வட்டவான் இறால் பண்ணை புதிய வருடத்தில் புதுத்தெம்புடன் செயற்படும் - அமைச்சர் டக்ளஸ் உறுதி

Published By: Digital Desk 3

01 Dec, 2022 | 02:12 PM
image

கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்கள் அந்ததந்தப் பிரதேசங்களை சேர்ந்த மக்கள் நன்மையடையும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட்டவான் பிரதேசத்தில் அமைந்துள்ள இறால் பண்ணையின் செயற்பாடுகள்,  அந்தப் பிரதேசத்தினைச் சேர்ந்த மக்களுக்கு நன்மைகளை வழங்கும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மாளிகாவத்தையில் அமைந்தள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று (01) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணத்தில் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன்போது, வட்டவான் பகுதியில் பிரதேச மக்களுக்கான வாழ்வாதாரத்தினை வலுப்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இறால் பண்ணையின் முகாமைத்துவம் மற்றும் செயற்பாடுகள் வினைத்திறன் இன்றி இருப்பதாகவும், குறித்த பண்ணை அமைக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக செயற்பட்டு வருவதாகவும் தன்னுடைய ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார். 

குறித்த விடயம் தொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட்டவான் இறால் பண்ணையின் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கான குழு ஒன்றினை அமைத்துள்ளதுடன், குறித்த குழுவினால் சமர்ப்பிக்கப்படுகின்ற அறிக்கையின் அடிப்படையில், எதிர்வரும் தை மாதத்தில் இருந்து பண்ணையின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு  தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து இரத்நாயக்கா, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த, மற்றும் நக்டா நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர் நாயகம் உட்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்