்களுக்கு முன் பார்த்தால் சிசேரியன் என்றால் அது ஒரு பெரிய சத்திரசிகிச்சையாகவும் முழுதாக பெண்ணை மயக்கி செய்ய வேண்டியதாகவும் ஆபத்துகள் நிறைந்த ஒரு பிரசவ முறையாகவும் இருந்தது. இதனால் பலரும் சிசேரியன் என்ற வார்த்தையை கேட்டு பயந்தனர். இன்று ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றத்தால் இது ஒரு சுலபமான மாற்று வழியாகவும் பிரசவ முறையாகவும் காணப்படுகின்றது.
எனவே பெண்கள் தமது உடற் பயிற்சி, உணவுப் பழக்கங்களில் கவன ஞ்செலுத்தி பிரசவ நேர சிக்கல்களை தவிர்ப்பதுடன் தமது வைத்திய நிபு ணரின் ஆலோசனையுடன் பிரசவ முறைகளை தேர்வு செய்வது சிறந்தது. எந்த முறை பிரசவமானாலும் அதன் பின்னர் தாயும் குழந்தையும் எவ்வித ஆரோக்கிய சிக்கல்களும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரதும் பிரார்த்தனையும் ஆகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM