ரொபட் அன்டனி
மாகாண சபைகளை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படாது
பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கி ஒத்திசைவு பட்டியலை நீக்கவேண்டும்
பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துவதில் தவறில்லை
மாகாண சபைகளை கலைக்கின்ற அதிகாரத்தை புதிய அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்க மாட்டோம். மேலும் ஒத்திசைவு பட்டியலை நீக்குவதுடன் கலைக்கும் அதிகாரத்தையும் திருத்துவோம். இந்தியாவைப் போன்று நினைத்தவுடன் ஜனாதிபதி மாநிலத்தை கலைக்கும் அதிகாரம் இருக்காது. அதனை நாங்கள் வழங்க மாட்டோம். அவற்றை மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் செய்யலாம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
வடக்கு மக்கள் தங்கள் வீரர்களை நினைவுகூரவேண்டுமானால் ஏனைய இனங்களை காயப்படுத்தாமல் செய்யலாம். பிரபாகரனை யாராவது நினைவுகூரவேண்டுமானால் பிரபாகரன் காரணமாக பாதிக்கப்பட்டு அநாதையாகியவர்கள் காயப்படாத வகையில் நினைவுகூரப்படவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
வீரகேசரி இணையதளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே டிலான் பெரேரா இந்த விடயங்களை குறிப்பிட்டார். செவ்வியின் முழு விபரம் வருமாறு
Q:அரசியல் சூழலை நீங்களே பர பரப் பாக்கிவிடுகின்றீர்கள் போன்று தெரிகின் றதே? அப்படி என்னதான் செய்துகொண்டிருக் கின்றீர்கள்?
தற்போது கூட பிரதமர் தலைமையிலான அரசியலமைப்பை தயாரிக்கும் பிரதான வழி நடத்தல் குழுவின் அமர்வில் கலந்துகொண்டுவிட்டு வருகின்றேன். இந்நாட்களில் அரசியல் நிகழ்ச்சி நிரலில் முதலாவது விடயமாக அரசியலமைப்பை தயாரிக்கும் விடயத்தில் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து எவ்வாறு செயற்பட முடியும் என ஆராய்கின்றோம். அதற்கு மேலதிகமாக மத்திய வங்கி விவகாரம் குறித்தும் ஆராய்ந்துவருகின்றோம். இவ்வாறு செயற்பட்டுவருகின்றோம்.
Q:உங்களிடம் இந்தக் கேள்வியை கேட்பது பொருத்தமாக இருக்கும். அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா?
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடைபெறும். அதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவதாக ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்கவேண்டும் எனின் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டும். சர்வஜன வாக்கெடுப்புக்கு சென்றால் ஜனாதிபதி முறைமையை மாற்ற விரும்புகின்றவர்களும் வேறு விடயங்களுக்கே வாக்களிப்பர். இதற்கு உலக உதாரணங்களை நாங்கள் பார்க்க முடியும். சர்வஜன வாக்கெடுப்புக்கு சென்றால் நிச்சயம் விடயம் குழம்பிவிடும்.
இரண்டாவதாக தற்போதைய ஜனாதிபதி வெற்றிபெறும்போது நான் மறுபக்கத்தில் இருந்தேன். ஆனால் அவரின் தேர்தல் வாக்குறுதியில் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத வகையில் ஜனாதிபதி முறைமையில் மாற்றம் செய்வதாகவே கூறப்பட்டிருந்தது. அது தற்போது நடைபெற்றுள்ளது. எனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மட்டும் அரசியலமைப்பு திருத்தத்தை செய்வோம்.
மூன்றாவது விடயமாக கடந்த ஜனாதிபதித்தேர்தலில் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆணை வழங்கினர். ஆனால் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி முறைமையை மாற்றியமைப்பதாக கூறிய ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் முழுமையாக வாக்களிக்கவில்லை. அக்கட்சிக்கு 113 ஆசனங்கள் கிடைக்கவில்லை. அதனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மாற்றமடைய முடியாது. எனவே அடுத்த ஜனாதிபதித்தேர்தல் நடைபெறும்.
Q: அப்படியாயின் 2020 இல் சுதந் திரக் கட்சியின் வேட்பாளர் யார்?
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதியும் எமது கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவே இடம்பெறவேண்டும்.
Q: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் போட்டியிட மாட்டேன் என்று குறிப்பிட் டுள்ளாரே?
ஜனாதிபதி அவ்வாறு கூறியுள்ளார். ஆனால் அவர் சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் நாங்கள் கூறுவதைக் கேட்கவேண்டும். அவர் கட்சியின் தலைவராக இருந்துகொண்டு நாங்கள் கூறுவதை கேட்காமல் இருக்க முடியாது. தனது தனிவிருப்பத்துக்கு செயற்பட முடியாது. அவர் போட்டியிடமாட்டேன் என திடமாக கூறினால் மற்றுமொரு வேட்பாளர் குறித்து சிந்திக்கவேண்டியேற்படும்.
Q: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக்க கடும் முயற் சியை மேற்கொள்கின்றீர்களா?
நிச்சயமாக கடும் முயற்சியில் இருக்கின்றோம். அவர் கட்சியின் தலைவராக வந்த பிறகு தன்னுடைய சொந்த விருப்பங்களுக்கேற்ப செயற்பட முடியாது. கட்சி கூறுவதை செய்ய வேண்டும். கட்சியின் மத்தியக்குழு கூறுவதை அவர் கேட்டாக வேண்டும்.
Q: ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன முடியாது என்று திடமாக கூறிவிட்டால் வேறு ஒருவரை தேட வேண்டும் என நீங்கள் கூறினீர்கள். அவ்வாறெனின் முன்னாள் பாது காப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை சு.க.வின் வேட்பாளராக கொண்டு வரும் முயற் சியுள்ளதாக கூறப்படுவது உண்மையா?
சுதந்திரக் கட்சியின் ஒருசிலர் மற்றும் விமல் வீரவன்ச, கம்பன்பில போன்றோர் கோத்தபாய ராஜபக் ஷவை அவ்வாறு கொண்டு வர முயற்சிக்கின்றனர். ஆனால் நாங்கள் அதனை கடுமையாக எதிர்க்கிறோம். சுதந்திரக் கட்சி அதனை கடுமையாக எதிர்க்கின்றது. கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதி வேட்பாளராகினால் அவரால் ஒரு நாளும் வெற்றி பெற முடியாது என சுதந்திரக் கட்சிக்கு நன்றாக தெரியும். அவரால் தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்குகளை பெற முடியாது. தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்குகளை பெற முடியாத வேட்பாளர் தோல்வியடைவார். கோத்தபாய தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்தில் சேவையாற்ற முடியும். சிங்கள கத்தோலிக்க மக்களும் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். எனவே தமிழ், முஸ்லிம் வாக்குகளை பெற முடியும் ஒருவரையே நாம் வேட்பாளராக நியமிக்க வேண்டும். மஹிந்த ராஜபக் ஷவினாலேயே தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற முடியாதுவிடின் கோத்தபாயவினால் முடியுமா ?
Q: தற்போது புதிதாக உருவாக்கப் பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் கோத்தபாய போட்டியிட்டால்?
வடக்கு, தெற்கு ஆகிய இரண்டு பகுதிகளிலும் இனவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கில் இனவாதத்தை பரப்பியவர்களும் தெற்கில் இனவாதத்தை பரப்பியவர்களும் தோல்வியடைந்தனர். இனவாதம் மற்றும் மத வாதத்தை பரப்பும் தலைவர்களினால் வெற்றி பெற முடியாது. அதனால் இனவாதிகளுக்குப் பயந்து சில நல்ல திட்டங்களை நாங்கள் பிற்போட்டு விடக் கூடாது. ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி இடம்பெற்றாலும் தமிழ், முஸ்லிம் வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெறுவார்.
Q: ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் எவ்வாறு சமாளிப்பீர்கள்?
மஹிந்த ராஜபக் ஷ போன்ற ஒருவரை தோற்கடித்த மைத்திரிபால சிறிசேனவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை தோற்கடிப்பது ஒரு விடயம் அல்ல.
Q: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கவலையுடனேயே தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாக கூறப்படுகின்றதே?
நாங்கள் அரசாங்கத்திற்குள் கவலையுடன் இருக்கின்றோம் என்று கூற முடியாது. இது சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் அல்ல. இது தேசிய அரசாங்கம். தேசிய அரசாங்கத்தில் நாம் தனித்து அரசாங்கம் அமைப்பது போல் செயற்பட முடியாது. ஆனால் அதிகாரப் பகிர்வுக்கும் தேர்தல் முறை மாற்றத்திற்கும் தற்போது இறுதி சந்தர்ப்பம் கிடத்துள்ளது. அந்த இறுதி பஸ்ஸில் ஏறாவிடின் பயணத்தை தொடர முடியாது.
Q: இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்க சுதந்திரக் கட்சிக்கு தார்மீக உரிமை இருக்கின்றதா?
சுதந்திரக் கட்சிக்குத்தான் அதிகமான தார்மீக உரிமை உள்ளது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனித்து ஆட்சியமைக்க ஆணை வழங்குமாறு மக்களிடம் கேட்டோம். அந்த ஆணை கிடைக்கவில்லை. அதேநேரம் மக்கள் ஐ.தே.க. தனித்து ஆட்சியமைக்கவும் ஆணை வழங்கவில்லை. அதன்படி மக்களின் கோரிக்கையின் பிரகாரம் ஐ.தே.க. தனித்து ஆட்சியமைப்பதை நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம். நாம் அரசாங்கத்தில் அமராவிடின் ஐ.தே.க. கூட்டமைப்பின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைத்திருக்கும். அப்படியாயின் மக்களின் ஆணையை நிறைவேற்ற முடியாது போய் இருக்கும்.
Q: அதற்காகத்தான் இணைந்து கொண்டீர்களா?
அதுவும் ஒரு காரணம். இரண்டாவதாக நீண்டகாலமாக தீர்க்கமுடியாதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Q:ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பனிப்போர் நிலவுவதாக கூறப்படுகின்றதே?
அதனை ஏன் பனிப்போர் என்று கூறுகின்றனர் என்று எனக்குப் புரியவில்லை.
Q: நேரடியான போர் என்று கூற விழைகிறீர்களா ?
இல்லை. ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே கட்சியில் இருந்தபோது இந்த நாட்டில் பிரச்சினை இருக்கவில்லையா? பாரிய பிரச்சினைகள் காணப்பட்டன. உதாரணமாக கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே கட்சியில் இருந்தனர். ஆனால் அந்த அரசாங்கத்தில் எவ்வளவு பிரச்சினைகள் காணப்பட்டன. விமல்வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் அந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறியிருந்தனர். ஒரே கட்சியில் ஜனாதிபதியும் பிரதமரும் இருந்தபோதே அவ்வளவு பிரச்சினை என்றால் இரண்டு கட்சிகளில் ஜனாதிபதியும் பிரதமரும் இருக்கும்போது எவ்வளவு சிக்கல் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இரண்டு கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது பிரச்சினைகள் வரும். நாம் அதனை சமாளித்துப் போகின்றோம். உதாரணமாக கடந்த வருடம் வரவு–செலவுத் திட்டம் மோசமாக இருந்தது. இம்முறை நன்றாக இருக்கின்றது.
Q: மஹிந்த அணியின் முக்கியஸ்தர் களினால் புதிய கட்சி ஒன்று ஆரம்பிக் கப்பட்டுள்ளதே ?
புதிய கட்சி குறித்து நான் அதிகம் பேசவில்லை. அது ஒரு கட்சியே அல்ல. கடந்த அரசாங்கத்தில் அந்த அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உட்படுத்தியவர்களும் அந்த அரசாங்கம் கவிழ்க்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர்களும் இணைந்து உருவாக்கிக் கொண்டுள்ள ஒரு அம்பலமே இதுவாகும். சுதந்திரக் கட்சியின் பத்து வீதமானவர்களே இந்த புதிய கட்சியை கோருகின்றனர். மறுபுறம் இனவாதத்தை தூண்டுகின்றவர்களே இதனை ஆதரிக்கின்றனர்.
Q: புதிய அரசியலமைப்பு வரைபு விவகாரம் எவ்வாறு உள்ளது?
பிரதமர் என்ற ரீதியில் அவரின் ஒரு சில செயற்பாடுகள் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிகவும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருகிறார். அதனை கட்டாயமாக கூறியாகவேண்டும். அனைவரையும் ஒன்றிணைத்து இந்த விடயத்தை அவர் முன்னெடுத்து வருகிறார். அந்த கௌரவத்தை நாங்கள் அவருக்கு கொடுக்க வேண்டும். அடுத்ததாக சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறது. பாரிய அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் கூட்டமைப்பு பங்களிப்பை வழங்குகிறது. விசேடமாக சுமந்திரன் எம்.பி. அர்ப் பணிப்புடன் செயற்பட்டு வருகிறார். இம்முறை அரசியலமைப்பில் நாம் அதிக விடயங்களை அறுவடை செய்யலாம் என நான் நினைக்கிறேன்.
Q:சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல் லக்கூடாது என்பதை திடமாக ஏன் கூறுகின் றீர்கள்?
நிச்சயமாக கூறுகின்றேன். சர்வஜன வாக்கெடுப்பிற்கு சென்றால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையூடாக மட்டும் நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய அதிகாரப் பகிர்வு கிடைக்காமல் போய்விடும்.
Q:நியாயமான தீர்வுத்திட்டம் தமிழ் பேசும் மக்களுக்கு கிடைக்குமா?
தமிழ் மக்களை பொறுத்தவரையில் அதிகாரப் பகிர்வே மிக முக்கியமானதாகும். அதில் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். ஒத்திசைவு பட்டியலும் நீக்கப்பட வேண்டும். இதனூடாக தமிழ் மக்களுக்கு அதிகாரம் கிடைக்கின்றது. இதனை மூன்றிலிரண்டு பெரும்பான்மையினூடாக செய்யலாம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை எதிர்க்கின்றது என்பது புரியவில்லை. காரணம் அந்த முறைமை இருந்தால் கூட்டமைப்பினர் தேர்தல் காலத்தில் தமது செல்வாக்கினை செலுத்தலாம்.
Q: நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் மாகாண சபையை கலைத்துவிட முடியுமே?
இல்லை. இல்லை. அந்த அதிகாரத்தை புதிய அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்க மாட்டோம். ஒத்திசைவு பட்டியலை நீக்குவதுடன் நீங்கள் குறிப்பிட்ட மேற்குறித்த அதிகாரத்தையும் திருத்துவோம். இந்தியாவைப் போன்று நினைத்தவுடன் ஜனாதிபதி மாநிலத்தை கலைக்கும் அதிகாரம் இருக்காது. அதனை நாங்கள் வழங்க மாட்டோம். அவற்றை மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் செய்யலாம்.
Q: ஜனாதிபதி பதவியில் இருப்பவர் மாகாண சபைகளை கலைக்கும் அதிகாரத்தை எளிதாக கைவிடமாட்டார். அதனை கைவிடுவது ஆபத்தான விடயம் என்பதை அவர் சுட்டிக்காட்டுவார் எனவும் கூறப்படுகின்றதே?
ஆனால் தமிழ் மக்களுக்கு போதுமான அதிகாரத்தை வழங்காவிடின் அது மத்திய அரசாங்கத்திற்கு பாரிய ஆபத்தாக அமைந்துவிடுமே? எனவே அந்த அதிகாரத்தை எடுத்து விட வேண்டும். அதாவது இந்தியா தனது மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களையும் தாண்டி நாங்கள் அதிகாரத்தை தமிழ் பேசும் மக்களுக்கு கொடுக்க வேண்டும். அத்துடன் கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களை முழுமையாக மாகாண சபைகளுக்கே கொடுத்துவிட வேண்டும். அதில் மத்திய அரசாங்கம் கைவைக்கக்கூடாது.
Q: கடல்வளம்?
கடல் மத்திய அரசாங்கத்தின் கீழேயே இருக்க வேண்டும். ஆனால் மீன்பிடி விடயங்களை மாகாணங்களுக்கு கொடுக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு விடயம் காரணமாக கடல் மத்திய அரசாங்கத்திற்கு கீழேயே இருக்க வேண்டும்.
Q: நீங்கள் அடிக்கடி வடக்கு முதல்வரை விமர்சிக்கின்றீர்களே? 2013 ஆம் ஆண்டு நீங்கள் விக்கினேஸ்வரனை வரவேற்றமை எமக்கு ஞாபகம் இருக்கின்றதே?
விக்கினேஸ்வரனுக்கு தற்போது என்ன நடந்துள்ளது? எமக்கு தெரிந்த நீதியரசர் விக்கினேஸ்வரன் அல்ல இவர். இவர் ஒரே தடவையாக அடிப்படைவாதியாக மாறிவிட்டார். நான் பார்த்த மத்தயஸ்த நிலைப்பாடு கொண்ட விக்கினேஸ்வரனை இன்று என்னால் காண முடியவில்லை. சம்பந்தனுக்குப் பின்னர் விக்கினேஸ்வரன் கூட்டமைப்பின் தலைவராக வருவார் என நான் கருதினேன். ஆனால் இன்றைய நிலைமை பயங்கரமாக இருக்கின்றது. சம்பந்தன் நீண்டகாலம் கூட்டமைப்பின் தலைவாராக இருக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம். சம்பந்தன் இருக்கும்போது தான் தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கான சிறந்த சந்தர்ப்பம் கிடைக்கும் என நம்புகின்றோம்.
விக்கினேஸ்வரன் பாரிய அடிப்படைவாத இனவாதப் போக்கில் பயணிக்கின்றார். அவர் இறுதியாக விடுத்த கூற்று நல்லது. ஆனால் இதற்கு முன்னர் அவர் தெரிவித்த சில கூற்றுக்கள் தெற்கின் இனவாதிகளுக்கு தீனிபோடுவதாக அமைந்தன. என்னைப் பொறுத்தவரை விக்கினேஸ்வரன் இனவாதியாக முடியாது. ஆனால் அவருக்கு தற்போது தலைவர் பதவிக்கான கனவு வந்துவிட்டது போல் தெரிகின்றது. இனவாதத்துக்கு தற்போது இடமில்லை என்பது அவருக்கு புரியவில்லை. தற்போது சுமந்திரன் இரண்டு இனங்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த பாரிய நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றார். ஆனால் அதனை வடக்கு முதல்வர் நன்றாக செய்திருக்கலாம். அவர் பதுளை மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தபோது எனக்குத் தெரியும்.
Q: விக்கினேஸ்வரன் நீதிபதியாக இருந் தபோது நீங்கள் வழக்கறிஞராக செயற்பட்டுள் ளீர்களா?
ஆம். நான் சில தடவைகள் வழக்காடியுள்ளேன்.
Q: அந்த வழக்குகளுக்கு என்ன நடந்தது?
அவை இணக்கப்பாட்டுடன் முடிவடைந்தன.
Q: பஷில் ராஜபக்ஷவுடன் இந்நாட்களில் ஏன் சண்டை பிடித்துக்கொண்டிருக்கின்றீர்கள்?
அவருடன் எனக்கு அரசியல் பிரச்சினையே காணப்படுகின்றது. அவர் வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் எமது கட்சிக்கு எதிராக செயற்பட்டுள்ளார். குற்றச்சாட்டுக்களில் விளக்கமறியலில் வைக்கப்பட்டதும் அவருக்கு வருத்தம் வந்துவிடும். பிணையில் விடுவிக்கப்பட்டதும் அவர் நாடு முழுவதும் சென்று தேர்தல் பிரசாரம் செய்வார். பஷில் ராஜபக் ஷ என்ன சத்தம் போட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பதே அவர்களின் நோக்கம். ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து இதனை முன்னெடுக்கின்றனர்.
Q:அந்த ஐக்கிய தேசிய கட்சியுடன் நீங்கள் இணைந்து ஆட்சியமைத்துள்ளீர்களே ?
நாங்கள் ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இணைந்து செயற்படுகின்றோம். நாட்டின் தேசிய தேவைக்காக இவ்வாறு செயற்படுகின்றோம்.
Q:ஜே.வி.பி. யினர் கார்த்திகை தினத்தை அனுஷ்டிக்கின்றனர். ஆனால் வடக்கில் இறந்தவர்களை நினைவுகூரும் போது விமர்சிக்கப்படுகின்றதே?
அதில் எந்தத் தவறும் இல்லை. உதய கம்மன்பிலவும் அதனை விமர்சித்திருந்தார். ஒரு விடயத்தை புரிந்துகொள்ளவேண்டும். எனது வீரன் உங்கள் வீரன் அல்ல. உங்கள் வீரரை நீங்கள் நிளைவு கூரலாம். ஆனால் ஏனைய இனங்களின் மனதை புண்படுத்தாமல் நினைவுகூரவேண்டும். வடக்கு மக்கள் தங்கள் வீரர்களை நினைவுகூரவேண்டுமானால் ஏனைய இனங்களை காயப்படுத்தாமல் செய்யலாம். பிரபாகரனை யாராவது நினைவுகூரவேண்டுமானால் பிரபாகரன் காரணமாக பாதிக்கப்பட்ட அனாதையாகியவர்கள் காயப்படாத வகையில் நினைவுகூரப்படவேண்டும்.
Q:விஜேவீர அவ்வாறுதான் நினைவுகூரப்படுகின்றாரா?
அவ்வாறு தான் நினைவுகூரப்படுகின்றார்.
Q:இம்முறை வடக்கில் நடைபெற்ற நினைவுகூரல் பற்றி?
அதில் எந்தத் தவறையும் நான் காணவில்லை. விளக்கு பற்ற வைப்பதன் மூலம் என்ன தவறு நடக்கும்?
Q:அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஹெல உறுமயவும் அதனை எதிர்த்துள்ளதே?
ஹெல உறுமய அதற்கு எதிர்க்காவிடின் தான் அதிசயம்.
Q:புலிகளை தோற்கடித்து 7 வருடங்கள் கடந்துவிட்டன. நீங்கள் எதிர்பார்த்த பெறுபேறு கிடைத்ததா?
கடந்த ஏழு வருடங்களில் முதல் மூன்று வருடங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யப்படவில்லை என்று காட்டியிருக்கலாம். அதனை செய்யவில்லை. அதனை கடந்த ஆட்சியாளர்கள் செய்யாமல் தமிழ் மக்களை காயமடைய செய்தனர். பின்னர் முஸ்லிம் மக்களையும் கோபப்படுத்திக்கொண்டனர். இறுதியில் முழு உலகத்தையும் பகைத்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி வீட்டுக்கு சென்றார்.
Q:யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் நீங்கள் மகிழ்ச்சியடைவில்லையா?
யுத்தம் இருந்த காலத்தைவிட நான் கவலையடைந்த காலமாக யுத்தத்துக்குப் பின்னரான ஐந்து வருடங்களை குறிப்பிடலாம். எனினும் 2015 ஆம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர் நிலைமை மாறியது. இன்று எமது ஜனாதிபதி தமிழ் மக்களின் இதயங்களை வென்றுள்ளார். ஒரு சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்காக அரசாங்கம் செய்வதாகவே உணர்கின்றனர். எனவே இறுதி இரண்டு வருடங்களும் சிறந்ததாக அமைந்துள்ளன.
Q:ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தில் நீங்கள் மஹிந்தவை எதிர்க்கவேயில்லையே?
நான் எனது கட்சியின் தலைவரை ஏச மாட்டேன். அது எனது கொள்கையாகும். சில இடங்களில் மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்தேன். அதிகாரங்களை பகிரும் அலகுகள் மாவட்டமாக அமையவேண்டும் என்று கடந்த அரசாங்கம் கூறியபோது நான் அதனை எதிர்த்தேன். ஆனால் நான் எப்போதும் எனது கட்சித் தலைவருடன் இருப்பேன். அது எனது கொள்கையாகும்.
Q: 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மைத்திரிபால சிறிசேன வெளியே வந்தபோது நீங்கள் உங்கள் மனச்சாட்சியின் படி யாரை ஆதரித்தீர்கள்?
ஸ்ரீலங்கா கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் மைத்திரிபால சிறிசேன வெளியே வந்தபோது கவலையடைந்தேன். அவர் என்னை தன்னுடன் வருமாறு அழைக்கவில்லை. அழைத்திருந்தாலும் போயிருக்கமாட்டேன். அப்போது மஹிந்த வெற்றிபெறவேண்டும் என்று கருதினேன். நாங்கள் கூறியதை கேட்காததால் அவர் தோல்வியடைந்தார்.
Q: நீங்கள் ஏன் தற்போதைய பிரதம நீதியரசர் உள்ளக பொறிமுறையின் தலைமை நீதிபதியாக செயற்பட வேண்டும் என்று கூறுகின்றீர்கள்?
அதனூடாக அனைத்து தரப்பினர் மத்தியிலும் நம்பிக்கை வரும். அவர் அதற்கு தகுதியானவர். நாட்டில் நாங்கள் அனைவரும் இலங்கையர் என்று உணர வழி வகுக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM