(என்.வீ.ஏ.)
இந்தியாவுக்கு எதிராக மிர்பூர் விளையாட்டரங்கில் புதன்கிழமை (06) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் மெஹிதி ஹசன் மிராஸ் குவித்த சதத்தின் உதவியுடன், பங்களாதேஷ் 5 ஓட்டங்களால் மிகவும் இறுக்கமான வெற்றியை ஈட்டியது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 - 0 என முன்னிலையில் இருக்கும் பங்களாதேஷ், தொடர் வெற்றியை உறுதிசெய்துகொண்டது.
இதே அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து பங்களாதேஷின் வெற்றியை உறுதி செய்திருந்த மெஹிதி ஹசன் மிராஸ், இரண்டாவது போட்டியில் ஆட்டமிழக்காத சதம் குவித்து மீண்டும் வெற்றிக்கு வித்திட்டார்;
பங்களாதேஷ் ஆரம்ப வீரர் அனாமுல் ஹக்கின் பிடியை ஸ்லிப் நிலையில் இருந்த ரோஹித் ஷர்மா எடுக்க முயற்சித்தபோது அவரது விரலில் காயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக துடுப்பாட்டத்தில் பின்வரிசையில் அவர் விளையாடினார்.
பின்னர் அவர் ஸகான் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு சென்றதாக பிந்திய தகவல்கள் தெரிவித்தன.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 271 ஓட்டங்களைக் குவித்தது.
19 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட பங்களாதேஷை மெஹிதி ஹசன் மிராஸ் குவித்த சதமும் மஹ்முதுல்லா பெற்ற அரைச் சதமும் பலமான நிலையில் இட்டன.
அவர்கள் இருவரும் 7ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 148 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முதலாவது சதத்தைப் பூர்த்தி செய்த மெஹிதி ஹசன் மிராஸ் 83 பந்துகளில் 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக சரியாக 100 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். மஹ்முதுல்லா 77 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து மிராஸ், நசும் அஹ்மத் (18 ஆ.இ.) ஆகிய இருவரும் பரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
இந்திய பந்துவீச்சில் வொஷிங்டன் சுந்தர் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் உம்ரன் மாலிக் 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 73 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
272 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 266 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
விராத் கோஹ்லி, ஷிக்கர் தவான், வொஷிங்டன் சுந்தர், கே. எல். ராகுல் ஆகிய நால்வரும் குறைந்த எண்ணிக்கைகளுக்கு ஆட்டமிழக்க இந்தியா ஒரு கட்டத்தில் 4 விக்கெட்களை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஆனால் ஷ்ரெயாஸ் ஐயர், அக்ஸார் பட்டேல் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்ததுடன் 6ஆவது விக்கெட்டில் 107 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையை ஊட்டடினர்.
ஆனால், இருவரும் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.
ஷ்ரெயாஸ் ஐயர் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 82 ஓட்டங்களையும் அக்சார் பட்டெல் 56 ஓட்டங்களையும் பெற்றனர்.
பின்வரிசையில் துடுப்பெடுத்தாடிய ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களைப் பெற்றார்.
பங்களாதேஷ் பந்துவீச்சில் 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷக்கிப் அல் ஹசன் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெஹிதி ஹசன் மிராஸ் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM