போதைப்பொருள் குற்றச்சாட்டில் ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீராங்கனை பிரிட்டனி கிறைனர் கைதி பரிமாற்றத்தன் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டனி கிறைனரை விடுவிப்பதற்காக, 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த ரஷ்ய ஆயுதத் தரகர் விக்டர் பௌட்டை அமெரிக்கா விடுவித்தது,
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியிலுள்ள விமான நிலையத்தில் வைத்து நேற்று வியாழக்கிழமை வைத்து இக்கைதிகள்; பரிமாற்றம் நடந்தது,
31 வயதான பிரிட்னி கிறைனர் அமெரிக்காவின் மிகப் பிரலமான கூடைப்பந்தாட்ட வீராங்கனைகளில் ஒருவர். 2 தடவைகள் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றவர்.
ரஷ்ய சிறையிலிருந்து பிரிட்னி கிறைனரையும் முன்னாள் கடற்படை அதிகாரி போல் வெலனையும் கைதிகள் பரிமாற்ற முறையில் விடுவிக்க அமெரிக்க முயற்சித்தது.
52 வயதான போல் வெலன் 2018 டிசெம்பரில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டார். போல் வெலனுக்கு 16 வருட சிறைத்தண்டனை விதித்து 2020 ஆம் ஆண்டு ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பிரிட்னி கிறீனருக்கும் போல் வெலனுக்கும் பதிலாக ரஷ்யாவின் விக்டர் பௌட்டை விடுவிக்கும் திட்டத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அங்கீகாரம் அளித்திருந்தார், ஆனால், நேற்றைய கைதிப் பரிமாற்றத்தில் போல் வெலன் விடுவிக்கப்படவில்லை.
விக்டர் பௌட்
52 வயதான விக்டர் பௌட் (Viktor Bout), சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் இராணுவ அதிகாரி ஆவார். ரஷ்ய, போர்த்துகல், பிரெஞ்சு, பாரசீகம், ஆங்கில மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். ரஷ்ய இராணுவத்தின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய அவர், 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் சரக்கு விமானப் போக்குவரத்து நிறுவனங்களை ஸ்தாபித்தார்.
அவ்விமானங்கள் மூலம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆயுதங்களைக் கடத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆயுத விற்பனைத் தடைகளை மீறி ஆயுதங்களை விநியோகித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இண்டர்போல் அறிவித்தலையடுத்து, 2008 ஆம் ஆண்டு தாய்லாந்து வைத்து பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் பேரில் அந்நாட்டு பொலிஸாரால் விக்டர் பௌட் கைது செய்யப்பட்டார். ரஷ்யாவின் எதிர்ப்பையும் மீறி 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு அவர் நாடு கடத்தப்பட்டார். அவரின் கைது சட்டவிரோதமானது என ரஷ்யா கூறியது.
அமெரிக்க பொதுமக்களையும், அதிகாரிகளையும் கொல்வதற்கு சதி செய்தமை, பயங்கரவாத அமைப்புக்கு உதவி வழங்கியமை முதலான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. 2011 ஆம் ஆண்டு அவர் குற்றவாளியாக காணப்பட்டதுடன், 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு முதல் இலினோய்ஸ் மாநிலத்திலுள்ள சிறையொன்றில் விக்டர் பௌட் அடைக்கப்பட்டிருந்தார்.
பிரிட்னி கிறைனர்
6 அடி 9 அங்குல உயரமான பிரிட்னி கிறைனர் (Brittney Griner,), 2016, 2020 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் கூடைப்பந்தாட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றவர்.
ஒலிம்பிக் போட்டி, அமெரிக்க தேசிய கல்லூரி விளையாட்டுச் சங்கத்தின் சம்பியன்ஷிப் போட்டிகள், சர்வதேச கூடைப்பந்தாட்டச் சம்மேளனத்தின் போட்டி, மகளிர் கூடைப்பந்தாட்டச் சங்கத்தின் போட்டி போன்ற அனைத்து முக்கிய போட்டிகளிலும் முதலிடம் பெற்ற 11 வீராங்கனைகளில் ஒருவர் பிரிட்னி கிறைனர்.
கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்யாவுக்கு அவர் சென்றபோது அவரின் பயணப் பையில், ஹாஷ் ஒயில் எனும் கஞ்சா எண்ணெய் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இது ரஷ்யாவில் தடைசெய்யப்பட்ட பொருளென்பதால் பிரிட்னி கிறைனர் ரஷ்ய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தான் குற்றவாளி என அவர் கடந்த ஜூலையில் ஒப்புக்கொண்டார். எனினும், சட்டங்களை மீறும் எண்ணம் தனக்கு இல்லை எனவும், அப்பொருள் தனது பயணப்பைக்குள் வந்தமை தற்செயலானது எனவும் அவர் கூறினார்.
ஒருபாலின சேர்க்கையாளரான பிரிட்னி கிறைனர், தனது சக கூடைப்பந்தாட்ட வீராங்கனையான குளோறி ஜோன்சனை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஐ.வி.பி. முறையில் குளோறி ஜோன்சன் இரட்டைக் குழந்தைகளை பிரசிவித்தார். 2016 ஆம் ஆண்டு குளோறியும் பிரிட்னியும் விவாகரத்து செய்தனர். குழந்தைகளுக்காக குளோறிக்கு நிதியுதவி வழங்குமாறு பிரிட்னிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2019 ஆம் ஆண்டு சார்ளி வட்சன் எனும் பெண்ணை பிரிட்னி கிறைனர் திருமணம் செய்துகொண்டார். 2019 ஆம் ஆண்டு சார்ளி வட்சன் தனது பெயரை சார்ளி அப்பெண் கிறைனர் என மாற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவினால் விடுவிக்கப்பட்ட விக்டர் பௌட் நேற்றிரவு ரஷ்யாவை சென்றடைந்தார்.
அதேவேளை, ரஷ்யாவினால் பிரிட்னி கிறைனர் விடுவிக்கப்பட்டுள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். பிரிட்னி கிறைனர் அமெரிக்கா நோக்கி வந்துகொண்டிருக்கிறார் எனவும் ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM